நம்புகிறதற்கு ஏதுவில்லாவிட்டாலும்!
தியானம்: 2019 ஜூலை 30 செவ்வாய் | வேத வாசிப்பு: ரோமர் 4:16-25
“(ஆபிரகாம்) … நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்” (ரோமர் 4:18)
விசுவாசத்தை நாம் உருவாக்க முடியாது; பிறர் சொல்லி வளர்த்துக்கொள்ளவும் முடியாது. மெய்யான விசுவாசம், தேவ ஆவியானவரால் நமக்குள் அருளப்பட வேண்டும். அந்த உன்னத ஆசியை நாம் பெற்றுக்கொள்ள கர்த்தரோடு நெருங்கி ஜீவித்து, அவர் அனுமதிக்கின்றவற்றை நமது வாழ்வில் முழுமனதோடு ஏற்று நடப்பது அவசியம். விசுவாசம் என்பது கிள்ளித்தரவும் அள்ளியெடுக்கவும் கடைச்சரக்கு அல்ல. அது விசுவாசம். இரண்டாயிரம் பிள்ளைகளை விசுவாசத்தில் பராமரித்த ஜார்ஜ் முல்லர் அவர்களிடம், ‘உறுதியான விசுவாசம் கொள்வதற்கு வழி என்ன’ என்று ஒருவன் கேட்டான். அதற்கு அவர், “இதற்கு ஒரே வழி சோதனைகளைச் சகிப்பதேயாகும். நான் கடுமையான சோதனைகளில் உறுதியாய் நின்றதால்தான் விசுவாசத்தைக் கற்றுக்கொண்டேன்” என்றாராம். ஆம், எல்லாம் அற்றுப்போகும் நேரம், அல்லது எதுவும் சாத்தியமில்லை என்கிற நேரமே விசுவாசிக்கக் கற்றுக்கொள்ளும் நேரம்.
ஆபிரகாமின் வாழ்வில் நாம் அதைத்தான் காண்கிறோம். அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவாய் என்ற வாக்கைப் பெற்றபோது, ஆபிரகாமுக்கு ஒரு பிள்ளையும் இல்லை; பிறக்கக்கூடிய சாத்தியமும் இருக்கவில்லை. அப்போது ஆபிரகாமுக்கு வயது நூறு. சாராளும் வயதுசென்ற கிழவி. எப்படி நம்புவது? ஆனால் ஆபிரகாமோ, வாக்குப்பண்ணினவரில் முழு நம்பிக்கையும் வைத்தார்.
சோதனைகள் நம்மை நெருக்கும்போது, வாக்கைப் பிடித்துக்கொண்டு, வாக்களித்தவரைச் சந்தேகிப்பதே நாம் செய்யும் தவறு. சோதனை நேரமே நாம் விசுவாசத்தில் வளரக்கூடிய நல்ல தருணம் என்று ஏன் சிந்திப்பதில்லை? நாம் அறிந்திராவிட்டாலும், அவரது சிங்காசனத்தை உறுதியாய் பிடித்துக்கொள்ள தேவன் நம்மைப் பயிற்றுவிக்கிற நேரம் அதுதான் என்பதை நாம் ஏன் உணருவதில்லை. ‘நான் பயப்படும் நாளில் உம்மை நம்புவேன்’ என்கிறோம்; பின்னர் நம்ப தடுமாறுகிறோம். இது, நான் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை அல்ல; இது தேவன் என்னில் கொண்டிருக்கும் திட்டம் நிறைவேறும் என்ற நம்பிக்கையாக இருக்கட்டும். நசுக்கப்படும்போதும், இழப்புகளைச் சந்திக்கும்போதும் நாம் சுருண்டுபோகிறோம். ஆனால், பெறு மதிமிக்க பரிமளதைலம் தயாரிக்க அநேகமான மலர்கள் நசுக்கப்படவேண்டும் என்பதை மறந்துவிடுகிறோம். சோதனைகளைச் சகிப்பது என்பது, நடப்பது நடக்கட்டும் என்று இருப்பது அல்ல; தேவசித்தம் என்னில் நிறைவேறட்டும் என்று காத்திருப்பதாகும்.
‘…பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்’ ( யாக். 1:2,3).
ஜெபம்: விடுதலையின் தேவனே, ஜார்ஸ் முல்லரைப் போல சோதனைகளைச் சகிக்கவும், அதில் உறுதியாய் நின்று விசுவாசத்தைக் கற்றுக்கொள்ளவும் கிருபை தாரும். ஆமென்.