கேதுரு மரம்!
தியானம்: 2021 நவம்பர் 29 திங்கள் | வேத வாசிப்பு: எண்ணாகமம் 24:1-7
நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான் (சங்கீதம் 92:12).
நீதிமானின் வாழ்க்கையை கேதுரு மரத்துடன் ஒப்பிட்டுக் கூறப்பட்டிருப்பதைக் குறித்து இன்று தியானிப்போம், நீதிமான் லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவானெனக் கூறப்பட்டிருப்பதிலிருந்து, லீபனோன் என்ற இடத்திலுண்டாகும் கேதுரு மரம்தான் செழித்து வளரும் என்பதை நன்கு அறிந்துகொள்ளலாம்.
லீபனோன் ஒரு மலை நாடு; மலையின் உச்சியில் உறைந்த மழை காணப்படுகிறது. இம்மலை நாட்டில்தான் கேதுரு மரம் அதிகம் வளருகிறது. மலை ஜெப ஜீவியத்தை குறிக்கிறது. கர்த்தருடன் தனித்திருந்து அவரின் உன்னத சமுகத்தைத் தரிசித்து உறவாடுவதுதான் ஜெபமாகும். ஜெபத்தின்மூலம் கர்த்தரோடு உறவாடும்போது, நம்மேல் ஆவிக்குரிய பனி, மழை இறங்கிக் கொண்டேயிருக்கும். ஜெபத்தின் மூலம் கர்த்தருடன் நெருங்கி உறவாடி ஜீவிக்கும் ஒரு நீதிமான் லீபனோனிலுள்ள கேதுருவைப்போல வளருவான் எனக் கூறப்பட்டுள்ளது.
அடுத்தாக, கேதுரு மரம் ஆயுள் கூடிய மரமாகும். ஆயிரம், இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக அது உயிருடன் நிற்கக்கூடியது. ஆம்: கர்த்தர் நமக்கு அருளும் இரட்சிப்பும் நீடிய ஆயுளை உடையது. நித்தியம் நித்தியமாக ஜீவிக்கக்கூடிய நித்திய ஜீவனை நமக்கு அளிக்கிறது. நாமும் இரட்சிப்பு மூலமாக நீதிமான்களாக்கப்படும்போது நம்முடைய வாழ்க்கையும் நீடிய ஆயுளைப் பெறுகிறது.
அடுத்து, கேதுரு மரம் தண்ணீர் அருகேதான் அதிகமாக வளரும். தண்ணீர் இல்லாவிட்டால் அது பட்டுப் போய் விடும். நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுக்களிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர் மொண்டு கொள்வீர்கள் (ஏசா.12:3) என ஏசாயா கூறுகிறார். இரட்சிப்பின் ஊற்றாகிய கர்த்தரண்டை நம் வாழ்க்கையானது வேர் விட்டுச் செல்லவேண்டும். அப்போதுதான் வேர் தண்ணீரை உறிஞ்சிக் கொண்டேயிருக்கும். நீதிமானின் வாழ்க்கையானது ஜீவ ஊற்றாகிய கர்த்தரண்டையிருப்பதால் அவன் இந்த கேதுருவைப்போல வளருவான் என அதனுடன் ஒப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது. நம் வாழ்க்கையும் கர்த்தரின் காரியங்களை நாடி வேர் விட்டுச் சென்று, அங்கிருந்து ஆசீர்வாதங்களை உறிஞ்சிக்கொள்வதாக அமையட்டும்.
யாக்கோபே, உன் கூடாரங்களும், இஸ்ரவேலே, உன் வாசஸ்தலங்களும் எவ்வளவு அழகானவைகள்! அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப் போலவும், நதியோரத்திலுள்ள தோட்டங்களைப் போலவும், கர்த்தர் நாட்டின சந்தன மரங்களைப் போலவும், தண்ணீர் அருகே உள்ள கேதுரு விருட்சங்களைப் போலவும் இருக்கிறது (எண்ணாகமம் 24:5-6).
ஜெபம்: அன்பின் தேவனே, ஜீவ தண்ணீரைக் கொடுக்கும் உம்மண்டையில் என் வாழ்க்கையானது வேர் விட்டுச்சென்று அதிக கனிகளைக் கொடுக்க கிருபை செய்யும். ஆமென்.