அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்

புனித வேதாகமத்தின் வரலாறு (ஜூலை-ஆகஸ்டு 2014)
அத்தியாயம்-9
சகோ.M.S.வசந்தகுமார்

(2) சீன மொழிபெயர்ப்பு

1809ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்தை சீன மொழியில் மொழிபெயர்க்கும் வேலைகள் பூர்த்தி யடைந்தன. அதை புத்தகமாக அச்சிட்டு வெளியிடுவதற்குத் தேவையான சீன அச்சு எழுத்துக்களை மொரிசன் மரப்பலகையில் செய்தார். 1810 ஆம் ஆண்டு அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகம் சீன மொழியில் வெளியிடப்பட்டது. இது கிறிஸ்தவர்களது வேதநூல் என்பதை அரசு அதிகாரிகள் அறியாதிருப்பதற்காக, வேறு அட்டைகளுடன் பிரசுரிக்கப்பட்டு புத்தக வியாபாரிகளுக்கு இலவசமாகக் கொடுக்கப்பட்டது.

அவர்கள் அவற்றை விற்று அதிக பணம் சம்பாதித்து வந்தனர். அவ் வருடம் 6 மாதங்களின் பின் மொரிசன் வழக்கம் போல மெக்கவ்விற்குச் சென்றார். அச்சமயம் தான் மரப்பலகையில் செய்த சீன அச்செழுத்துக்கள் அரசு அதிகாரிகளின் கண்களில் தென்படாமலிருப்பதற்காக அவற்றை ஓரிடத்தில் புதைத்து விட்டுச் சென்றார்.

ஆனால் 6 மாதங்களின் பின் மறுபடியுமாக கன்டன் நகருக்கு வந்து அவற்றைத் தோண்டியெடுத்த போது அவை அனைத்தும் கறையான்களுக்கு உணவாகியிருப்பது தெரிய வந்தது. வருடத்தில் 6 மாதங்கள் மனைவியின் பிரிவு, அவரது தேக ஆரோக்கியத்தின் வீழ்ச்சி என்பன மொரிசனை வெகுவாகப் பாதித்தாலும் அவர் தனது மொழி பெயர்ப்பு வேலைகளைத் தொடர்ந்து செய்தார். இதன் பயனாக 1814 ஆம் ஆண்டு புதிய ஏற்பாடு முழுவதையும் சீன மொழியில் அவரால் வெளியிடக் கூடியதாயிருந்தது.

மொரிசனது மொழிபெயர்ப்பு வேலைகளில் அவருக்கு உதவி செய்வதற்காக லண்டன் மிஷனரி சங்கம் வில்லியம் என்பவரை சீனாவுக்கு அனுப்பியிருந்த போதிலும் அவருக்கு கன்டனிலும் மெக்கவ்விலும் இருப்பதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் அவர் மலாக்கா எனுமிடத்துக்குச் சென்று அங்கிருந்தவாறே மொரிசனுக்கு உதவி செய்தார். 1819 ஆம் ஆண்டு முழுவேதாகமமும் சீன மொழியில் வெளியிடப்பட்டது. இதில் 10 புத்தகங்களை மலாக்காவில் இருந்த வில்லியம் மொழிபெயர்த்திருந்தார். கன்டன் நகரில் வேதாகமம் விற்பனை செய்யப்படுவதை சீன அரசாங்கம் தடை செய்த போதிலும் வேதாகம விற்பனையினால் புத்தக வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைத்தமையினால் அவர்கள் அதற்கு வேறு தலைப்புகளுடனான அட்டைகளைப் போட்டு விற்பனை செய்தனர்.

1834ஆம் ஆண்டு ரொபர்ட் மொரிசன் மரணமடைந்தார். இவரது மிஷனெரிப்பணி கன்டன் நகர எல்லைக்கு அப்பால் செல்லாதபோதிலும் காலப்போக்கில் இவர் மொழி பெயர்த்த சீன வேதாகமம், சீனா வெங்கும் சென்றது. பிற்காலத்தில் சீனாவுக்குச் சென்ற மிஷனெரிகள் மொரிசனது சீன வேதாகமத்தை உபயோகித்தே சீன மக்களுக்குத் தேவ வார்த்தையை அறிவித்தனர்.

(3) ஜப்பானிய மொழிபெயர்ப்பு

1831 ஆம் ஆண்டு பசிபிக் சமுத்தி ரத்தில் கடற்சூறாவளியால் தாக்கப் பட்ட ஜப்பானியக் கப்பலொன்றிலிருந்து மூன்று ஜப்பானிய மாலுமிகள் காப்பாற்றப்பட்டு கனடா வழியாக இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களது உதவியோடு நெதர்லாந்து மிஷனெரி சங்கத்தைச் சேர்ந்த குட்லொஃப் என்பவர் யோவான் சுவிசேஷத்தை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்தார். இது 1837இல் சிங்கப்பூரில் அச்சிடப்பட்டது. ஜப்பானிய மாலுமிகள் மூலமாக இதை ஜப்பானுக்கு அனுப்ப குட்லொஃப் எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. அவர் சென்ற கப்பல் ஜப்பானியத் துறைமுகத்தில் துப்பாக்கி குண்டுக்களுக்கே முகங் கொடுக்க வேண்டியிருந்தபடியால் அவர் சீனாவுக்குத் திரும்பிச் சென்றுவிட்டார். இதன்பின் அற்புதமான முறையில் வேதாகமம் ஜப்பானுக்குள் சென்றது.

1854இல் ஆங்கில கப்பலொன்றிலிருந்த ஒருவருடைய வேதாகமம் தவறி கடலில் விழுந்தது. அவ்வேதாகமத்தின் கதை அத்தோடு முடிவடைந்து விட்டதாக கப்பலிலிருந்தவர்கள் நினைத்தாலும், அது ஒரு ஜப்பானிய மீனவனுடைய வலையில் அகப்பட்டது. அவன் அதைத் துறைமுக அதிகாரியிடம் எடுத்துச் சென்றான். வேதாகமத்தைப் பார்த்த அதிகாரி அது சீன மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதை அறிந்து கொண்டதோடு, அதன் ஒரு பிரதியை தன்னிடம் கொண்டுவரும்படியும் கட்டளையிட்டான். அதை வாசித்த அதிகாரி இரட்சிக்கப்பட்டதோடு, அவன் அதைத் தனது நண்பனுக்கும், சகோதரனுக்கும் காண்பித்தான். அவர்களும் சீன வேதாகமத்தை வாசித்து இரட்சிக்கப்பட்டதோடு, இம்மூவரும் அநேகரை இயேசுகிறிஸ்துவுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஜப்பானுக்கு வந்த மிஷனெரிகள் ஜப்பானிய மொழியில் வேதாகமத்தை மொழிபெயர்க்கத் தொடங்கினர். ஜப்பானிலிருந்த அமெரிக்க பப்டிஸ்ட் மிஷனெரி சங்கத்தைச் சேர்ந்த கொப்பிள் என்பவர் 1871இல் புதிய ஏற்பாட்டை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்க்கத் தொடங்கி, 1879இல் பூர்த்தி செய்தார். 1887இல் ஜப்பானில் பணியாற்றிய பலதரப்பட்ட மிஷனெரி சங்கங்களையும் சேர்ந்தவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமம் வெளிவந்தது. ரோமன் கத்தோலிக்க மிஷனெரிகள் 1895 முதல் 1897 வரையிலான காலப் பகுதியில் நான்கு சுவிசேஷங்களையும் ஜப்பானிய மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்டனர்.

1900இல் கிரேக்க ஓர்த்தடொக்ஸ் சபையினர் மொழி பெயர்த்த ஜப்பானிய புதிய ஏற்பாடு வெளிவந்தது. 1955இல் திருத்தப்பட்ட புதிய ஜப்பானிய வேதாகமம் வெளியிடப்பட்டது.

(தொடரும்)