ஆசிரியரிடமிருந்து…
(நவம்பர் – டிசம்பர் 2020)
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,
இம்மட்டும் நமக்கு உதவி செய்து பாதுகாத்து வந்த அன்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
இவ்வருடத்தின் கடைசி பாகத்தில் பிரவேசிக்க உதவி செய்த தேவாதி தேவனை ஸ்தோத்திரிக்கிறோம். இவ்வருடத்தை ஆரம்பிக்கும்போது நாம் எதிர்பார்த்திராத அநேக காரியங்கள் நமது தேசத்திலும் உலகமெங்கும் நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான ஜனங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டும், அநேகர் மரித்துப்போயிருப்பதையும் நாம் அறிகிறோம். தேவனுடைய கண்களிலே ஜனங்களுக்கு தயை கிடைக்கும்படியாக தொடர்ந்து பாரத்தோடு ஜெபிப்போம். “பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு .. அவர்களுக்கு இரங்கத்தக்கதான இரக்கத்தை அவர்களுக்குக் கிடைக்கப்பண்ணுவீராக (1இரா.8:49,50).
சத்தியவசன ஊழியத்தை வருடமுழுவதும் ஜெபத்தோடு தாங்கிவந்த அனைத்து பங்காளர்கள் ஆதரவாளர்கள் யாவருக்காகவும் ஆண்டவருக்கு நன்றி கூறுகிறோம். தங்கள் மனபாரங்கள், வாழ்வின் பிரச்சனைகளைப் பகிர்ந்துகொண்ட பங்காளர்களுக்காகவும், லாக் டவுன் சமயங்களில் வேலை இழந்து, தொழில்கள் பாதிக்கப்பட்டும் வருமானம் இன்றி தவிக்கிற அனைத்து பங்காளர் குடும்பங்களுக்கும் கர்த்தர் புதிய காரியத்தை செய்ய வேண்டுமென்றே பாரத்தோடு தேவனிடத்தில் மன்றாடி வருகிறோம். நிச்சயமாகவே ஆசீர்வாதமான பதில்களை கர்த்தர் குடும்பங்களுக்குத் தந்தருளுவார் என்பதில் எந்தவொரு சந்தேகமுமில்லை. இத்தியான புத்தகத்தின் வாயிலாக தாங்கள் பெற்றுக்கொண்ட ஆவிக்குரிய நன்மைகளை எங்களுக்குத் தெரியப்படுத்த மறவாதீர்கள்.
இவ்விதழில் நவம்பர் மாதத்தில் சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் பலவிதமான பயங்களைக் குறித்து தியானங்களை எழுதியுள்ளார்கள். டிசம்பர் மாதத்தில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் இயேசுகிறிஸ்துவின் பிறப்பின் சிறப்புத் தியானங்களையும், ஆண்டவருடைய இரண்டாம் வருகைக்கு நம்மை ஆயத்தப்படுத்தும் செய்திகளையும் தியானங்களாக எழுதியுள்ளார்கள். இத்தியானங்கள் அனைத்தும் வாசிக்கிற நம் அனைவருக்கும் எச்சரிப்பூட்டுவதாயும் கர்த்தருடைய வருகைக்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறதாயும் இருக்க நாங்களும் வேண்டுதல் செய்கிறோம்.
கே.ப.ஆபிரகாம்