தேவனுடைய பரிபூரண சித்தம்!
அதிகாலை வேளையில்… (ஜூலை-ஆகஸ்டு 2014)
– Dr.உட்ரோ குரோல்
“அதிகாலமே கிழக்கு வெளுக்கிற நேரத்தில்… சாமுவேல் தைலக் குப்பியை எடுத்து, அவன் தலையின் மேல் வார்த்து, அவனை முத்தஞ்செய்து: கர்த்தர் உன்னைத் தம்முடைய சுதந்தரத்தின்மேல் தலைவனாக அபிஷேகம் பண்ணினார்… ”
(1 சாமு. 9:26, 10:1).
இஸ்ரவேல் தேசத்தில் சாமுவேல் தீர்க்கதரிசி, அநேக ஆண்டுகள் நியாயாதிபதியாக இருந்து முதிர் வயதுள்ளவரானார். அவரது மரணத்துக்குப்பின் இஸ்ரவேலை நடத்திச் செல்வது யார்? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்தது. சாமுவேலின் குமாரர்களான யோவேலும் அபியாவும் அவருக்கு முன் இருந்த ஏலியின் குமாரர்களைப் போல, நியாயாதிபதிகளுக்கான தகுதியை இழந்துவிட்டனர். “ஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல், பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள்” (1சாமு.8:3). சாமுவேல் இறந்தபின் தங்களுக்கு ஓர் அரசனைத் தேர்ந்தெடுக்காவிட்டால், நியாயாதிபதிகளின் காலத்தைப் போல அராஜகம் தலைதூக்கும்; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான் (நியா.17:6) என்ற நிலை மீண்டும் திரும்பும் என இஸ்ரவேலர் அஞ்சினர்.
இவை தவிர, ஆதி காலத்து கிழக்கத்திய நாடுகளைப் போல, அரசின் ஆடம்பரங்களையும் சடங்குகளையும், அனுபவிக்க இஸ்ரவேலருக்கு வாய்ப்பில்லாமல் போயிற்று. சொந்த நாடு இன்றி, நாடோடிகளைப் போல அலைந்து திரிந்த காலத்திலே அவர்கள் மற்ற நாடுகளைப் பற்றி கவலையின்றி இருந்தனர். ஆனால் வாக்களிக்கப்பட்ட நாட்டில் குடியேறியபின், தங்களைச் சுற்றியுள்ள நாடுகளுக்கு அரசன் இருக்கும்பொழுது, தங்களுக்கும் ஓர் அரசன் தேவை என்று விரும்பினர்.
தேவன் தம்முடைய அனுமதிக்கும் சித்தத்தின்படி, பென்யமீன் கோத்திரத்தில் செல்வந்தனும், செல்வாக்கும் மிக்க கீசின் மகனான சவுலை அவர்களுக்கு அரசன் ஆக்கினார். சவுல் அரசனானது, மற்றவர்களுக்கு ஒரு தற்செயல் நிகழ்வாகத் தோன்றலாம். காணாமற் போன கழுதையைத் தேட தன்னுடைய தகப்பனால் அனுப்பப்பட்ட சவுல், அதைக் கண்டுபிடிப்பதற்கு சாமுவேல் தீர்க்கதரிசியின் உதவியை நாடினார். இஸ்ரவேலுக்குத் தலைவனாகத் தம்மால் தெரிந்தெடுக்கப்பட்ட பென்யமீன் நாட்டானாகிய சவுல் வருவான் என்று சாமுவேலுக்கு முன்தினம் கர்த்தர் வெளிப்படுத்தியிருந்தார். சவுல் அங்கு சென்று சேர்ந்தபொழுது, அவனுடைய அடையாளத்தைப் பற்றிய அச்சம் சாமுவேலின் எண்ணத்தில் தோன்றியது. இயற்கையான அருளையும் திறமைகளையும் பெற்றிருந்த சவுல், மற்ற யூதர்களைவிட உயரமுள்ளவனாயிருந்தான். இவைகளைவிட, தேவனுடைய அனுமதிக்கும் சித்தத்தில் அவன் இயற்கைக்கு அப்பாற்பட்ட தெரிந்தெடுப்பாயிருந்தான். நன்மைக்கோ, தீமைக்கோ இஸ்ரவேலின் விருப்பத்துக்கு இணங்க யெகோவா சவுலை அவர்களுக்கு அரசனாகத் தேர்வுசெய்து கொடுத்தார்.
சாமுவேல் சவுலைக் கண்டபோது கர்த்தர் அவனிடத்தில்: “இதோ, நான் உனக்குச் சொல்லியிருந்த மனுஷன் இவனே;” என்றார். சாமுவேல் சவுலையும் அவன் வேலைக்காரனையும் போஜன சாலைக்குள் அழைத்துக் கொண்டுபோய், அவர்களை அழைக்கப்பட்டவர்களுக்குள்ளே தலைமையான இடத்திலே வைத்தான்; அழைக்கப்பட்டவர்கள் ஏறக்குறைய முப்பது பேராயிருந்தார்கள். பின்பு சாமுவேல் சமையல்காரனிடம் தான் ஏற்கனவே கொடுத்து வைத்திருந்த பலியின் சிறந்த பகுதியைக் கொண்டுவந்து சவுலின் முன் வைக்கச் சொன்னார். எல்லாவற்றுக்கும் மேலாக ஓர் அரிய காரியத்தையும் சொன்னார். தன்னோடு இரவு தங்கும்படியாக சவுலுக்கு அழைப்பு விடுத்தார். அதிக நேரம் இருவரும் பேசிக்கொண்டிருந் தனர். “அதிகாலமே கிழக்கு வெளுக்கிற நேரத்தில்… சாமுவேல் தைலக்குப்பியை எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து, அவனை முத்தஞ்செய்து: கர்த்தர் உன்னைத் தம்முடைய சுதந்தரத்தின்மேல் தலைவனாக அபிஷேகம் பண்ணினார்… ” (1 சாமு. 9:26, 10:1) என்றான்.
தேவனுடைய அனுமதிக்கும் சித்தத்தில் வாழ்வது ஒரு தற்காலிக ஆசீர்வாதத்தையே தரும். பழைய ஏற்பாட்டு வரலாற்றில் சவுலை ஒரு துர்பாக்கியசாலியாகவே நம்மால் காணமுடிகிறது. மக்களுடைய வேண்டுகோளுக்கு இணங்க, தேவனுடைய தெரிந்தெடுப்பாக இருந்தாலும், அதிகாரம் இழந்தவராய், இராஜாங்கமும் பறிக்கப்பட்டு உளவியல் ரீதியாக சீரழிந்த நிலையையே காண்கிறோம். நிராகரிப்பு, தோல்வி மற்றும் தற்கொலை ஆகியவையே சவுலின் தவிர்க்கமுடியாத முடிவாயிற்று.
தேவனுடைய அனுமதிக்கும் சித்தத்தில் யூதர்களுடைய இராஜாவாக சவுலைக் கண்ட சாமுவேலிடம், கர்த்தர் அவனிடத்தில்: “இதோ, நான் உனக்குச் சொல்லியிருந்த மனுஷன் இவனே;” என்று சொன்னார் (1 சாமு. 9:17). பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தேவனுடைய பரிபூரண சித்தத்தில் யூதர்களுடைய இராஜாவைக் கண்டு பிலாத்து, யூதர்களை நோக்கி: இதோ, உங்கள் ராஜா என்றான் (யோவான் 19:5). சவுல் சவுந்தரியமுள்ளவனாயிருந்தபடியால், அவனுடைய ஆட்சியை மக்கள் உடனடியாக ஏற்றுக்கொண்டனர். இஸ்ரவேலின் எதிரிகளை எதிர்த்து போர்களை வெற்றியுடன் முன் நடத்துவான் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இயேசுவின் ஆட்சியையோ இஸ்ரவேல் மக்கள் உடனடியாக நிராகரித்துவிட்டனர். ஏனெனில் “அவருக்கு அழகுமில்லை, செளந்தரியமுமில்லை”. இஸ்ரவேலின் எதிரிகளுக்கு விரோதமாய் படையெடுத்து தம் மக்களை முன் நடத்திச் செல்லவும் இயேசு திட்டமிடவுமில்லை. சவுல் இஸ்ரவேலரின் தெரிந்தெடுப்பு; இயேசு கிறிஸ்து தேவனுடைய தெரிந்தெடுப்பு. தேவனுடைய அனுமதிக்கும் சித்தத்தில் நாம் வாழ்வதைவிட, அவருடைய பரிபூரண சித்தத்தில் வாழ்வதே சாலச் சிறந்ததாகும்.
அதிகாலைப் பாடல்:
நிந்தைகளையும் அவமானத்தையும்
எனக்காக சிலுவையில் சுமந்தாரே.
தம்முயிர் தந்து எனக்கு மன்னிப்பை
அளித்த இரட்சகர் இயேசுவுக்கு
என்றும் பாடுவேன் அல்லேலூயா!