ஒரு நீண்ட நாள்!

அதிகாலை வேளையில்… (செப்டம்பர்-அக்டோபர் 2015)
– Dr.உட்ரோ குரோல்

தேவனுடைய வார்த்தைக்கும் விலங்கின உலகில் நிகழும் காரியங்களுக்கும் அநேக ஒற்றுமைகள் இருப் பதை வேதாகம மாணவர்கள் கண்டுகொள்வர். தேவனுடைய சிருஷ்டிகளில் சில உயிரினங்கள் தனித் தன்மைகளுக்கு எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன. தேனீயை நாம் சுறுசுறுப்புக்கு உதாரணமாகக் கூறுகிறோம். ஒருவேளை இதைப் போன்று சுறுசுறுப்புள்ள வேறொரு உயிரினத்தை நம்மால் காணமுடியவில்லை போலும். ஆனால் ஒரு வகை பாடும் பறவையானது காலையில் 2.30 மணிக்கு எழுந்துவிடும். இரவு 9.30 மணி வரை அது தனது கடமைகளை ஓய்வில்லாமல் செய்து கொண்டிருக்கும். அதாவது சுமார் 19 மணி நேரம் அது வேலை செய்கிறது. அவ்வேளையில் அது தனது குஞ்சுகளுக்கு சுமார் 200 முறை ஆகாரம் அளிக்கிறது. தேனீயின் சுறுசுறுப்பைப் போன்றே இப்பறவையும் மிகவும் சுறுசுறுப்புடையது.

தேனீக்களின் சுறுசுறுப்பையும் இப் பறவையின் சுறுசுறுப்பையும் அப். பவுலின் வாழ்க்கையுடன் நாம் ஒப்பிடலாம். தமஸ்குவுக்கு செல்லும் வழியில் இரட்சிக்கப்பட்ட பவுல் தேனீயைப் போலவும், இப்பறவையைப் போலவும் சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பித்தார். “.. சவுல் தமஸ்குவிலுள்ள சீஷருடனே சிலநாள் இருந்து, தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான்” (அப்.9:19,20) என்று வேதாகமம் கூறுகிறது. ஒரு வேளை பவுல், “ஆண்டவரே, நீர் என்னை இரட்சித்தால் அச்செய்தியை இவ்வுலகம் முடிவடையும்வரை கேட்டுக்கொண்டே இருக்கும்” என்று ஜெபித்திருப்பார்.

அப்போஸ்தலருடைய நடபடிகளின் கடைசி அதிகாரத்தில் அப். பவுல் இராயரிடத்தில் விசாரிக்கப்படுவதற்காக ரோமாபுரிக்கு ஒரு கடினமான பயணத்தை மேற் கொண்டார். அங்கு ஒரு வீட்டில் சிறைக்கைதியாக வைக்கப்பட்டார். அது அவருக்கு ஓய்வாகவும் பயணத்தின் சிரமங்களைத் தணித்துக் கொள்ளவும், தன்னைப் பலப்படுத்திக்கொள்ளும் காலமாகவும் இருந்திருக்கலாம். இந்த சூழலில் கிறிஸ்துவைக் குறித்துப் பேசுவது தன்னுடைய வழக்குக்கு பாதகமாக அமைந்து இராயனால் தன்னுடைய ஊழியம் தடைபட்டுவிடும் என்றும் அவர் நினைத்திருக்கலாம். ஆயினும், “அதற்காக அவர்கள் ஒரு நாளைக் குறித்து, அநேகம்பேர் அவன் தங்கியிருந்த வீட்டிற்கு அவனிடத்தில் வந்தார்கள். அவன் காலமே தொடங்கிச் சாயங்காலமட்டும் மோசேயின் நியாயப் பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் இருந்து இயேசுவுக்கடுத்த விசேஷங்களை அவர்களுக்குப் போதித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துச் சாட்சி கொடுத்து விஸ்தரித்துப் பேசினான்” (அப்.28:23).

சிசெரியா பட்டணத்தில் இரண்டு ஆண்டுகள் கைதியாக இருந்தார். அவர் ரோம குடிமகனாக இருந்த மையால் தனது வழக்கை கடைசியாக அவர் இராயருக்கு மேல் முறையீடு செய்தார். ரோமாபுரிக்கு செல்லும் கடற் பயணம் அவருக்கும் மற்றவர்களுக்கும் பெருந்துன்பத்தைக் கொடுத்தது. கடுங்காற்றின் மத்தியில் பதினான்கு நாட்கள் அலைவுபட்டு இறுதியில் அவர்கள் ஒரு கடற் கரையை அடைந்தனர். தன்னுடன் பயணித்தவர்களுடன் கப்பலின் உடைந்த பலகைகள் மற்றும் துண்டுகளின் உதவியால் நீந்திக் கரை யேறினர். இது மட்டுமல்லாது, கடற்கரையில் ஒரு விரியன் பாம்பினால் கடிக்கப்பட்டும் உயிர் பிழைத்தார். மூன்று மாதங்கள் கழித்து தனது பயணத்தைத் தொடர்ந்து ரோமா புரியை அடைந்தார். இவை யாவும் அப்.28:23-க்கு முன்பு நடந்த சம்பவமாகும். கடுமையான விசாரணைக்குப் பின்னர் அவர் ஓய்வு எடுக்கவில்லை.

அன்று காலை தொடங்கி மாலை மட்டும் அவர் போதித்தும் பிரசங்கித்தும் வந்தார். இவ்வளவு நீண்ட காலம் உழைப்பதற்கு யாரும் அவருக்கு ஆலோசனை அளிக்கவில்லை.

தன்னுடைய அப்போஸ்தல ஊழியங்களைத் தக்கவைத்துக் கொள்ளவும், கப்பற்சேதத்தைப் பயன்படுத்தி அதனால் பணம் சம்பாதிக்கவும் அவர் பிரசங்கிக்கவில்லை. அவருடைய செயல்பாடுகள் தேவனுடைய கிருபையை சாட்சியாக அறிவிக்கும் விதமாகவே அமைந்தது. தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து சாட்சியளித்து பிரசங்கித்தும், இயேசுவே வாக்களிக்கப்பட்ட மேசியா என்றும் விளக்கம் அளித்து வந்தார். அவர் இயேசுவை பிரசங்கித்ததே சரியான செய்தி. அதை சரியான விதத்தில் காலை முதல் மாலை வரை செய்து வந்தார்.

தன்னுடைய ஊழியத்தின் இறுதிக்காலம் வரைக்கும் அவர் அயராது உழைத்தார். இதைப் போன்ற கடமையும், வாய்ப்பும் செய்தியும் நமக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. நாமும் தேனீயைப் போலவும், பாடும் பறவையைப் போலவும் உழைக்க வேண்டும். நாள் முழுவதும் அப். பவுலைப் போலவே நாமும் உழைத்து, தேவனுடைய ஊழியத்தை நிறைவாய் செய்தோம் என்று திருப்தியுடன் ஒவ்வொரு நாளையும் முடிப்போமா?

அதிகாலைப் பாடல்:
அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
அற்புத நாதா உம் கரத்தில்
அனைத்தும் உமக்கே சொந்தம் என்று
அன்பரே என்னையே தத்தம் செய்தேன்!

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை