தாகம்!
அதிகாலை வேளையில்… (ஜூலை – ஆகஸ்டு 2026)
Dr.W.வாரன் வியர்ஸ்பி
வேதபகுதி: சங்கீதம் 42; யோவான் 4:1-15
என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்? (சங்கீதம் 42:2).
ஒரு மனிதன் உயிர்வாழ அவசியமானவற்றை சங்கீதம் 42 இன் முதல் இரு வசனங்கள் குறிப்பிடுகின்றன. 1. காற்று 2. தண்ணீர் 3. உணவு; இவைகள் ஆடம்பரமானவைகள் அல்ல; ஆவிக்குரிய வாழ்க்கையிலும் காற்று, தண்ணீர் மற்றும் உணவு ஆகியன முக்கியமானவைகளே. தேவனுடைய ஆவியே நமது மூச்சு (யோவான் 20:22), தேவனுடைய வார்த்தையே நமது தண்ணீர் (7:37-39), தேவனுடைய வார்த்தையே நமது உணவு (மத். 4:4). இன்று நாம் குடிக்கும் தண்ணீரைப் பற்றி தியானிப்போம். அது பரிசுத்த ஆவியானவருக்கு அடையாளம். (சுத்திகரிப்புக்கான தண்ணீர்) தேவனுடைய வார்த்தையைக் குறிக்கும். யோவான் 15:3 மற்றும் எபே.5:26 காண்க. இங்கு ஆவிக்குரிய தாகத்தை தீர்ப்பதற்கு தேவையானவை எவை?
தாகம் விருப்பத்தை உள்ளடக்கியது.
தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் தேவனை நன்கு அறிந்துகொள்ளவும், அவருடன் நெருக்கமாக இருக்கவும் மிகுந்த ஆசைப்பட வேண்டும். அந்த தாகம் இல்லாவிட்டால், அவர் விசுவாசியாகவோ அல்லது தவறான ஆதாரங்களைச் சார்ந்தவராகவோ இருப்பார். “என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டு விட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்” (எரே.2:13). எப்பொழுதும் மாற்றுகளை நம்பி வாழ்வது ஆபத்தானது. “நீர் எங்களை உமக்காகப் படைத்தீர். எங்கள் இருதயங்கள் உம்மில் ஓய்வெடுக்கும் வரை அவை அமைதியற்றிருக்கும்”; என்று தூய அகஸ்டின் எழுதியுள்ளார். ஒரு விக்கிரகம் தேவனுக்கு மாற்றாக அமையலாம். இந்த மாற்றுகள் மெய்வாழ்வைத் தராது. சங்கீதம் 115:8 இல் உயிரற்ற சிலைகளின் பண்புகளை சங்கீதக்காரன் விளக்குகிறார். “அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப் போலவே இருக்கிறார்கள்.” நாம் தேவனை அறிந்து கொள்ளவும் அவரைப்போல மாறவும் வாஞ்சிக்கிறோமா? “தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது” (சங்.63:1). இதுவே உண்மை!
தாகம் தீர்மானத்தை உள்ளடக்கியது.
ஒரு சிற்றுண்டிசாலையில் உணவு வழங்குபவர் “உங்களுக்கு என்ன தேவை?” என்று வினவுகிறார். அதை நாம்தான் முடிவு எடுக்கவேண்டும். ஆனால் அர்ப்பணிக்கப்பட்ட விசுவாசியின் வாழ்வில் எழும் ஆவிக்குரிய தாகத்தில் ஒரே ஒரு முடிவுதான் உண்டு. “ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்”; (வெளி.22:17). எனக்கு நீரிழிவு நோய் இருப்பதாக எனது மருத்துவர் கூறிய பின்னர் எனக்கு அநேக ஆலோசனைகள் கூறினார். அதில் முக்கியமானது: “உமக்கு ஒத்துக்கொள்ளாத உணவுகளை சாப்பிடுவதில் உள்ள ஆர்வத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்”. தீர்மானம் உங்களுடையது. உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். அழைப்பு சாதாரணமானது. வந்து குடியுங்கள். “ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம் பண்ணக்கடவன்” (யோவான் 7:37). இருதயத்தின் நிறைவுக்கு விசுவாசமே காரணம். உலகில் வேறு எதுவும் அதற்கு மாற்றாகாது.
தாகம் மகிழ்ச்சியை உள்ளடக்கியது.
உணவுப்பொருட்கள் மற்றும் பானங்களை விளம்பரப்படுத்துவோர் “திருப்தி” என்பதை வலியறுத்துவர். அப்பொருள் உண்மையிலேயே நுகர்வோரை திருப்திபடுத்தும் எனில் அவர்கள் வேறொரு பொருளை நாட மாட்டார்கள். இயேசு நம்மை அனைத்து வழிகளிலும் திருப்தியளிக்கிறார். அவரை மாற்றுவதற்கு நமக்கு எந்த ஒரு விருப்பமும் இல்லை. “நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது” (யோவான் 4:14). இரட்சிக்கப்படாத மக்கள் தங்களது தாகத்தைத் தீர்த்துக்கொள்ள வாழ்நாள் முழுவதையும் செலவிடுகிறார்கள். பின்னர் தங்களது நித்தியத்திலும் அதைத் தணிக்கமுடியாது அவதிப்படுகிறார்கள் (லூக்கா 16:49). எசேக்கியேல் 47:1-12 இல் காணப்படும் ஜீவநதியின் தண்ணீர் கடவுளின் பிள்ளைகளுக்கு ஆழத்தின்மேல் ஆழமாகக் கிடைக்கும். ஜீவத்தண்ணீர் இலவசம்; ஆனால் அது இயேசுவின் ஜீவனாலே நமக்குக் கிடைத்தது. நாம் தாகமடையாமல் இருப்பதற்காக அவர் சிலுவையில் தாகமானார் (லூக்கா 19:28). இந்த அழைப்பு நித்தியமானது. என்றும் ரத்து செய்யப்படமாட்டாது. நீங்கள் இந்த அழைப்புக்கு பதிலளித்தீர்களா ஆம், எனில் அதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டீர்களா?
தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன் (வெளி.21:6).
(மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை)