உறுதியுடன் நிலைத்திருத்தல்!

அதிகாலை வேளையில்…
(ஜனவரி-பிப்ரவரி 2022)
Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி: யோபு 1:1-5


யோபு: ஒருவேளை என் குமாரர் பாவஞ்செய்து, தேவனைத் தங்கள் இருதயத்திலே  தூஷித்திருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை அழைத்தனுப்பி, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படியேபும் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவான் (யோபு 1:5).


துன்பங்களின் மத்தியிலும் சகிப்புத்தன்மையுடன் அவற்றை ஏற்றுக்கொண்டு தேவபக்தியில் சற்றும் குறையாமல் வாழ்வதே ஓர் உண்மையான கிறிஸ்தவனுடைய தன்மையும் அடையாளமுமாகும். இவ்வித வாழ்க்கை வாழ்ந்தவர்களில் உத்தம பக்தன் யோபு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளார். யோபு புத்தகத்தின் ஆசிரியர்; ஊத்ஸ் தேசத்தில் வாழ்ந்து வந்த இம் மனிதரான யோபுவை ஒரு மிகச் சிறந்த செல்வந்தனாகவும், மரியாதைக்குரியவராகவும், பெரிய ஜமீன்தாரராகவும் அறிமுகப் படுத்தப்படுத்துகிறார். அவருக்கு ஏழாயிரம் ஆடுகளும் மூவாயிரம் ஒட்டகங்களும், ஏராளமான நிலங்களும் இருந்தன. ஏழு குமாரர்களும் மூன்று குமாரத்திகளும் கொண்ட அன்பான குடும்பத்தை உடையவராயிருந்தார்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக அவர் மிகச் சிறந்த பக்திமானாக விளங்கினார். இப்புத்தகத்தின் ஆரம்ப வசனம் அவரை “உத்தமனும் சன்மார்க்கனும் தேவனுக்கு பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்” எனக் குறிப்பிடுகிறது. தானும் தன் வீட்டாரும் தேவனுக்கு முன்பாக உத்தமர்களாயிருக்க வேண்டுமென்று எண்ணி அதிகாலமே எழுந்து அவர்களுடைய எண்ணிக்கையின்படி அவர்களுக்காக சர்வாங்க தகனபலிகளைச் செலுத்திவந்தான். ஏனெனில் ஒருவேளை தன் குமாரர்கள் பாவஞ் செய்து தங்கள் இருதயத்தில் தேவனை தூஷித்திருப்பார்கள் என எண்ணினான். இவ்வாறு அவன் தொடர்ச்சியாக செய்து வந்தான் (யோபு 1:5). தன் குடும்பத்தாரில் எவரேனும் இரகசியமாக பாவஞ்செய்திருப்பார்கள் என எண்ணி ஒவ்வொரு நாளும் அதி காலமே தேவனைச் சந்தித்து, சர்வவல்லவருக்கு பலிகளைச் செலுத்தி வந்தான்.

இவ்வதிகாரத்தில் பின்வரும் பகுதி யோபுவின் வாழ்வின் இரண்டாவது பகுதியைக் கொண்டுள்ளது. இதை வாசிக்கும் பொழுது ஒரு பயங்கரமான கதையைப் போல அச்சத்தை உண்டாக்குகிறது. இங்கே சாத்தான் யோபுவின் அமைதியான கிராமவாழ்வில் நுழைந்து அவருடைய குடும்பத்தின் அமைதியை குலைக்கிறான். இந்த இரண்டாவது பகுதியில் நடப்பதை நாம் கவனிப்போமா?

1. சாத்தானின் அறிக்கை (வசனம் 6):
ஒரு நாள் தேவபுத்திரர், (இவர்கள் தேவ தூதர்களாக இருக்கலாம்) தேவனுடைய சந்நிதியில் வந்து தங்களுடைய காரியங்களைத் தெரிவித்தபொழுது சாத்தானும் அவர்கள் நடுவில் வந்து நின்றான்.

