ஆசிரியரிடமிருந்து…
(நவம்பர்-டிசம்பர் 2019)
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,
அதிசயமான தேவனின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.
இவ்விதழின் மூலம் தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். வருடத்தின் இறுதி மாதங்களுக்குள் வந்திருக்கிறோம். இவ்வருடம் முழுவதும் கர்த்தர் போதுமானவராக இருந்து ஊழியத்தை ஆசீர்வதித்தார். தேவைகளை சந்தித்தார். தேவனுக்கு எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.
அக்டோபர் 2ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற விசுவாச பங்காளர் கூடுகை கர்த்தருடைய கிருபையால் சிறப்பாக நடைபெற்றது. சென்னையிலுள்ள பங்காளர்களும் நேயர்களும் கலந்துகொண்டு கூட்டத்தைச் சிறப்பித்தார்கள். சாட்சி வேளையிலும் சத்திய வசன ஊழியத்தின் மூலம் பெற்றுக்கொண்ட நன்மைகளை ஆசீர்வாதங்களை அநேக பங்காளர்கள் பகிர்ந்துகொண்டது எங்களுக்கு அதிக ஊக்கத்தை அளித்தது. இக்கூட்டத்தின் மூலமாக சென்னையிலுள்ள பங்காளர்களையும் நேயர்களையும் சந்தித்தது எங்களுக்கு அதிக மகிழ்ச்சி. கலந்துகொண்ட யாவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
2019ஆம் ஆண்டிலும் தியான புத்தகத்திலுள்ள வேதவாசிப்பு அட்டவணையைப் பயன்படுத்தி பரிசுத்த வேதாகமத்தை முழுவதும் வாசித்து முடித்தவர்கள் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். உங்கள் பெயர்களை வரும் இதழில் பிரசுரிப்போம். வாசிக்க தவறியவர்கள் வரும் ஆண்டிலே வாசிப்பதற்கும் உற்சாகப்படுத்துகிறோம்.
இவ்விதழில் சகோ.தர்மகுல சிங்கம் அவர்கள் பரிசுத்த வேதாகமத்தின் பலருடைய வாழ்க்கை அனுபவங்களை முன்நிறுத்தி அதன்மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஆவிக்குரிய சத்தியங்களைத் தியானித்து நவம்பர் மாதத்தில் எழுதியுள்ளார்கள். டிசம்பர் மாதத்தில் சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் முதல் வருகையைக் கொண்டாடும் நாம் இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாவதைப் பற்றியும் கிறிஸ்துமஸின் உண்மையான அர்த்தங்களைப் புரிந்துகொண்டு கிறிஸ்துமஸ் தினத்தை அனுசரிப்பதைப்பற்றியும் தியானங்களை எழுதியுள்ளார்கள். தியானங்களினாலே நமது ஆத்துமாவிலே கர்த்தர் பெலன் தந்து தைரியப்படுத்துவார். தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளுக்காக ஜெபியுங்கள்.
சத்தியவசன பங்காளர்கள் நேயர்கள் வாசகர்கள் யாவருக்கும் அன்பின்
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கே.ப.ஆபிரகாம்
