ஜெபமும் சமாதானமும்!
அதிகாலை வேளையில்… (ஜனவரி-பிப்ரவரி 2017)
– Dr.உட்ரோ குரோல்
வேதபகுதி: ஏசாயா 26:1-21
என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது ; எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும் போது பூச்சக்கரத்துக் குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள் (ஏசா.26:9).
தேவனுடன் உறவாடும் மக்களின் இருதயங்களிலே நிலவும் நிலையான சமாதானமே வேதாகமத்தின் முக்கிய கருவாகக் காணப்படுகிறது. ஏசாயா தீர்க்கத்தரிசி “உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்” (ஏசா. 26:3) என்று கூறியுள்ளார். அதாவது தேவன்மேல் நம்பிக்கையாயிருக்கிறவனை அவர் இரட்டிப்பான சமாதானத்துடன் காத்துக்கொள்வார் என்பதே இதன் பொருளாகும்.
புதிய ஏற்பாட்டிலும் இயேசு தம்முடைய சமாதானத்தை தம்முடைய சீஷர்களுக்கு தருவதாக வாக்களித்தார். “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக” (யோவான்14:27) என்றுரைத்தார். மேலும், “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” (யோவான்.16:33) என்றார்.
அப்போஸ்தலர் பவுலும் தேவன் மீது தமது நம்பிக்கையை வைப்பதால் கிடைக்கும் சமாதானத்தை அறிந்திருந்தார். எனவே கொலோசெய விசுவாசிகளுக்கு, “தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்” (கொலோ.3:15) என்று ஆலோசனையை அளித்தார். நமது சிந்தை தேவன்மீது நிலைத்திருக்கும் பொழுது அவரது சமாதானமானது அனைத்தையும் ஆட்கொள்ளும். ஆனால் உலகக் கவலைகள் நமது சிந்தையை நிறைத்திருக்கும் பொழுது தேவனுடைய சமாதானம் நமக்கு எட்டாத தூரத்தில் இருக்கும்.
இக்காரணத்துக்காகவேதான் பிலிப்பிய விசுவாசிகளுக்கு அவர், “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (பிலிப்.4:6,7) என்ற ஆலோசனையை அளித்தார். நம்முடைய இருதயத்தையும் சிந்தையையும் தேவனுடைய சமாதானம் ஆட்கொள்ளும்பொழுது வாழ்வின் கவலைகள் நம்மை பாதிக்காது. நம்மை அலைக்கழிக்கும் எண்ணங்களால் நிரப்பப்படுவதோ அல்லது அவற்றிலிருந்து விடுதலை தரும் தேவ வல்லமையால் நிரப்பப்படுவதோ நாம் எடுக்கும் தீர்மானத்திலேயே உள்ளது.
ஏசாயா தீர்க்கத்தரிசி நள்ளிரவில் தேவனைத் தேடும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். அவருடைய இருதயத்தை கவலை என்னும் மேகங்கள் சூழ்ந்திருந்தபொழுதும் அந்த நாளின் தோல்விகள் அவரைத் துவளச் செய்திருந்தாலும் அவைகளிலேயே உழன்றுவிடாமல் தேவன் தரும் விடுதலையைத் தேடினார். சந்தேகத்தில் அல்ல, தேவன் மீதுள்ள நம்பிக்கையில் அவர் சார்ந்திருந்தார்.
“என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது; எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன்” (ஏசாயா 26:9) என்று அவர் தொடருகிறார். இரவின் இருளில் தேவனைத் தேடும் அனுபவம் தீர்க்கதரிசியின் சிந்தையை பயத்திலிருந்து விடுதலையாக்கி, ஒரு புதிய நாளை தேவனுடைய சமாதானத்தினால் சந்திக்கக் காத்திருக்கும் ஆர்வத்தை அளித்தது. எனவேதான் அவர் “கர்த்தாவே, எங்களுக்குச் சமாதானத்தைக் கட்டளையிடுவீர்; எங்கள் கிரியைகளையெல்லாம் எங்களுக்காக நடத்திவருகிறவர் நீரே” (ஏசாயா 26:12) என்ற தமது விண்ணப்பம் நிறைவேற்றப்படும் என்பதில் உறுதியான நம்பிக்கையை வைத்திருந்தார்.
இக்காலத்திலும் உலகத்தில் சவால்களும் பாடுகளும் அதிகமாக உள்ளன. உலகத்திலும் நமக்குள்ளும் தேவனுடைய சமாதானத்துடன் நாம் வாழவே தேவன் திட்டமிட்டுள்ளார். ஆனால் நம்முடைய கவலைகளை அவர்மீது வைத்து, அவருடைய சமாதானத்தைப் பெற்றுக் கொள்வதாலேயே இது சாத்தியமாகும். நேற்றைய துன்பங்களால் இராமுழுதும் உறக்கம் வராமல் இருந்தீர்களானால் அதிகாலையிலேயே அவற்றை தேவனிடம் ஒப்படையுங்கள். அவர் உங்கள் கவலைகளையெல்லாம் மாற்றி தம்முடைய சமாதானத்தினால் நிரப்புவார். தேவனுடைய சமாதானத்தைப் பெற்றுக்கொள்ள ஒரே வழி ஜெபமே!
அதிகாலைப் பாடல்:
சமாதானம்! சமாதானம்! பரம தகப்பனே
உமது தூய அன்பின் பிரவாகத்தின்
அற்புத சமாதானம் என்னை
நித்தமும் நிரப்பிட ஜெபிக்கிறேன்.