உன் தெரிந்தெடுப்பு என்ன?

தியானம்: 2026 ஜுன் 30 செவ்வாய் | வேத வாசிப்பு: எபிரெயர் 11:23-30

YouTube video

அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப் பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு …. (எபி. 11:25).

நமக்கு மேன்மையும் புகழ்ச்சியும் தரக்கூடிய என்னவெல்லாம் நம்மிடம் இருக்கின்றன என்பதை சற்று சிந்தித்துப் பார்ப்போமாக. அவை மெய்யாகவே மேன்மையானவைதானா? எபிரெயக் குழந்தைகள் யாவும் கொல்லப்பட்டபோது, மோசே மாத்திரம் அரமனையில் வளர்ந்தாரென்றால் அவரைப் பாக்கியவான் என்றுதான் சொல்லவேண்டும். அந்த அரமனைவாசம் மோசேக்கு நல்ல சொகுசையும் பெருமையையும் கொடுத்திருக்கும். ஒரு அடிமையின் மகனாகப் பிறந்தாலும், கடவுள் தன்னைத் தப்புவித்து இந்த வாழ்வைத்தந்தார் என்று எண்ணி நிம்மதியாக வாழவும் இடம் இருந்தது. அப்படியே கடைசிவரையும் மோசே வாழ்ந்திருக்கலாம். ஆனால், மோசேயோ செல்வமும் சுகமும் மாறிப்போகும் என்பதை உணர்ந்தார். ஆடம்பரமும் உயரிய வாழ்வும் இலகுவில் மனிதனை ஏமாற்றும் என்பதை அறிந்தார். தேவனுடைய ராஜ்யத்தின் நித்திய சந்தோஷத்திலிருந்து இவை தம்மைப் பிரித்துப்போடும் என்று விழித்துக்கொண்டார். எகிப்தின் சந்தோஷத்தைப் பார்க்கிலும், தேவன் தெரிந்துகொண்ட பிள்ளைகளுடன் துன்பத்தை அநுபவிப்பது மேல் என்று தெரிந்தெடுத்தார். அதனால் உண்டாகும் எந்த நிந்தையையும் ஏற்றுக்கொள்ளத் தயாரானார்.

ஆண்டவராகிய கிறிஸ்துவோ, தமது சொந்த மேன்மைகளையே துச்சமாக எண்ணி, பாவிகளாகிய நமக்காகப் பாடு அனுவிப்பதையே தெரிந்துகொண்டார். நிந்தைகளை அனுபவித்து நமது நிந்தைகளைப் போக்க வந்தார்.

தேவபிள்ளையே, இன்று நமது தெரிந்தெடுப்பு என்ன? என்னுடையது, நான் சம்பாதித்தது என்று பெருமை பாராட்டுகிறோமே, இவை எவ்வளவு காலம் நிலைத்திருக்கப்போகிறது? ஒரு கணம் நம்மையும் நமது சூழலையும், நாம் சுகம் அனுபவிக்கும் வாழ்வையும் விட்டு, கண்களை ஏறிட்டு வெளியே நோக்கிப் பார்ப்போம். எத்தனையோ பிள்ளைகள் பாடனுபவிக்கிறார்கள். எத்தனையோபேர் ஒரு வேளை உணவுக்குப் பாடுபடுகிறார்கள். எத்தனை ஆயிரம்பேர் துன்பம் என்னும் வலையில் சிக்கித் தவிக்கிறார்கள். அவர் களுக்கு ஆறுதல் இல்லை. விடுதலை இல்லை. மோசே தன் ஜனத்தோடு பாடு அனுபவிப்பதைத் தெரிந்துகொண்டார். ஆண்டவரோ ஒரு மனிதனும் கெட்டுப் போகக் கூடாதென்று தம்மையே கொடுத்தார். தேவைகள் உள்ளவர்களைத் தேடிச் சென்றார். அதன்மூலம் விடுதலையும் ஆறுதலும் பெற்றவர்கள்தான் எத்தனைபேர்! அப்படியிருக்க இயேசுவின் பிள்ளைகள் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? இதோ, ஜீவனையும் நன்மையையும் மரணத்தையும் தீமையையும் இன்று உனக்குமுன்னே வைத்தேன் (உபா.30:15).

ஜெபம்: நல்ல ஆண்டவரே, இன்னமும் சுயபெருமைகளை பேசிக்கொண்டிராமல், துக்க சாகரத்தில் மூழ்கிக்கொண்டிருக்கும் மக்களை உம்மண்டை வழிநடத்தும் பணிக்கு எங்களை அர்ப்பணிக்கிறோம். ஆமென்.