2. சாத்தானின் செயல் (வசனம் 7):
கர்த்தர் சாத்தானை நோக்கி, எங்கிருந்து வருகிறாய் என்று வினவினார். அதற்கு லூசிபர்: “நான் பூமியெங்கும்; சுற்றி உலாவி வருகிறேன்” என்று பதிலுரைத்தான். தேவனுடைய திட்டத்துக்கு இடையூறுபண்ண வாய்ப்புகளைத் தேடும் சாத்தானுடைய செயலுக்கு முடிவே கிடையாது.

3. சாத்தானுடைய பிரச்சனை (வசனம் 8):
கர்த்தர் சாத்தானிடம் “என் ஊழியன் யோபைப் பார்த்தாயா?” என்று கேட்டார். மாசற்றவனும், நேர்மையானவனும், இறைவனுக்கு அஞ்சி சாத்தான் வைக்கும் எல்லாவித தீமைகளுக்கும் தன்னை விலக்கி வாழ்ந்துகொண்டிருந்த ஒரு மனிதனை சாத்தான் சந்தித்தான்.

4. சாத்தானின் குற்றப்பத்திரிக்கை (வசனம் 10-11):
யோபு நேர்மையாய் நடப்பதற்கான காரணங்களை சாத்தான் ஆயத்தமாக வைத்திருந்தான். யோபுவையும் அவனுக்குரிய யாவற்றையும் தேவன் சூழ்ந்து நின்று வேலியடைத்திருந்தார். எனவேதான் யோபு மிகவும் செழித்தோங்கி வாழ்கிறார்; அவ்வேலியை தேவன் எடுத்துவிட்டால் யோபு தேவனுடைய முகத்திற்கு நேராகவே அவரை தூஷிப்பான் என்றும் விளக்கினான்.

5. சாத்தானுக்கு கட்டுப்பாடு (வசனம் 12):
யோபுக்குரிய எல்லாவற்றையும் தொடுவதற்கு லூசிபருக்கு அனுமதி கொடுத்த யேகோவா, யோபுவின் மீது மாத்திரம் கை வைக்கக்கூடாது என்ற ஒரு கட்டுப்பாட்டையும் விதித்தார். இக்காலத்தில் சாத்தானுக்கு இவ்விதமான தற்காலிக தடைகளை எப்பொழுதும் ஆண்டவர் தருவதில்லை; அத்தடை நிரந்தரமானதாக இருக்கும்.

6. சாத்தானின் எதிர்ப்பு (வசனம் 13-19):
அனுமதி பெற்ற சாத்தான் யோபுக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்துவிட்டான். எதிரிப் படைவீரர்கள் அணிவகுத்து வருவது போன்று யோபுக்கு அழிவின் அறிக்கைகள் வந்தவண்ணம் இருந்தன. இறுதியில் தான் அனைத்தையும் இழந்துவிட்டதை யோபு அறிந்துகொண்டார்.

7. சாத்தானின் தோல்வி (வசனம் 20-22):
யோபு எழுந்து தன்னுடைய மன உளைச்சலை வெளிப்படுத்தினான். மதியீனமாய் தேவனைக் குற்றப்படுத்தி பாவஞ் செய்யாமல் “நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ் விடத்துக்குத் திரும்புவேன்; கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்” என்றான் (யோபு 1:21).

தீயவர்களுடைய எதிர்ப்பை நீங்கள் சந்திக்கும்பொழுது அதைரியப்படாதிருங்கள். இந்த எதிர்ப்புகள் தற்காலிகமானதே. நம்முடைய அன்பு தேவனே இறுதி தீர்ப்பைக் கூறுவார். தேவனுடைய வழிகளை எப்பொழுதும் நீங்கள் அறிந்துகொள்ள முடியாது, ஆனால் யோபுவைப் போல அவர் நடத்திச் செல்லும் வழிகளை நம்பலாம்.


அதிகாலைப் பாடல்:

என் பாதை இருளாகத் தோன்றும்பொழுது
நான் ஏன் சோர்ந்துபோக வேண்டும்?
ஒளிக்கும் பரலோக வீட்டுக்கும் ஏங்கி
நான் ஏன் மனந் துவள வேண்டும்?
இன்ப இயேசு என் பங்காக இருக்கிறார்;
என்னை விட்டு நீங்காத நண்பர் அவர்;
பாடும் பறவைகளைப் பிழைப்பூட்டுபவர்

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை