உபத்திரவத்தில் தேவபிள்ளைகள்

தியானம்: செப்டம்பர் 29 திங்கள்; வாசிப்பு: தானியேல் 3:20-30

“நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க
வல்லவராயிருக்கிறார்; …விடுவிக்காமற்போனாலும், …உம்முடைய
தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை…” (தானி. 3:17,18).

நாங்கள் யார் என்று கேட்டால், நாங்கள் தேவனுடைய பிள்ளைகள் என்று தைரியமாகச் சொல்லுவோம். உபத்திரவங்கள் வரும்போது எப்படி இருக்கிறோம் என்று கேட்டால், முகத்தைத் தொங்கப்போட்டுக் கொண்டு, நாடியிலே கையை வைத்துக்கொண்டிருப்போம். உலகத்தையே தலையிலே தூக்கி வைத்திருக்கிறதுபோன்ற உருவம்தான் நினைவுக்கு வருகிறது.

இன்று வாசித்த பகுதியிலும் மூன்று தேவபிள்ளைகள் உபத்திரவத்தில் எவ்வளவு உறுதியாக இருந்தார்கள் என்று வாசித்தோம். உபத்திரவம் வரும் போது நாம் உறுதியாக இருக்கவேண்டும் என்று நாம் சிலவேளை சிந்திப்பது உண்டு. ஆனால், உபத்திரவங்களும், துன்பங்களும் வரும்போது ஓடி ஒளிகிறோம். இந்த தேவபிள்ளைகளோ, கண்ணுக்கு முன்னாலே உபத்திரவம் இருந்தபோதே உறுதியாக இருந்தார்கள். அவர்கள் தைரியமாகச் சொன்ன கூற்று என்னவெனில், “நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; …விடுவிக்காமற்போனாலும், நாங்கள் பொற்சிலையை வணங்கமாட்டோம்”. அதாவது, விடுவிக்காமற்போனாலும் அவருக்காக நாம் இந்த உபத்திரவங்களைச் சகிப்போமேயல்லாமல், அவருக்குக் கொடுக்கும் கனத்தை இச் சிலைகளுக்குக் கொடுக்க மாட்டோம் என்பதாகும். எவ்வளவு உறுதியான ஒரு தீர்மானம், விசுவாசம் பார்த்தீர்களா?

கடைசிக் காலத்தில் நின்றுகொண்டிருக்கும் தேவ பிள்ளைகளாகிய நமக்கும் இப்படிப்பட்ட ஒரு உறுதி தேவை. தேவனுக்காய் பாடுகளையும், உபத்திரவங்களையும் அனுபவிக்க நாம் ஆயத்தமாய் இருக்கவேண்டும். அந்த மூன்று தேவபிள்ளைகளின் உறுதிதான் ‘இஸ்ரவேலரின் தேவன் வல்லமையுள்ளவர்’ என்பதை அந்த ராஜாவையும், நாட்டு மக்களையும் அன்று காணச்செய்தது.

இன்று நாம் எடுக்கும் உறுதியான தீர்மானங்களும், படிகளும்தான் தேவனை அறியாதோர் தேவனை அறிந்துகொள்ள வழிவகுத்துக் கொடுக்கும் என்பதை நாம் மறக்கக்கூடாது. தேவபிள்ளைகள் அக்கினிச் சூளையின் நடுவில் போடப்பட்டபோது அவர்களோடு தேவசமுகம் இருந்ததுபோல, நாம் உபத்திரவத்தின் மத்தியில் நடந்தாலும், நம்மோடும் அவர் சமுகம் நிச்சயமிருக்கும் என்ற உறுதி நம்மை உபத்திரவ நேரத்தில் பெலப்படுத்தட்டும். நம் மத்தியிலும் பல சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ பலர் உருவாக்கப்படவேண்டும். அதற்காக இன்று நம்மை ஆண்டவர் கைகளில் ஒப்புக்கொடுக்க நாம் ஆயத்தமா? தேவன்தாமே நம்மைப் பெலப்படுத்துவாராக.

ஜெபம்: “சர்வ வல்லமையுள்ள தேவனே, உமக்காக உறுதியான சாட்சியாக என்றைக்கும் நிலைத்து நிற்க எனக்கு அருள் செய்வீராக. ஆமென்.”