நான் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவன்
தியானம்: நவம்பர் 30 திங்கள்; வேத வாசிப்பு: எண்ணாகமம் 6:22-27
“நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம். அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களில் ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்” (எபேசியர் 1:3).
“மருத்துவமனைக்கு அவசரமாகப் செல்லவேண்டியிருந்ததால் ஞாயிறு ஆராதனை முடியுமுன்பே வந்துவிட்டேன்” என்றார் ஒரு விசுவாசி. “சென்ற வாரம், ‘வழுவாதபடி உங்களைக் காக்கவும்…’ என்று போதகர் வழக்கத்தைவிட அற்புதமாக அளித்த ஆசீர்வாதத்திற்கு நிற்காததால்தானோ சென்ற வாரம் நீர் வழுக்கி விழுந்து, இப்போது ஆஸ்பத்திரிக்கு அலைகிறீர்?” என்றார் மற்றவர்.
வனாந்தரத்திலே அலைந்து திரிந்த இஸ்ரவேலர் தேவனுடைய துணையின்றி வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை தம்மால் நெருங்க முடியாது என்பதை அறிந்திருந்தனர். தங்கள் அடிப்படைத் தேவைகளான உணவு, தண்ணீர், பாதுகாப்புக்காக தேவனையே நோக்கிப் பார்க்க நேர்ந்தது. ஆனால், வாழ்வுக்குரிய ஒழுங்குகளையும் பிரமாணங்களையும் அளித்த தேவன், உணவும் தண்ணீரும் கொடுத்து, அவர்களைப் பெலப்படுத்தவும் தவறவில்லை. இன்றைய வாசிப்புப் பகுதியிலே, இஸ்ரவேலரை ஆசீர்வதிப்பது எப்படி என்று கர்த்தர் மோசேக்குக் கற்றுக்கொடுத்ததை வாசிக்கிறோம். ஆக, ஆசீர்வதிப்பது தேவ சித்தம்! அடுத்தது, அவர் என்ன சொல்லுகிறார்: கர்த்தர் காக்கிறவர்; கர்த்தர் கானானுக்கு வழிநடத்தும்படி கிருபையாய் இருக்கிறார்; அவரே சமாதானம் அருளுகிறவர். பாதுகாப்பு, கிருபை, சமாதானம் இவற்றின் ஊற்றான தேவன் கூடவே இருப்பதே மேலான ஆசீர்வாதம்! இவையின்றி அவர்கள் கானானைச் சேர்ந்திருக்க முடியாது.
இது இஸ்ரவேலருக்கு மாத்திரமல்ல, நமக்குந்தான். இந்தப் பகுதியிலே ‘உன்னை, உன்மேல்’ என்று ஆறு தடவைகள் கூறப்பட்டுள்ளது. ஆகவே, பரம கானானை நோக்கிப் பயணிக்கும் நாமும் இதனைச் சுதந்தரிக்கலாம். யூதாவும் இதனையே குறிப்பிட்டுள்ளார். நம்மைக் காக்கவும், தமது சந்நிதானத்தில் மாசற்றவர்களாய் நம்மை நிறுத்த கிருபையாயும், மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் அருளுகிறவருமாகிய தேவன் நம்மோடிருப்பதே உலகம் என்ற வனாந்தரப் பாதையில் பயணிக்கும் நமக்கு மிகுந்த ஆசீர்வாதத்தைத் தருகிறது.
“வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்காய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும், அவர் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென். ( யூதா 24,25).
தேவ ஆசீர்வாதம் என இதுவரை நாம் நினைத்திருந்தது என்ன? பாதுகாப்பிற்காக சமாதானத்திற்காக யாரை நாடுகிறோம்? ஏற்கனவே சகல ஆசீர்வாதத்தாலும் ஆசீர்வதிக்கப்பட்ட நான் ஏன் தடுமாறுகிறோம்?