ஆசிரியரிடமிருந்து…

(மார்ச் – ஏப்ரல் 2019)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த மீட்பர் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

சத்தியவசன ஊழியத்தை தங்கள் ஜெபத்தாலும் ஆதரவான காணிக்கையாலும் தாங்கி வருகிறமைக்காக அதிக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். கடந்த 2018 ஆம் ஆண்டு பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்தவர்களின் பெயர்களை இவ்விதழில் பிரசுரித்துள்ளோம். அவர்களுக்கு எமது பாராட்டுக்களைத் தெரிவிக்கிறோம். பள்ளி அராசங்கத்தேர்வு எழுதப்போகும் தங்கள் பிள்ளைகளுக்காக வேண்டுதல் செய்கிறோம். நமது பங்காளர் குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் எழுதவிருக்கும் தேர்வு விவரங்களை எங்களுக்கு தெரிவித்தால் நாங்கள் அவர்களுக்காக பாரத்தோடு ஜெபிப்போம்.

இம்மாதத்தில் தபசு நாட்களுக்குள் பிரவேசிக்க இருக்கிறோம். லெந்து நாட்களில் நடைபெற உள்ள சிறப்புக்கூட்டங்களை பற்றிய விபரங்கள் 79ஆம் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியிலுள்ள பங்காளர்கள் இக்கூட்டங்களில் பங்குபெற்று ஆசீர்வாதம் பெற அன்பாய் அழைக்கிறோம். சத்தியவசன ஊழியத்தை தங்களது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அறிமுகப்படுத்த விரும்பும் பங்காளர்கள் அவர்களது விலாசத்தை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இவ்வூழியத்தின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

இவ்விதழில் சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் மார்ச் 1-5 தியானங்களையும், மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரையிலான தியானங்களையும் எழுதியுள்ளார்கள். ஏனைய தியானங்களை சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதியுள்ளார்கள். நாம் வருடந் தோறும் அனுசரித்து கடந்துசெல்கிற பாராம்பரிய நாட்களாக இந்நாட்கள் இராமல் கிறிஸ்துவின் பாடு, மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றை நம் வாழ்வின் அனுபவங்களாக மற்றவர்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதையே இத்தியானங்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. தியானங்கள் ஒவ்வொன்றும் உங்களது தனிப்பட்ட குடும்ப தியான நேரங்களில் அதிக பயனுள்ளதாகவும் ஆசீர்வாதமாகவும் இருக்க ஜெபிக்கிறோம். தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளுக்காக ஜெபிக்கவும் அன்பாய் கேட்கிறோம்.

சத்தியவசன விசுவாச பங்காளர்கள் சந்தாதாரர்கள் யாவருக்கும் ஈஸ்டர் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்