மகத்துவமான தேவன்!

அதிகாலை வேளையில்… (மே-ஜுன் 2015)
– Dr.உட்ரோ குரோல்

“மூன்றாம் நாள் விடியற்காலத்தில் இடிமுழக்கங்களும் மின்னல்களும்,
மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காளசத்தமும் உண்டாயிற்று;
பாளயத்திலிருந்த ஜனங்கள் எல்லாரும் நடுங்கினார்கள்” (யாத். 19:16).

இருபத்தோராம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் தொழிற் நுட்பங்கள் அதிகரித்து நல்லொழுக்கங்கள் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதில் சற்றும் சந்தேகமில்லை. உலகின் அறிவியல் சாதனைகள் அதிகரித்துக்கொண்டே போனாலும் பகுத்தறிவு குறைந்துகொண்டே வருகிறது. தூயனவாக ஒரு காலத்தில் எண்ணப்பட்ட நிறுவனங்கள் இப்பொழுது நிந்திக்கப்படுகின்றன. நம்முடைய முன்னோர்கள் மதித்த நம்பிக்கைகளில் பல தற்பொழுது மறக்கப்பட்டும் இகழப்பட்டும் வருகின்றன. கடந்த நூற்றாண்டின் இறுதியில் மிகவும் மதிக்கப்படவேண்டிய காரியங்கள் கேலிக்குரியவைகளாக மாறிவிட்டன. இது மத சம்பந்தமான காரியங்களில் அதிகம் காணப்பட்டது. தேவன் யார், அவரை நாம் எவ்வாறு மதிக்கவேண்டும் என்று கிறிஸ்தவ சபைகளும் மக்களுக்குப் போதுமான அறிவைத் தர மறந்துவிட்டன.

புனித யாத்திரையின் மூன்றாவது மாதத்தில் இஸ்ரவேல் மக்கள் சீன் வனாந்தரத்தில் பிரவேசித்து ஒரு பெரிய மலையின் அடிவாரத்தில் தங்கினர். தேவனுடைய பிரதிநிதியாக மோசே சீனாய் மலைக்கு வரவழைக்கப்பட்டார். இங்கே தாம் இஸ்ரவேலரை பிரத்தியேகமான பொக்கிஷமாக மாற்றப்போவதாக தேவன் மோசேக்கு வெளிப்படுத்தினார். தேவனுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடுத்து கீழ்ப்படியும் பொழுது அவர்கள் ஆசாரியக் கூட்டமாயும் பரிசுத்த தேசமாகவும் இருப்பார்கள் என்று தெரிவித்தார். மோசே கூறியபொழுது அவர்கள் அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர்.

இந்த உடன்படிக்கை மூன்று நாட்களில் செய்யப்பட்டாக வேண்டும். ஆனால் சர்வவல்லவரின் அற்புதமான பரிசுத்தமானது அவரது பிரசன்னத்தை இஸ்ரவேலர் அனுபவிக்க சில ஆயத்தங்களைச் செய்ய வேண்டியதாய் இருந்தது. இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் மாத்திரமே தேவனை தரிசிக்க முடியும். எனவே மோசே அந்த ஜனங்களை இரண்டு நாட்களுக்கு பரிசுத்தமாக்க வேண்டும். ஜனங்கள் தங்கள் வஸ்திரங்களை சுத்தப்படுத்த வேண்டும். இது ஒரு வெளிப்புற அடையாளமாய் இருந்தாலும் உள்ளான சுத்தத்துக்கு ஓர் அடையாளமாக அமைந்திருந்தது. உள்ளான மனந்திரும்புதல், மனம் வருந்துதல் தேவனுக்கு முன்பாக நீதியாக வாழ உண்மையான மனம் விரும்புதல் ஆகிய யாவும் உள்ளத்திலிருந்து புறப்பட வேண்டும். இந்த ஆயத்தத்தை ஒவ்வொரு மனிதனும் தனக்காக செய்யவேண்டும்.

மேலும் தேவனை சந்திக்க பொதுவான ஆயத்தங்களாக வேலி அமைத்தல், தடைகள் உருவாக்குதல் முதலானவை ஜனங்களுக்காக செய்யப்பட வேண்டும். தேவனுடைய அற்புதமான மகத்துவத்தை இஸ்ரவேல் ஜனங்களுக்கு மனதில் பதியச்செய்யவும், அவரைச் சந்திக்கும்பொழுது, காட்டவேண்டிய பயபக்தியையும் உருவாக்க அந்த மலை முழுவதுமே பரிசுத்தம் என அறிவிக்கப்பட்டது. மோசேயும் ஆரோனும் தவிர வேறு யாரும் அந்த வேலி அருகே வருவதற்கோ தொடுவதற்கோ அனுமதிக்கப்படவில்லை.

இத்தனை ஆயத்தங்களுக்குப் பின்னர், “மூன்றாம் நாள் விடியற் காலத்தில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காளசத்தமும் உண்டாயிற்று; பாளயத்திலிருந்த ஜனங்கள் எல்லாரும் நடுங்கினார்கள்” (யாத்.19: 16). இந்த நிகழ்வு இஸ்ரவேல் மக்களுக்கு விவரிக்கமுடியாத ஒரு பயபக்தியை தேவன்மீது ஏற்படுத்தியது.

இஸ்ரவேலின் பரிசுத்தர் ஒரு கார் மேகத்தில் காணப்பட்டார்; ஏனெனில் அவரது பிரசன்னமானது சரீரத்தில் பார்க்கமுடியாத ஒரு மகத்தான தன்மையுடையது. இடிமுழக்கங்களும் மகாபலத்த எக்காள சத்தமும் உண்டானது. எக்காள சத்தத்துக்கு பாளையத்திலிருந்த மக்கள் பயத்தினால் வாயடைத்துப்போயினர். அவர்கள் சர்வவல்லவரின் பரிசுத்தத்தை மதித்து பயபக்தியுடன் அமைதி காத்தனர். முழு மலையும் உச்சி முதல் அடிவாரம்வரை அதிர்ந்தது. மக்கள் அதிசயித்தனர்.

இந்த காட்சி மிகவும் அற்புத மாகவும் பயங்கரமாகவும் இருந்தது. ஆனால் தேவன் இஸ்ரவேலரை நியாயந்தீர்க்க இந்த சீனாய் மலை மீது எழுந்தருளவில்லை. அவர்கள் மீது வேதனையான அழிவை அறிவிக்க வரவில்லை. மாறாக சீனாய் மலையின் உடன்படிக்கை மூலமாக அவர் அவர்களை அன்போடு நெருங்கி வந்தார். புகை, அக்கினி, மேகம், எக்காளம், மின்னல் மற்றும் இடி இவை யாவும் பரிசுத்தமும் சர்வ வல்லமையுள்ள தம்மை இஸ்ரவேல் மக்கள் யாவரும், பயபக்தியுடன் தொழுது கொள்ளவுமே தோன்றின. ஆம் தேவன் நம்முடைய எண்ணங்களுக்கும் மேலான மகத்துவமானவர்.

தேவனைத் துதிப்பது ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய கடமை. எனினும், அவருக்குப் பயந்து அவரை கனப்படுத்துவதே முதற் கடமையாகும். (எபி.12:28,29). இன்றே தேவனை மகிமைப்படுத்தி, அவருடைய பண்புகளுக்காக அவரைத் துதிப்போம்.

அதிகாலைப் பாடல்:
போற்றிடு ஆன்மமே, சிருஷ்டி கர்த்தாவாம் வல்லோரை;
ஏற்றிடு உனக்கு ரட்சிப்பு சுகமானோரை;
கூடிடுவோம், பாடிடுவோம் பரனை
மாண்பாய் சபையாரெல்லோரும்.

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை