விசுவாசத்தின் சோதனை!

அதிகாலை வேளையில்… (மார்ச்-ஏப்ரல் 2020)
– Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி: யோபு 24: 1-25


கொலைபாதகன் பொழுது விடிகிறபோது எழுந்து, சிறுமையும் எளிமையுமானவனைக் கொன்று இராக்காலத்திலே திருடனைப்போல் திரிகிறான். (யோபு 24:14)


நீண்ட சோதனை காலத்தில் யோபுவின் சிந்தனையை ஆழமாக ஒரு காரியம் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. மனிதர் அனைவரும் பாவிகள் என்றும் தேவனுடைய நீதியுள்ள தண்டனைக்கு உரியவர்கள் என்பதையும் அவர் நன்கு அறிந்திருந்தார். எனவே பாவத்தைப் பற்றிய உணர்வை வெளிப்படையாகத் தெரிவித்தார். தினமும் தேவனுக்கு பலி செலுத்திவந்ததுடன் தேவனுக்குப் பிரியமானதாக தனது வாழ்வையும் அமைத்திருந்தார். யோபுவின் மறைமுகப் பாவங்களின் விளைவே அவருடைய துன்பங்களுக்குக் காரணம் எனவும், அதை அறிக்கையிட்டால் தேவன் அவரது பாடுகளிலிருந்து விடுதலை அளிப்பார் என்றும் அவருடைய மூன்று நண்பர்களும் ஆலோசனை கூறினர். ஆனால் தன்னிடத்தில் மறைமுகப் பாவம் எதுவும் இல்லை என்றும் தனது பாடுகளுக்குக் காரணம் தன்னுடைய தேவபக்தியே என யோபு ஆழமாக நம்பினார். அவருடைய மனம் குழப்பத்தில் இருந்ததேயொழிய வெளிப்படையான பாவத்தால் முறிந்து போகவில்லை.

மனிதனுடைய அறிவீனமான மனதைப் பற்றிய யோபுவின் அறிவு இறையியலைப் பொறுத்து சரியானதே. தேவனிடமிருந்து பாவத்தை மறைக்க முடியாது என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். தகப்பனில்லாத பிள்ளைகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வது, ஏழைகளுக்கு இரங்காமல் இருப்பது, காட்டுக்கழுதைகள்போல அதிகாலமே எழுந்து சிறுமையும் எளிமையுமானவனைக் கொன்று, ஒருவரும் அதனைக் காணவில்லை என்று எண்ணுவதே மனிதனுடைய கேடான மனம் (யோபு 24:14). விடியுங்காலமும் அவர்களுக்கு மரண இருள் போல் இருக்கிறது (யோபு 24:17).

ஏனெனில் இரவின் இருளில் அவர்கள் செய்திருந்த தீயகாரியங்களை சூரிய உதயமானது வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறது. தான் இவ்விதமாய் நடந்துகொள்ளவில்லை என்பதை யோபு நன்கு அறிந்திருந்தார். தீயவர்களை தேவன் பாடுகளால் தண்டிப்பார்; ஆயினும் நீதிமான்களும் அதே விதமாய் துன்பப்படுவதன் காரணத்தை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. யோபு தேவனுக்கு முன்பாக உத்தமனாகவும் சன்மார்க்கனாகவும் வாழ்ந்து வந்தார். ஆயினும் அவர் இத்துன்பங்களை அனுபவிக்க தேவன் ஏன் அனுமதித்தார்? இது அவருக்கும் ஒரு புதிராக இருந்தது.

இந்தியாவுக்கு அருட்பணியாளராக வந்த வில்லியம் கேரியின் வாழ்விலும் இதைப் போன்ற ஒரு சூழ்நிலை வந்தது. அவர் தனது பணியை அரம்பித்தவுடன், அதற்கு உதவும்படி இங்கிலாந்தில் அவருடைய ஆதரவாளர்கள் ஓர் அச்சுப்பொறியை அனுப்பி வைத்தனர். அதன் விளைவாக இந்தியாவில் வினியோகிப்பதற்காக பரிசுத்த வேதாக மத்தின் சில பகுதிகளை அச்சடிக்க ஆரம்பித்தனர். ஒருநாள் அவர் வெளியூர் சென்றிருக்கும் காலத்தில் ஏற்பட்ட ஒரு பயங்கர தீ விபத்தில் கேரியின் சாதனைகள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. அக்கட்டிடம், அச்சகம், வேதாகமங்கள், அவர் அநேக ஆண்டுகளாக பிரயாசப்பட்டு எழுதிய கையெழுத்துப் பிரதிகள், இலக்கணங்கள் மற்றும் அகராதிகள் யாவும் எரிந்து அழிந்தன. ஊருக்கு திரும்பிய கேரியிடம் அவருடைய உதவியாளர் சந்தித்து அப்பயங்கர தீ விபத்து செய்தியைக் கண்ணீருடன் கூறினார்.

அதனைக் கேட்ட கேரி கோபப்படவோ மன சஞ்சலமடையவோ இல்லை. மாறாக அவர் முழங்காற்படியிட்டு தேவனுக்கு நன்றி கூறினார். அக்காரியங்கள் அனைத்தையும் மீண்டும் செய்யும் பெலன் தனக்கு இருப்பதற்காக தேவனைத் துதித்தார். தன்னுடைய இழப்புகளையே எண்ணிக் கலங்காமல் உடனடியாக அவ்வேலைகளை மீண்டும் ஆரம்பித்தார். தேவ ஆவியானவருடைய வழிகாட்டுதலின்படி தனது வாழ்க்கை முடியுமுன்பதாக அவர் தன்னுடைய சாதனைகளை மறுபடியும் எழுதி முடிக்கவும், பழையவற்றைவிட சிறப்பான இலக்கணங்கள், அகராதிகள் மற்றும் வேதாகம மொழி பெயர்ப்புகளை விரைவில் வெளிக்கொணர்ந்தார்.

யோபு கற்றுக்கொண்டவற்றை வில்லியம் கேரியும் கற்றுக்கொண்டார். இரகசிய பாவத்தினால் மட்டுமே அழிவு வருவது கிடையாது. சில நேரங்களில் பக்தியற்றவர்களைப் போலவே பக்தியுள்ளவர்களும் துன்புற தேவன் அனுமதிக்கிறார். நம் விசுவாசத்தின் சோதனை பொறுமையை உண்டாக்குகிறது. யோபுவின் உபத்திரவங்களே அவருக்கு பொறுமையைக் கற்றுக்கொடுத்தது; நமக்கும் அக்காரியம் ஆறுதலை அளித்து வருகிறது.

நம்முடைய வாழ்வில் நேரிடும் அனைத்து பேரிடர்களையும் தைரியம் மற்றும் பொறுமையுடன் எதிர்கொள்ளுவோமாக. பாவத்திலிருந்து விடுதலைபெற்ற ஒரு வாழ்வை நடத்தி “ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்” என்று யோபு பக்தனுடன் சேர்ந்து கூறுவோம் (யோபு 23:10).


அதிகாலைப் பாடல்:

என்னை நம்புவோர்க்கு உண்மையாக இருப்பேன்;
என்னை நேசிப்போர்க்கு பரிசுத்தமாய் இருப்பேன்;
உபத்திரவங்கள் மத்தியில் திடமாய் இருப்பேன்;
சவால்களை சந்திக்க தைரியமாய் இருப்பேன்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை