முதுமையின் பயம்!
தியானம்: 2020 நவம்பர் 29 ஞாயிறு | வேத வாசிப்பு: சங்கீதம் 71:1-24
முதிர்ந்த வயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும் (சங்கீதம் 71:9).
“உங்கள் பாட்டி எப்படி இருக்கிறார்கள்” என ஒருவரிடம் விசாரித்தபோது, அவர்,“பாட்டியின் சகோதரர் எல்லாருமே எண்பது வயதில் இறந்துவிட்டார்களாம் ஆதலால் இப்பொழுது தனக்கும் எண்பது ஆகிவிட்டது நானும் இறந்துவிடுவேன் என்று சொல்லி பயத்தினால் நித்தமும் புலம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அதற்காகவே வெளிநாட்டிலிருக்கிற மகன் பாட்டியைப் பார்ப்பதற்காக வர இருக்கிறார்” என்று ஒரு பெரிய கதை சொன்னார். முதுமை பலருக்கு பயத்தை ஏற்படுத்து வதை மறுக்கமுடியாது.
71ஆம் சங்கீதத்தை எழுதியவர், ஒரு மனிதனுடைய வாழ்வில் அவனது குழந்தைப் பருவத்திலிருந்து முதிர்வயது வரைக்கும் தேவனே நமக்கு உறுதுணை என்பதையும், நமது வாழ்வுதான் அவருக்குச் சாட்சி என்பதையும் அழகாகப் பாடி வைத்துள்ளார். சிறுவயது முதல் தேவனே தனக்கு துணையாகவும், நம்பிக்கையாகவும் இருந்துவந்தார் என்று அவர் தனது நம்பிக்கையைத் தெளிவாக அறிக்கையிட்டுள்ளார். அவர் தனது முதிர்வயதில் தான் செய்யும் ஊழியத்தைக் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். “இந்தச் சந்ததிக்கு உம்முடைய வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், நான் முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக” (வச.18) என்று ஜெபிக்கிறார்.
தேவனுடைய பிள்ளைகளுக்கு வயது ஒரு தடையே அல்ல. சிறுவயதோ முதிர்வயதோ எந்த வயதினராயினும், தேவன் நம்மோடிருக்கிறார் என்ற நம்பிக்கையும், தேவன்மீது பற்றுதலும், தேவனின் மகத்துவத்தை பிறருக்கு அறிவிக்க வேண்டும் என்ற தாகமும் இருக்குமானால் தேவன் நிச்சயம் நம்மைப் பயன்படுத்துவார். முதிர்வயதின் பெலவீனம் நம்மை வருத்தினாலும், இருந்த இடத்தில் இருந்தே நாம் தேவனுக்கு ஏராளமான பணி செய்யலாம். ஏனென்றால் தேவன் பெலப்படுத்துகிறவர். இன்று முதுமை வந்ததும் அதனுடன் சேர்ந்து, இனி என்னவாகுமோ என்ற பயமே அநேகரையும் வருத்துகிறது. எப்ப சாவு வருமோ என்ற எண்ணம் வேறு! நம்மில் யாராவது அப்படியான ஒரு நிலையில் இருக்கிறீர்களா? என்னால் ஒன்றுமே முடியாது என்று சோர்ந்துபோய் அமர்ந்துவிட்டீர்களா? கர்த்தருக்காய் எழும்பிடுங்கள். தேவன் உங்களைக்கொண்டும் பெரிய காரியம் செய்வார். நான்கு சுவர்களுக்குள் நாம் செய்கின்ற ஜெபம், பகிரங்க ஊழியத்தைவிடவும் அதிக பலனைத் தருமல்லவா! ஆகவே, வயதை மறந்து தேவபெலனைத் தரித்துக்கொண்டு தேவபணி செய்வோமாக.
அவர்கள் முதிர்வயதிலும் கனிதந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள் (சங்.92:15).
ஜெபம்: பெலனாகிய கர்த்தாவே, முதுமையின் பயத்தோடு உள்ள ஒவ்வொருவருக்காகவும் ஜெபிக்கிறோம். தாங்குவேன், ஏந்துவேன், சுமப்பேன், தப்புவிப்பேன் என்றீரே. உமது கரத்திலே எங்களை ஒப்புவிக்கிறோம். ஆமென்.