அர்த்தமுள்ள அர்ப்பணிப்பு
அதிகாலை வேளையில்… (மார்ச்-ஏப்ரல் 2017)
– Dr.உட்ரோ குரோல்
“மோசே கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் எழுதிவைத்து, அதிகாலமே எழுந்து, மலையின் அடியில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்ரவேலுடைய பன்னிரண்டு கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே பன்னிரண்டு தூண்களை நிறுத்தினான்” (யாத்.24:4).
தேவனிடம் நம்மை அர்ப்பணிப்பதற்கு தீமையிலிருந்து விலகுதல், தேவனிடம் உண்மையான பக்தி கொள்ளுதல், தொடர்ச்சியான பரிசுத்தத்தை நாடுதல் ஆகியன அவசியம். தம்முடைய பிள்ளைகள் யாவரும் தம்முடைய ஊழியத்துக்கு முழு அர்ப்பணம் செய்யவேண்டும் என்று அவர் விரும்பினாலும் அது “அர்த்தமுள்ளதாய்” இருக்கவேண்டும் (ரோம. 12:1) என்று வாஞ்சிக்கிறார். உணர்ச்சிகளால் உந்தப்பட்டோ, தற்காலிக ஆர்வத்தினாலோ செய்யப்படும் அர்ப்பணிப்பு நம்பத்தகுந்ததல்ல. ஒரு விசுவாசி மிகவும் கவனத்துடனும், ஜெபத்துடனும் சீடத்து வத்தின் ஆபத்துக்களை உணர்ந்து, தனது வாழ்வை ஆண்டவரின் ஊழியத்துக்கு அர்ப்பணிக்க வேண்டும்.
மோசேக்கு சீனாய் மலையில் தேவன் நியாயப்பிரமாணங்களைக் கொடுத்த பின்னர் அதனை இஸ்ரவேலருடன் உறுதிப்பாடு செய்ய தேவன் விரும்பினார். எனவே மோசே மீண்டும் அப்பரிசுத்த மலைக்கு ஆரோன், நாதாப், அபியூ மற்றும் இஸ்ரவேலின் மூப்பர்கள் எழுபது பேருடன் ஏறிச் சென்றார். அவர்கள் கீழே இறங்கி வந்தபின்னர் மோசே இஸ்ரவேலின் ஜனங்களுக்கு தேவனுடைய உடன்படிக்கையின் கட்டளைகள் யாவையும் விவரித்துச் சொன்னார். அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் ஏகசத்தமாய்: கர்த்தர் அருளின எல்லா வார்த்தைகளின்படியும் செய்வோம் என்று பிரதியுத்தரம் சொன்னார்கள். ஆனால் மோசேயோ தேவனுடைய நியாயங்களுக்கு உடனடியாகத் தங்களை அர்ப்பணிக்கமாட்டார்கள் என்பதை அறிந்துகொண்டார். எனவே அவர் அந்த அர்ப்பணிப்பை அர்த்தமுள்ளதாக்க திட்டமிட்டார்.
முதலாவதாக, அந்த அர்ப்பணிப்பு நிகழ்வை வேண்டுமென்றே நீட்டித்தார். உடனடியாக ஜனங்கள் அந்த உடன்படிக்கையை உறுதி செய்வதற்கு அனுமதிக்கவில்லை. மாறாக அந்த தேவமனிதர் கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் எழுதி வைத்துவிட்டு உறங்கச்சென்றார். அவர் அதிகாலையில் எழும்பி (யாத். 24:4), இந்த பலிபீடம் பலிசெலுத்துவதற்காகக் கட்டப்பட்டது. பலியில்லாமல் எந்த உடன்படிக்கையும் உறுதி செய்யப்பட மாட்டாது. உடன்பாட்டை உறுதி செய்வதற்கு முன்பாக மக்களை ஒருநாள் காத்திருக்க வைத்தார். இதனால் இஸ்ரவேலர்கள் உணர்ச்சிகளால் தாக்கப்படாது அந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ள முடிந்தது.
இரண்டாவதாக, மக்கள் தங்களை அர்ப்பணிக்கவும் உடன்படிக்கையை உறுதிசெய்யவும் சில ஆழமான சடங்குகளைச் செய்தார். லேவியர்களின் பணி ஒதுக்கப்படாததால் அவர் இஸ்ரவேல் புத்திரர்களின் வாலிபர்களைத் தெரிந்தெடுத்து, (இவர்கள் அந்தந்த வம்சத்து முதற்பேறானவர்களாயிருக்கலாம்) அவர்கள் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி, கர்த்தருக்குச் சமாதானபலிகளாகக் காளைகளைப் பலியிட்டார்கள். இது இஸ்ரவேலர்கள் எளிதில் மறக்க இயலாததாயும் பயபக்தியை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைந்தது.
மூன்றாவதாக, இந்த உடன்படிக்கையின் வார்த்தைகள் மக்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக அதிக பிரயத்தனம் எடுக்கப்பட்டது. தங்களுடைய அர்ப்பணிப்பின் காரியத்தையும் அதன் பொருளையும் அவர்கள் அறிந்துகொள்ளவில்லை எனில் அந்த அர்ப்பணிப்பு அர்த்த மற்றதாகிவிடும். மலையிலிருந்து இறங்கிய மோசே கர்த்தருடைய வார்த்தையை மக்களுக்கு அறிவித்ததுமன்றி, மறுநாள் ஜனங்கள் அனைவரும் கேட்குமாறு உடன்படிக்கை புஸ்தகத்தை வாசித்தார். மக்களுடைய அர்ப்பணிப்பு பூரணமாய் அமையவேண்டும் என்பதில் மோசே மிகக் கவனமாய் இருந்தார்.
இறுதியாக மோசே பலியின் இரத்தத்தை எடுத்து அதனை ஜனங்களின்மேல் தெளித்து “இந்த வார்த்தைகள் யாவையுங்குறித்து கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கையின் இரத்தம் இதுவே” என்றான். இந்த உடன்படிக்கையை முத்திரை போட்டது இரத்தமே. இது உடன்படிக்கையின் அடையாளமாய் அமைந்தது. தாங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் என்பதையும் அவருக்கு அர்ப்பணிக்கப் பட்டவர்கள் என்பதையும் இச்செயல் மக்களின் மனதில் அழுத்தமாகப் பதிக்க உதவியது.
அர்ப்பணிப்புள்ள வாழ்வு வாழ வேண்டுமானால் அது அர்த்தமுள்ளதாயும், அறிவுள்ளதாகவும் சிந்தித்து எடுக்கப்பட்டதாகவும் இருக்கவேண்டும். நம்மை தேவனுக்கும் அவரது ஊழியத்துக்கும் அர்ப்பணிக்க எடுக்கப்படும் தீர்மானம் உணர்ச்சியின் அடிப்படையில் அமையாமல் அறிவின் அடிப்படையில் அமையவேண்டும். ஒரு விசுவாசி தனது வாழ்வை தேவனுக்கு அர்ப்பணிப்பது அவசியமானது. ஆனால் அதை அலட்சியமாக கருதக்கூடாது. இன்று உங்களுடைய வாழ்வை தேவனுடைய ஊழியத்துக்கென்று ஒப்புக் கொடுப்பதற்கு முன் அதனால் ஏற்படும் இழப்புகளை எண்ணிப் பாருங்கள்.
ஏனெனில் ‘கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப் பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல’ (லூக்கா 9:62).
அதிகாலைப் பாடல்:
அனைத்தும் கிறிஸ்துவுக்கே
எந்தன் அனைத்தும் அர்ப்பணமே
என் முழுதன்மைகள் ஆவல்களும்
அனைத்தும் கிறிஸ்துவுக்கே.
மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை