ஆசிரியரிடமிருந்து…

(மே-ஜுன் 2022)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

பிதாவின் வலது பாரிசத்தில் இருந்து நமக்காக பரிந்துபேசிக் கொண்டிருக்கும் இயேசுகிறிஸ்துவின் இனியநாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

அனுதினமும் கிறிஸ்துவுடன் இதழின் வாயிலாக தங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். இவ்விதழின் வாயிலாக மாத்திரமல்ல, சத்தியவசன இணையதளம், வாட்ஸ் அப், youtube (Audio version) ஆகியவற்றின் வாயிலாகவும் வெளிவரும் இத்தியானங்களினாலே அநேகமாயிரமான மக்கள் பிரயோஜனமடைந்து வருகிறதை அறிந்து தேவனைத் துதிக்கிறோம். தியானங்களை எழுதும் தேவபிள்ளைகளை தேவன் தமது கரங்களில் எடுத்து உபயோகிக்க வேண்டுதல் செய்வோம்.

நாம் கேள்விப்படும் யுத்த செய்திகள், தொற்றுநோய், இன கலவரங்கள், பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றின் மூலம் கடைசிகாலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது. இவைகள் யாவும் தம்முடைய வருகைக்கு அடையாளமாய் இருக்கும் என ஆண்டவர்தாமே கூறிச் சென்றுள்ளார். ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும் (லூக்.21:10). கர்த்தருடைய வருகையை சந்திப்பதற்கு நாமும் நமது குடும்பமும் ஆயத்தமாய் இருப்போம். நற்செய்தியை அறிவித்து மற்றவர்களையும் ஆயத்தப்படுத்த தேவன் நமக்கு கிருபை செய்வாராக. நாங்கள் முன்னறிவித்தபடி Dr.ஜாண் நியூபெல்டு அவர்கள் எழுதிய உங்கள் இரட்சிப்பின் முழுமையான பலனை அனுபவித்தல் என்ற புத்தகத்தைப் பங்காளர்களுக்கு மார்ச்-ஏப்ரல் மாத சத்தியவசன சஞ்சிகையுடன் சேர்த்து அனுப்பியுள்ளோம்.

இவ்விதழில் மே மாத தியானங்களை சகோதரி தர்ஷினி சேவியர் அவர்களும், ஜுன் மாதத்திற்கு நம்முடைய சுபாவங்களிலே கிறிஸ்துவுக்குள்ளாக மாற்றப்பட வேண்டிய காரியங்களைத் தியானங்களாக சகோதரி சாந்தி பொன்னு அவர்களும் எழுதியுள்ளார்கள். இத்தியானங்கள் தங்களுக்கு அதிக ஆசீர்வாதமாக அமைய வேண்டுதல் செய்கிறோம். தாங்கள் பெறும் ஆசீர்வாத அனுபவங்களை எங்களோடு பகிர்ந்துகொள்ள அன்பாய் கேட்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்