தந்திர வலை!

அதிகாலை வேளையில்… (செப்டம்பர் – அக்டோபர் 2018)
– Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி: நியாயாதிபதிகள் 9: 22-57
காலமே சூரியன் உதிக்கையில் எழும்பி, பட்டணத்தின்மேல் விழுந்து, அவனும் அவனோடிருக்கிற ஜனங்களும் உமக்கு எதிரே புறப்படும்போது, உம்முடைய கைக்கு நேரிடுகிறபடி அவனுக்குச் செய்யும் என்று சொல்லியனுப்பினான் (நியாயா.9:33).

பிறரை ஏமாற்றுவது என்பது ஒரு கலை. நாம் பிறரை ஏமாற்ற எண்ணும் பொழுது முதலில் ஒரு சிக்கலான வலையை உருவாக்குகிறோம். பின்னர் அதனை செயல்படுத்துகிறோம். ஆயினும் கெடுவான் கேடு நினைப்பான் என்ற முதுமொழிக்கு ஏற்ப அது அவர்களுக்கே கேடு விளைவிக்கும்.

மேலும் நீதிமானுக்கு விரோதமாக எழும்பும் சதிகாரர்கள் தங்களுடைய சதித்திட்டத்தால் இறுதியில் அழிக்கப்படுவார்கள் என்ற உண்மையை கிதியோனும் அவனுடைய முந்நூறு வீரர்களும் பெற்ற வெற்றிக்குப் பின்னர் தொடர்ந்த நாட்களின் அவல நிலையிலிருந்து நாம் அறிகிறோம்.

நியாயாதிபதிகள் 8: 33-35 என்ற வேதபகுதியில் மீதியானியரை வெற்றி கண்ட பின்னர் இஸ்ரவேலர்களால் தொடர்ந்து சிறப்புடன் வாழமுடியவில்லை எனக் காண்கிறோம். தங்களை விடுதலையாக்கிய தேவனை இஸ்ரவேலர் மறந்தபடியால் வெளியிலிருந்த எதிரிகளைவிட அவர்களுக்குள்ளே இருந்த உட்பூசல்கள் அதிக அழிவைத் தந்தன. கிதியோன் மறுத்த ஆட்சியை சீகேமிலிருந்த அவனுடைய மறுமனையாட்டியின் மகன் அபிமெலேக்கு இச்சித்தான். தனது தந்தையின் புகழை உபயோகித்துக்கொள்ள விரும்பிய அபிமெலேக்கு சீகேமின் மக்களிடம் ஒரு நீண்ட வீர வசனம் பேசினான். கிதியோனின் குமாரர்கள் 70 பேர் அவர்களை ஆள்வதைவிட ஒரு தனிமனிதன் ஆளுவதே சிறந்தது என்று கூறினான். பாகால் பேரீத்தின் கோவிலிலிருந்து பெற்றுக்கொண்ட எழுபது வெள்ளிக்காசைக் கொண்டு வீணரும் போக்கிரிகளுமான மனுஷர்களை தனது சேவகத்தில் வைத்துக்கொண்டான். இவர்கள் கிதியோனின் குமாரர்களைக் கொலை செய்தனர். ஆனால் யோதாம் என்னும் கிதியோனின் இளைய குமாரன் அதிசயமாய் இத்தந்திர வலைக்குத் தப்பிவிட்டான்.

அபிமெலேக்கு இஸ்ரவேலின் ஒரு சிறிய பகுதியை மூன்று வருடங்கள் ஆண்டான். யோதாம் கெரிசீம் மலைக்குச் சென்று அபிமெலேக்குக்கும் சீகேம் மனிதர்களுக்கும் சாபமிட்டான். இந்த சாபம் ஒரு உருவகமாகக் கூறப்பட்டுள்ளது. மரங்கள் தங்களுக்கு அரசனாக இருக்க வேண்டுமென ஒலிவமரம், அத்திமரம் மற்றும் திராட்சைச்செடி இவற்றை வரிசையாகக் கேட்டன. ஆனால் அவைகள் மறுத்துவிட்டன. பின்னர் அவை முட்செடியிடம் சென்று தங்கள் கோரிக்கையை வைத்தன. அதனை முட்செடி ஏற்றுக் கொண்டது.

இந்த உருவகத்தை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம். தங்களுடைய கனிகளைத் தருவதில் ஆர்வம் காட்டும் மரங்கள் ஆட்சியை விரும்பவில்லை. எதையுமே கொடுக்க இயலாத முட்செடி தனது சுயநலத்துக்காக தலைமை பொறுப்பை ஏற்றது. அபிமெலேக்கே அந்த முட்செடி. அபிமெலேக்கிலிருந்து அக்கினி புறப்பட்டு, சீகேம் பட்டணத்தாரையும், மில்லோவின் குடும்பத்தாரையும் பட்சிக்கவும், சீகேம் பட்டணத்தாரிலும் மில்லோவின் குடும்பத்தாரிலுமிருந்து அக்கினி புறப்பட்டு, அபிமெலேக்கைப் பட்சிக்கவும்கடவது என்று யோதாம் சொன்னான் (நியாயாதிபதிகள் 9:20).

யோதாமின் சாபம் வெகு விரைவிலேயே பலித்தது. அபிமெலேக்கு இஸ்ரவேலை மூன்று வருஷம் அரசாண்ட பின்பு, அவனுக்கும் சீகேமின் பெரிய மனுஷருக்கும் நடுவே பொல்லாப்பு உண்டாக்கும் ஆவியைத் தேவன் வரப்பண்ணினார். சீகேமின் பெரிய மனுஷர் அவனைக் கொலை செய்ய திட்டமிட்டனர். ஆனால் அபிமெலேக்கின் விசுவாசியாகிய பட்டணத்தின் அதிகாரியாகிய சேபூல் அச்சதித்திட்டத்தை சில ஆட்களின் மூலம் அதை அவனுக்குத் தெரியப்படுத்தினான். இரவில் சீகேமின் பட்டணத்து வாசலில் காத்திருந்து அதைத் தாக்க ஆலோசனை கூறினான். காலமே சூரியன் உதிக்கையில் எழும்பி, பட்டணத்தின்மேல் விழுந்து, அவனும் அவனோடிருக்கிற ஜனங்களும் உமக்கு எதிரே புறப்படும்போது, உம்முடைய கைக்கு நேரிடுகிறபடி அவனுக்குச் செய்யும் என்று சொல்லி அனுப்பினான் (நியா.9:33). அவ்வாறே சீகேம் பட்டணத்து மக்களில் அநேகரை அபிமெலேக்கு வெட்டினான்.

துரோகிகளைக் கொன்ற பின்னர் அபிமெலேக்குத் தனது கவனத்தைப் பக்கத்திலிருந்த தேபேசு பட்டணத்துக்குத் திருப்பினான். சில சீகேம் பட்டணத்து மக்களும் தாபேசின் மக்களும் பாதுகாப்பைத் தேடி அப்பட்டணத்தின் நடுவிலிருந்த உயர்ந்த கோபுரத்துக்குள்ளே அடைக்கலமாயினர். அவர்களைக் கொளுத்துவதற்கு அபிமெலேக்கு ஆயத்தப்படுகையில் ஒரு ஸ்திரீ ஓர் ஏந்திரக் கல்லின் துண்டை மேலிருந்து எறிந்தாள். அது சரியாக அபிமெலேக்கின் தலையிலே விழுந்து அவன் மண்டையை உடைத்தது. அவன் மரணமடைந்தான். யோதாமின் தீர்க்க தரிசனம் நிறைவேறியது.

அரசனாக விரும்பியவனும் அவனது குடிகளாக அமைய இருந்தவர்களும் அவர்களது சதிவலையில் விழுந்தார்கள். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். நீதிமான்களை அழித்தவர்கள் தாங்களே ஒருவரை ஒருவர் அழித்துக்கொண்டார்கள். தேவனுடைய ஆசீர்வாதம் இல்லாமல் சுயமுயற்சியுடன் முன்னேற விரும்பாது அவருடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று அறிந்து அதற்கு நம்மை ஒப்புவிப்பதே சாலச் சிறந்தது.

அதிகாலைப் பாடல்:

ஆதியும் அந்தமுமானவரே, ஆபிரகாமின் தேவனே,
உன்னதமான சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே,
அநாதியாய் இருக்கிறவராய் இருப்பவரே
வானத்தையும் புமியையும் படைத்த ஆண்டவரே
என்றும் நிலைக்கும் உம்முடைய நாமத்தை
நான் பணிந்து வணங்குகிறேன்.

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை