ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்!

தியானம்: 2024 ஜூலை 22 திங்கள் | வேத வாசிப்பு: எபேசியர் 1:1-23

YouTube video

.. அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார் (எபேசியர் 1:3).

கிறிஸ்தவ திருமணங்களில் புதிய தம்பதிகளை சிலர் “வாழ்த்துகிறோம்” என்று கூறுவார்கள். சிலரோ “ஆசீர்வதிக்கிறோம்” என்று சொல்லுவார்கள். பழைய ஏற்பாட்டு காலத்தில், பெற்றோர் பிள்ளைகளை ஆசீர்வதிப்பதையே காண்கிறோம். ஈசாக்குக்கூட தனது குமாரன் ஏசாவை, தான் மரிக்கும் முன்பதாக ஆசீர்வதிப்பதை நாம் வேதாகமத்திலே காணலாம். ஆசீர்வாதம் நம் அனைவருக்கும் மகிழ்ச்சி தருகின்ற ஒன்று. ஆலயத்தில் போதகர் ஆசீர்வாதம் கூறாவிட்டால், ஆராதனையே முடியாது.

பவுல், எபேசுவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற பரிசுத்தவான்களுக்கு நிருபத்தை எழுதியபோது, அவர் இந்த உலகத்திற்குரிய ஆசீர்வாதங்களைக் குறிப்பிட்டு எழுதவில்லை. மாறாக, “உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்கள்” என்று குறிப்பிடுவதைக் காண்கிறோம். இந்த ஆசீர்வாதம்தான் என்ன?

தமக்கு முன்பாக நாம் அன்பிலே பரிசுத்தமுள்ளவர்களும், குற்றமற்றவர்களுமாய் இருக்கும்படி உலகத்தோற்றத்துக்கு முன்னமே கிறிஸ்துவுக்குள் அவர் நம்மைத் தெரிந்துகொண்டிருக்கிறார். இயேசுகிறிஸ்துவுக்குள் நம்மை தமக்கு சுவிகாரப் புத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார். அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது. அதுமாத்திரமல்ல, அவருடைய கிருபையை சகல ஞானத்தோடும், புத்தியோடும் எங்களிடத்தில் பெருகப்பண்ணினார். கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரராகும்படிக்கு நாம் தெரிந்துகொள்ளப்பட்டோம். பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரை போடப்பட்டோம். இவைகளெல்லாமே தேவன் தந்த உன்னதத்தின் ஆசீர்வாதங்கள். இவைகள் நமது தகுதிக்காகக் கொடுக்கப்படவில்லை. அத்தனையும் அவரது கிருபையால் நமக்கு அருளப்பட்டவைகள்!

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம். பரலோகத்தில் அவர் கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களையும் நமக்குத் தந்துள்ளார். இந்த உன்னதத்தின் ஆசீர்வாதத்தைக் குறித்து நாம் அனுதின வாழ்வில் சிந்திப்பதுண்டா? இல்லாவிட்டால் இன்னமும் உலக ஆசீர்வாதங்களுக்காக தேடித்தேடி அலைகிறவர்களாக இருக்கிறோமா? அழிந்துபோகும் அநித்தியமான காரியங்களை ஒதுக்கிவிட்டு அழியாத நிலையான காரியங்களை நோக்கிப்பார்ப்போம். கிறிஸ்துவுக்குள்ளான ஆசீர்வாதங்களையே சுதந்தரிப்போம்.

ஜெபம்: அன்பின் தேவனே, தகுதியில்லாத எங்களைத் தகுதிப்படுத்தி, உன்னதங்களின் அழிவில்லாத ஆசீர்வாதங்களை எங்களுக்குத் தந்த கிறிஸ்துவின் அன்பை எண்ணி, உம்மைத் துதிக்கிறோம். ஆமென்.