மறைந்திருக்கும் வளங்கள்

அதிகாலை வேளையில்… (நவம்பர் – டிசம்பர் 2020)
– Dr.உட்ரோ குரோல்

இஸ்ரவேலின் தேவனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவர் எனக்குச் சொல்லி  உரைத்ததாவது: நீதிபரராய் மனுஷரை ஆண்டு தெய்வபயமாய்த் துரைத்தனம் பண்ணுகிறவர் இருப்பார். அவர் காலையில் மந்தாரமில்லாமல் உதித்து … சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார் என்றார் (2 சாமு. 23:3,4).


தாவீது தனது உயிருக்கும் ஆட்சிக்கும் நேரிட்ட சவால்களை எல்லாம் வெற்றியுடன் சமாளித்து நாட்டின் தலை நகர் எருசலேமுக்குத் திரும்பிவிட்டார். யூதாவில் ஏழு ஆண்டுகளும் சமஸ்த இஸ்ரவேலில் முப்பத்து மூன்று ஆண்டுகளும் அரசராக இருந்த அவர் தற்போது எழுபத்தைந்து வயதை அடைந்து இறுதி காலத்தை நெருங்கியிருந்தார்.

தாவீது உண்மையிலேயே ஒரு சிறந்த மனிதர். அவரிடம் அதிகமான திறமைகளும், நுண்ணறிவும் தேவனுடைய கிருபையும் இருந்தன. அவர் ஒரு பராக்கிரமசாலி; மகா தைரியசாலி; இஸ்ரவேலின் இன்பமான சங்கீதக் காரர்; அரசியலில் தீர்க்கமான முடிவெடுத்த அறிவாளி; போரில் வீரச்செயல் புரிந்தவர்; மனிதாபிமானம் நிறைந்தவர்; இப்பண்புகளே அனைவராலும் விரும்பத்தக்கவராக அவரை மாற்றின. யேகோவா தேவனிடத்தில் அவர் அளவற்ற அன்பும் அசைக்க முடியாத நம்பிக்கையும் விசுவாசமும் வைத்திருந்தார். அடிக்கடி தடுமாறி விழுந்தாலும் தேவனைப் பற்றிக்கொள்ளவும், அவரிடம் மன்னிப்பு பெறும்விதத்தையும் அவருக்காக வாழும் விதத்தையும் அறிந்திருந்தார். தேவனுடைய சித்தத்தை அறிந்து அதற்குக் கீழ்ப்படியவும் மெய்யான வாஞ்சையுடையவராய் இருந்தார்.

தாவீதின் இறுதி வசனங்கள் 2 சாமு வேல் 23இல் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவ்வதிகாரத்தின் முதல் வசனம் தெரிவிக்கிறது. இது தாவீதின் கடைசி இலக்கிய அல்லது சங்கீத வசனங்களாக இருந்தாலும் 1 இராஜாக்கள் 2ஆம் அதிகாரத்திலேயே அவருடைய கடைசி வார்த்தைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேவன் எதிர்பார்க்கும் ஓர் அரசனின் குணங்களைப் பற்றி இங்கு தாவீது விவரிக்கிறார். அவர் நீதியாய் மக்களை அரசாளவேண்டும் (2சாமு.23:3). அரசனாகவோ பிரதமராகவோ அல்லது தலைவராகவோ இருக்கும் ஒருவரிடத்தில் மனிதாபிமானத்தைவிட நீதியையும் நேர்மையையுமே மற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர் மனித நீதி அனைவரையும் சமம் எனக் காண்கிறது; ஆனால் தேவ நீதியோ மனிதர்கள் தேவனால் உண்டாக்கப்பட்டனர் என கூறுகிறது. எனவே தான் தேவ பக்தியுள்ள ஒரு தலைவர் தேவ பயத்தோடு ஆட்சி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

இஸ்ரவேலை வழிநடத்திச்சென்ற மோசேக்கு அவரது மாமனாகிய எத்திரோ “ஜனங்கள் எல்லாருக்குள்ளும் தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம் பேருக்கு அதிபதிகளாகவும், நூறு பேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பது பேருக்கு அதிபதிகளாகவும், பத்துப் பேருக்கு அதிபதிகளாகவும் ஏற்படுத்தும்” (யாத். 18:21) என்று ஆலோசனை அளித்தார். ஓர் ஆட்சியாளர் நீதியுடன் ஆளுவதும் தேவனுக்குப் பயப்படுவதும் மிகமிக அவசியமான காரியமாகும். அனைத்து மக்களுக்கும் நீதி செய்ய தேவைப்படும் தேவ பயத்தை எங்கிருந்து பெற்றுக்கொள்வது? அது மறைந்திருக்கும் நமது வளங்களையே சார்ந்திருக்கிறது.

அனைத்து இயற்கையும் மறைந்திருக்கும் வளங்களையே சார்ந்துள்ளன. அகலமும் ஆழமுமான நதிகளின் தோற்றம் பனிபடர்ந்திருக்கும் மலைகளேயாகும். பெரிய மரங்களின் வலிமை நம் கண்களுக்குப் புலப்படாத வேர்களில் அடங்கியுள்ளது. உலகம் முழுவதும் தனக்கு வேண்டிய நீர் மற்றும் கனிம வளங்களை மறைந்திருக்கும் நிலத்தடியிலிருந்தே பெற்றுக்கொள்கிறது. எந்த நாட்டின் ஆட்சியாளரும் தேவ பயத்துடன் இருந்தால்மட்டுமே மாமனிதராய் இருக்கமுடியும். அந்த தெய்வ பயம் அவரது ஆழ்மனதில் இருக்கும் மறைந்துள்ள வளத்தைப் பொறுத்தே அமையும். எனவேதான் கட்சிப்பற்றுக்கும் அப்பாற்பட்டவராய், அடிப்படை நன்னடத்தையுடன் ஒப்புரவுடைமை உள்ளவரையே ஒரு நாட்டின் தலைவராகத் தெரிந்தெடுக்க வேண்டும்.

தாவீது சுத்தமான, கலப்படமற்ற, தூய பக்தியை தான் வெளிப்படுத்தவில்லை என்பதை அறிந்திருந்தார். தேவனுக்கு பயப்படும் நீதியுள்ள மனிதன் “விடியற்கால ஒளியெனத் திகழ்ந்து, மேகமற்ற காலைக் கதிரவன்” (2 சாமுவேல் 23:4) போன்று கறையற்றவனாய்க் காணப்படுவான். தேவனைத் தேடும் ஒரு மனிதனிடமே இத்தகைய தெளிவும் பிரகாசமும் காணப்படும். அவன் தன்னுடைய அனுதின காரியங்களைத் திட்டமிடும் முன்பதாக அதிகாலையில் தேவனைத் தேடுவான். இத்தகைய ஆட்சியாளர்களை நமக்குத்தர நாம் தேவனிடம் மன்றாடுவோம்.


அதிகாலைப் பாடல்:

தூய்மை பெற நாடு; உன் தேவனிடம் உரையாடு;
கர்த்தர் பாதமே நிலைத்திரு;
அவர் வார்த்தை உட்கொள் என்றுமே;
தேவபிள்ளைகளோடு சேர்ந்திரு,
எளியவரைத் தாங்கிடு; யாவிலும்
தேவ தயவைத் தேட மறவாதே.

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை