பாளையத்திற்குப் புறம்பே…

தியானம்: 2026 ஜூலை 30 வியாழன் | வேத வாசிப்பு: எபிரெயர் 13:8-16

YouTube video

ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளையத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம்; (எபிரெயர் 13:13).

ஏழ்மை, வேற்று மனப்பான்மை, அருவருக்கத்தக்க வியாதிகள், எழுந்திருக்க முடியாதபடி பாவத்துக்குள் விழுந்து விடுகின்ற நிலைமைகள், கெட்ட பழக்கங்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட எத்தனை மக்கள் சமுதாயத்திலும், சிறைச்சாலைகளிலும் ஒதுக்கப்பட்டு, புறம்பாக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களைக் குறித்து நமது மனநிலைமை என்ன? சுயநலத்தோடு வாழவா நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்?

அன்று குஷ்டரோகிகள் சுத்தமடையும்வரை சமுதாயத்துக்குள் வராமல் தடுக்கப்பட்டனர். அன்றைய மதத்தலைவர்களோ, வியாதிப்பட்டவர்களின் உள்ளம் உடையும்வண்ணம் அவர்களை ஒதுக்கியே வைத்தனர். ஆனால் அப்படிப்பட்டவர்களை இயேசு தொட்டார். தீட்டான ஸ்திரீ தம் வஸ்திரத்தைத் தொட இடமளித்தார். அதட்டப்பட்ட கண்தெரியாத பிச்சைக்காரனை இயேசு தம்மிடம் அழைத்து, பார்வை கொடுத்தார். விபசாரத்தில் பிடிபட்டவளையும் அப்பாவத்திலிருந்து விடுவித்து புதுவாழ்வு கொடுத்தார். ஆனால், சமுதாயத்தில் வாழக்கூடாது என்று தள்ளப்பட்டவர்களுக்கு வாழ்வு கொடுத்த இயேசுவோ பாளையத்திற்குப் புறம்பாக்கப்பட்டார். பாளையத்திற்கு புறம்பே என்பது அசுத்தத்திற்கு சமம். ஆண்டவர் சிலுவையில் அறையப்பட்ட கல்வாரி மலையும் எருசலேமின் எல்லையில் ஒரு ஒதுக்குப் புறத்திலேதான் இருந்தது.

பாளையத்திற்குப் புறம்பாக்கப்பட்டவர்களைத் தேடிச்சென்றவர் இயேசு. இறுதியில் தாமே புறம்பாக்கப்பட்டு நிந்தைகளை அனுபவித்தார், அந்த இயேசு எங்கே? நாம் எங்கே? நான் இயேசுவின் பிள்ளையானால் அவர் இல்லாத இடத்தில் எனக்கு என்ன இருக்கிறது? பாளையத்தினுள் பாடிக் களிக்க அல்ல; பாளையத்திற்குப் புறம்பே ஆண்டவரோடே பாடுபடப் புறப்பட வேண்டிய அவசியத்தை நாம் மறக்கலாமா? இன்று நாம் ஒன்றைத் தெரிந்தெடுக்க வேண்டிய கட்டாயத்துக்குள் இருக்கிறோம். பாளையத்திற்கு உள்ளேயா, புறம்பேயா? சமுதாய மேன்மையா, பாவிகளுடன் பாடுபடும் கிறிஸ்துவா? லெந்துநாட்களில் மட்டும் கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூர்ந்து பின்பு அதைக்குறித்த சிந்தனைகளற்று காணப்படுகிறோமா? நாம் முதலில் கிறிஸ்துவுடன் பாடனுபவிக்க நமக்குத் தடையாக இருப்பவற்றை இனங்கண்டு அழித்துவிடுவோம். சுய கௌரவம், மதிப்பு இவற்றைத் தள்ளிவிட்டு, பாளையத்திற்கு புறம்பே பாடுபடும் மக்களிடம் செல்லப் புறப்படுவோமாக.

அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார் (2தீமோத்.2:12).

ஜெபம்: எங்களை தேடிவந்த இயேசுவே, பாளையத்திற்கு புறம்பே பாடுபடும் மக்களிடம் நாங்கள் புறப்பட்டு செல்லவும், அதற்கு தடையாயிருக்கிற காரியங்களைத் தள்ளிவிடவும் எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.