குணநலன்

அதிகாலை வேளையில்… (நவம்பர்-டிசம்பர் 2019)
– Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி: சங்கீதம் 73: 1-28


நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும், காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன் (சங்கீதம் 73:14).


ஆசாப் என்பவர் எழுதிய 11 சங்கீதங்களில் இது இரண்டாவது பாடலாகும். 2நாளாகமம் 29:30 இல் எசேக்கியா அரசர், “தாவீதும் ஞான திருஷ்டிக்காரனாகிய ஆசாபும் பாடின வார்த்தைகளினால் கர்த்தரைத் துதிக்க” லேவியரை அழைக்கிறார். ஆசாப் என்பவர் இசை எழுத்தாளர் மாத்திரமல்ல; ஒரு தீர்க்கதரிசியாகவும் இருந்தார். குழப்பமான சங்கீதம் 37 இன் தழுவல் இச்சங்கீதம் எனலாம். சங்கீதம் 49 மற்றும் யோபு புத்தகத்தின் பொருளும் இதுவாகவே உள்ளது. துன்மார்க்கர் செழித்தோங்கவும் நீதிமான்கள் துன்பப்படவும் மகாசர்வ வல்லமையுள்ள தேவன் எவ்வாறு அனுமதிக்கிறார்? ஒருவேளை இக்கேள்வியை நீங்களும் தேவனிடத்தில் கேட்டுக் கொண்டிருக்கலாம். இதற்கான பதில் சங்கீதம் 73இல் காணப்படுகிறது.

இஸ்ரவேலரின் வனாந்தர யாத்திரை போலவே பரலோகத்துக்குச் செல்லும் வழியும் உள்ளது. அது சிலுவைகள் நிறைந்து துயரமும் துன்பங்களும் நொறுக்கங்களும் உள்ள வழியாகும். ஆசாபின் கால்கள் தள்ளாடுதலுக்கும் சறுக்குதலுக்கும் உள்ளான பொழுது இவ்வுண்மையை அறிந்து கொண்டார். தன்னைச் சுற்றிலும் உள்ள துன்மார்க்கர் செழித்திருப்பதைக் கண்டு பொறாமை கொண்டார். அவர்களுடைய வாழ்வில் வேதனைகளோ துன்பங்களோ இல்லை. துன்மார்க்கரின் கண்கள் கொழுப்பினால் எடுப்பாய்ப் பார்க்கிறது. ஆடம்பரங்களை அனுபவிக்கிறார்கள். செல்வத்திலும் செழிப்பிலும் வளருகின்றனர்; தேவனைத் தூஷித்தாலும் சர்வவல்ல ஆண்டவர் அதை அனுமதிக்கிறார். இதை அவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

மறுபுறமோ ஆசாப் தன் இருதயத்தைச் சுத்தம் பண்ணி, குற்றமில்லாமையிலே அவருடைய கைகளைக் கழுவி தேவனுக்கு முன்பாக ஓர் உத்தமமான வாழ்வை நடத்தி வந்தாலும், அவர் நாள்தோறும் வாதிக்கப்பட்டும் தண்டிக்கப்பட்டும் இருந்தார். தேவன் விரும்பும் ஒரு வாழ்வை நடத்தி வந்தாலும் தேவன் ஏன் அவருக்குப் பாடுகளை அனுமதித்ததா? அனுதினமும் ஒரு மனிதனின் ஆத்துமாவையும் எலும்பையும் நொறுக்காமலிருந்தாலும், தேவனுடைய கண்டிப்பும் தண்டனையும் இல்லாத நாட்கள் குறைவே. கிறிஸ்தவ வாழ்வில் தேவனுடைய கிருபையை அறிவதற்காகவே பாடுகள் நேரிடுகின்றன. தேவன் அடிக்கும் வேளையையும், அணைக்கும் வேளையையும் அறிந்துகொள்ள வேண்டும்.

ஆசாப் “நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும் காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன்” (சங்.73: 14) என்று அங்கலாய்க்கிறார். தேவனால் அடிக்கப்பட்டவராய் காலையில் எழும்புகிறார். அவர் இடுக்கத்தின் அப்பத்தை காலை உணவாகவும், விசாரத்தை பானமாகவும் கொண்டார். தேவனுடைய கண்டிப்பை உணரவே ஒவ்வொரு நாளும் காலையில் எழுவதாகக் கூறுகிறார். தன்னைச் சுற்றிலும் உள்ளவர்கள் பரிசுத்தமில்லாமல் வாழ்ந்தாலும் செழிப்பாக இருப்பதாயும், தான் உலகத்தால் கறைபடாத பரிசுத்த வாழ்க்கை நடத்தி துன்புறுவது தேவையா என்று வினவுகிறார். ஒருவேளை இந்த கேள்வியே உங்கள் உள்ளத்திலும் எழுந்திருக்கும்.

வட ஐரோப்பாவின் காடுகளில் எர்மைன் என்ற ஒரு சிறிய பிராணி உண்டு. அதனுடைய வெள்ளை நிற உரோமம் பெயர் பெற்றது. அது தன்னுடைய வெள்ளை நிற உரோமத்தை கறைபடாமல் காத்துக்கொள்ளும். இப்பண்பினை வைத்து ஐரோப்பிய வேட்டைக்காரர்கள் அதனைப் பிடிக்கின்றனர். அவர்கள் இயந்திர வலையை வைத்து அவைகளைப் பிடிப்பதில்லை. மலையுச்சியில் அதனுடைய வீட்டைக் கண்டுபிடித்து அதன் வாசலை தாரினால் மெழுகி விடுகின்றனர். அப் பிராணியை விரட்டும்பொழுது அது பயந்து தனது வீட்டுக்கு விரைந்தோடும். ஆனால் அது அழுக்காக இருப்பதைக் கண்டு வேறொரு பாதுகாப்பான இடத்தை நாடி ஓட எண்ணும். தன்னை கறைபடுத்திக் கொள்ளாதிருப்பதற்காக வேடர்களைத் துணிச்சலுடன் எதிர்த்து நிற்கும். இதுதான் அதன் குணநலன். மயிர் நீப்பின உயிர் வாழாக் கவரிமான் போல தன் உயிரைவிட பரிசுத்தத்தையே அது பாதுகாக்கிறது.

தேவனால் நாம் அநியாயமாய் தண்டிக்கப்படுகிறோம் என்று நாம் உணரும் வேளைகளில் நம்முடைய உத்தமமான வாழ்வினை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அப்பொழுது எர்மைனை நினைத்துக் கொள்ளுங்கள். உலகத்தால் கறை படாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது (யாக்.1:27). உலகத்தால் கறைபடாதபடி நம்மைக் காத்துக்கொள்வதே கிறிஸ்தவ வாழ்வின் குறிக்கோள்.

பாடுகள் நமது பண்பினை சோதிக்கும்; பண்புகள் சோதிக்கப்படும் பொழுது சரியான வழிமுறையைப் பின்பற்றினால் பண்பு நலன் உறுதிப்படும். தேவன் நமக்கு தேவையான பாடுகளை அனுப்பி நம்மை சிட்சிப்பதால் நாம் மகிழ்ந்து களிகூருவோம்.


அதிகாலைப் பாடல்:

சோதனையில் இயேசுவே எனக்காக மன்றாடும்;
உம்மை மறுதலித்து விலகாதபடி காத்திடும் .
நான் தடுமாறும் வேளையில் என்னைத் தாங்கிடும்;
பயமோ அன்போ என்னை வீழ்த்தாதபடி உதவிடும்.

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை