காலமே தேவனைத் தேடு!
அதிகாலை வேளையில்… (ஜூலை-ஆகஸ்டு 2016)
– Dr.உட்ரோ குரோல்
வேதபகுதி: சங்கீதம் 108:1-13
வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள், நான் அதிகாலையில் விழிப்பேன் (சங்கீதம் 108:2).
சிலர் வைகறையில் எழுந்திருக்கும் பழக்கம் உடையவராய் இருப்பர். சிலர் இரவில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வார்கள். அதிகாலையில் எழுபவரோ அல்லது இரவு விழித்திருப்பவரோ யாராயினும் நம் இருதயம் தேவன்மேல் உள்ளதா என நம்மை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
“தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக் கீர்த்தனம் பண்ணுவேன்; என் மகிமையும் பாடும்” என்று தாவீது சங்கீதம்108 இல் எழுதியுள்ளார். அதிகாலையில் எழுபவரும், இரவில் விழித்திருப்பவரும் தேவனாகிய ஆண்டவரை அறிந்திருப்பவர்கள். அவர்கள் தம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிக் கலங்காமல் அமைதியான இருதயம் உடையவர்களாய் இருப்பார்கள். நம்முடைய அறிவு, ஆற்றல் ஆக்கத்திறன் இவற்றுடன் நம் உதடுகளும் அவரைப் பாடித் துதிக்கும். அது நமது இருதயத்தை துதிப்பாடலுடன் எழும்ப விடுக்கும் அழைப்பாகும். தாவீது அதிகாலையில் எழுந்தவர்; தான் மாத்திரமல்லாது தனது உதடுகளும் இசைக்கருவிகளும் அதைப் போன்று துதிகளைப் பாடவும் தீர்மானித்திருந்தார். ஆதலால் அவர் “வீணையே, சுர மண்டலமே, விழியுங்கள்” என்று அழைக்கிறார். தேவனுடைய துதிகளைத் தாம் மாத்திரம் பாடுவதுடன் நில்லாது தனது விரல்களையும் இசைக்கருவிகளின் நரம்புகளை மீட்டிப் பாடுவதில் விருப்பமுடையவராய் இருந்தார்.
ஆனால் அவருடைய துதியின் இரகசியம் அவருடைய குரலிலோ வீணையிலோ சுரமண்டலத்திலோ இல்லை. அது தேவனைத் துதிக்க தன் இருதயத்தை அழைத்துக்கொண்டதில் இருந்தது. பூரண மாற்றமடைந்த ஓர் ஆத்துமா தேவனைப் பாடும்பொழுது மட்டுமே அப்பாடல் தேவனால் ஏற்றுக்கொள்ளப்படும். “வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள், நான் அதிகாலையில் விழிப்பேன்” (சங்.108:2). ஆதவனின் கதிர்கள் தோன்றுமுன்னர் தேவனைத் துதிக்கும் அவருடைய பாடல்கள் எழும்பும். ஒரு நாளின் மிகச் சிறந்த பிரகாசமான நேரத்தில் சங்கீதக்காரன் மகிழ்ச்சியுடன் எழும்பி தேவனைத் துதிக்கிறார். தாம் மாத்திரம் அதிகாலையில் எழுந்து தேவனைத் துதிப்பதுடன் மட்டுமல்லாமல் அவரது சரீரத்தின் ஒவ்வொரு நரம்பையும் எழுப்புகிறார். ஒரு சிலர் காலையில் எழும்பி கடமைக்கென அரைமனதுடன் தேவனைத் துதிக்கின்றனர். இவர்கள் பாடல்களை அரைகுறை தூக்கத்துடன் இழுத்து இழுத்து பாடுகின்றனர். சிலர் அதிகாலையில் எழுந்து துதித்தாலும் அவர்களுடைய எண்ணங்கள், மொழிகள் மற்றும் சரீரத்தில் விழித்திருப்பதில்லை. அதிகாலையில் எழும்பி தேவனைப் பிரியப்படுத்த விரும்புவோர் தேவனைத் துதிக்கும் முன்னர் தாம் முற்றுமாக விழித்திருப்பதை உறுதிசெய்து கொள்ளவேண்டும். இல்லையெனில் அவர்களுடைய அதிகாலைத் துதி வெறும் ஒரு சடங்காகவே இருக்கும்.
வைகறையில் எழுந்து தேவனுடன் நேரம் செலவழிப்பது ஓர் அற்புதமான உணர்வு. ஆனால் அநேக வேளைகளில் நம்முடைய காலை ஜெபமானது சோர்வு, தூக்கம், அரை குறை விழிப்பு இவற்றால் நிரம்பியுள்ளது. நம்முடைய அனுதின தியான நேரத்தில் தேவனைச் சந்திக்க விழிப்புடன் ஆயத்தமாயிருக்கிறோமா என்று உறுதி செய்துகொள்ள வேண்டும்.
ஹென்றி வார்ட் பீச்சர் என்பவர் கனெக்டிகட் மாகாணத்திலுள்ள லிட்ச் பீல்டு என்ற இடத்திலுள்ள தனது தகப்பனாரின் பண்ணையில் வேலை செய்த ஒருவரைப் பற்றி எழுதியுள்ளார். “அவருக்கு ஒரு சிறிய அறை இருந்தது. அதன் ஒரு மூலையில் ஒரு சிறிய கட்டிலும் இருந்தது. சிறுவனாக இருந்த நான் அதில் படுத்துக்கொண்டு அவருடைய தியான வேளையை கவனித்து வந்தேன். முதலாவதாக அவர் புதிய ஏற்பாட்டுப்பகுதி ஒன்றினை வாசிப்பார். நான் அந்த அறையில் இருப்பதைக் கண்டுகொள்ளமாட்டார். பின்னர் அவர் ஜெபம்பண்ணி பாடல்களைப் பாடி நகைப்பார். வேதாகமத்தை அந்த அளவுக்கு மகிழ்ச்சியுடன் வாசிக்க முடியுமா என்று நான் அதுவரை கண்டதில்லை. அவருடைய ஜெபவேளை எனது வாழ்வில் ஆழமான தாக்கத்தை உண்டு பண்ணியது. அவருடைய செயல்கள் சரியானவையா என நான் சிந்தித்த தில்லை. ஆனால் ‘இம் மனிதர் இவ்வாறாக மகிழ்ச்சியுடன் செய்கிறார்’ என்றே நான் சிந்தித்ததுண்டு.
ஜெபநேரம் அதி இன்பமான நேரமாக இருக்கும் என்பதை எனது தாயார் மற்றும் தகப்பனாரிடமிருந்து நான் கற்றுக்கொண்டதைவிட இம் மனிதரிடமிருந்து அதிகமாக அறிந்து கொண்டேன். அதில் மகிழ்ச்சியும் நன்றியும் நிரம்பிவழியும் என நான் கண்டுகொள்ள அவர் உதவி செய்தார்” என்று குறிப்பிடுகிறார்.
தாவீதின் இருதயம் தேவன்மேல் நிலைத்திருந்தது அவரைத் துதிக்க அதிகாலையில் எழும்புவதில் ஆச்சரியமில்லை. நமது சிந்தனையும் இசைக் கருவிகளும் ஆயத்தமாக இருந்தாலும் நாம் ஆயத்தமாக இல்லையெனில் நமது அதிகாலை துதி ஆண்டவரை அவமதிப்பதாகும்.
நாம் எப்பொழுதும் விழித்திருந்து ஆயத்தமாகி அதிகாலையில் எழுந்து ஆண்டவரைத் துதிப்போமாக. நமது ஜெபத்தை அவர் கேட்கவேண்டுமெனில் நமது ஜெபவாழ்வு அர்த்தமுள்ளதாகவும் மகிழ்ச்சியுடையதாகவும் இருக்கவேண்டும். “தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்திரும்; உமது மகிமை பூமியனைத்தின் மேலும் உயர்ந்திருப்பதாக” (சங்.108:5).
அதிகாலைப் பாடல்:
காலை விழிப்பே கர்த்தரின் சாயல்
கண்களும் செவியும் காத்திருக்கும்
பாதம் அமர்ந்து வேதமே ருசித்து
கீதங்கள் பாடியே மகிழ்ந்திடுவேன்.
மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை