நமக்கு ஒரு நிச்சயம் உண்டு!
தியானம்: ஜனவரி 31 சனி; வாசிப்பு: யோவான் 14:1-7
“நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணின
பின்பு ….நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில்
சேர்த்துக்கொள்ளுவேன்.” (யோவான் 14:3)
இப் புதிய வருடத்திலும் ஒரு மாதத்தை வெகு சீக்கிரமாகவே கடந்து வந்துவிட்டோம். எவ்வளவு வேகமாக நமது வாழ்நாட்கள் பறந்துகொண்டிருக்கின்றன. இது எங்கே முடியும் என்று ஏராளமான மக்கள் மனதில் ஒரு பயம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், கிறிஸ்துவின் பிள்ளைகளாகிய நமக்கோ ஒரு நிச்சயம் உண்டு. ஆகவே, காலங்கள் நம்மைவிட்டுக் கடந்துபோனாலும், நாம் பயப்படவேண்டியதில்லை.
சிலுவை மரணம் சமீபித்துவிட்டதை அறிந்த இயேசு, தமது சீஷரைப் பலவிதங்களில் திடப்படுத்தியதை சுவிசேஷங்களில் காண்கிறோம். அதே வார்த்தைகள்தான் இன்றும் நமக்குத் திடநம்பிக்கையைத் தருகிறது. நித்திய வாழ்வு என்பது நமது கண்களுக்குப் புலப்படாத ஒன்றாயினும், நாம் இயேசுவின்மீது வைத்திருக்கும் விசுவாசம் எப்படி நிச்சயமோ, அப்படியே நித்திய வாழ்வும்; நிச்சயம்; அதற்கு இயேசு ஒருவரே வழி என்பதும் சத்தியம். அந்த நித்திய வாழ்வை இயேசு ஏற்கனவே வாக்குப்பண்ணிவிட்டார். ஆனால், அதை நம்புகிறோம் என்று சொல்லுகின்ற நாம், அந்த நம்பிக்கையை நமது வாழ்வில் எவ்வளவுதூரம் வெளிப்படுத்துகிறோம்? நித்திய வாழ்வைக்குறித்து நாம் பல காரியங்களை பரிசுத்த வேதாகமத்தில் வாசிக்கிறோம். இந்த வசனங்கள் யாவும் வாக்குத்தத்தங்களுடன் பின்னிப் பிணைந்தே காணப்படுகின்றன. “உங்களுக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணப்போகிறேன்” என்று சொல்லி நித்திய வாழ்வை நிச்சயப்படுத்திய இயேசு, “நான் மறுபடியும் வந்து உங்களைச் சேர்த்துக்கொள்வேன்” என்று வாக்குக் கொடுத்திருக்கிறார். வாக்களித்தவர் வாக்களித்தபடி நிச்சயம் வருவார்.
கிறிஸ்து சிலுவை மரணத்தை ஏற்று, பிதாவுக்கும், நமக்கும் இடையே பிரிக்கப்பட்டிருந்த பாவம் என்ற கொடூர அரக்கனை அழித்து, நம்மைப் பிதாவோடு ஒப்புரவாக்கினார். இந்தக் கிறிஸ்துவை விசுவாசிக்கிறவன், பிதாவோடு நித்திய உறவைப் பெற்றுக்கொள்வதால், இக் குறுகிய வாழ்வைக்குறித்து கலங்க வேண்டியதில்லை. இவ்வுலக வாழ்வில் எவ்வளவுதான் துன்பங்கள் நேரிட்டாலும், இயேசுவோடு நித்தியமாய் வாழுகின்ற வாழ்வை விசுவாசித்து, நாம் பொறுமையோடு ஓடலாமே! அந்த சந்தோஷத்தை நம்பிக்கையோடு நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கலாம். ஏனெனில், அந்த வாக்குறுதியைத் தந்தவர் நமது ஆண்டவரே. அந்த நித்தியமான வாழ்வுக்குள் கடந்து செல்லத்தக்கதாக தேவனுக்கேற்ற வாழ்வு வாழவேண்டியதும், இயேசுவின்மீது கொண்ட விசுவாசத்தில் நிலைத்திருப்பதும் நமது பொறுப்பாக இருக்கின்றது.
ஜெபம்: “ஆண்டவரே, உம்முடன் என்றும் ஜீவிக்கும்படி சீக்கிரமாய் வந்து என்னை உம்முடன் சேர்த்துக்கொள்ளும். ஆமென்.”