இயேசு ஜீவிக்கிறார்!

அதிகாலை வேளையில்…
(மே-ஜுன் 2021)
Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி: மாற்கு 16:1-20


வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார். அவளிடத்திலிருந்து அவர் ஏழு பிசாசுகளைத் துரத்தியிருந்தார் (மாற்.16:9,10).


முதல் ஈஸ்டர் நாளின் அதிகாலை யிலே மிகவும் வியக்கத்தக்க ஒரு நிகழ்வு நடந்தது. அது தேவன், இயேசுகிறிஸ் துவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினது ஆகும். தேவன் தம்முடைய சிறப்பான காரியங்களை அதிகாலையிலே செய்வது வழக்கம். ஆனால் அந்த குறிப்பிட்ட காலையில் மிகவும் அதிசிறப்பான ஒரு காரியத்தை நடப்பித்தார். இயேசு உயிர்த்தெழுந்த பின்னர் ஆண்டவரின் தரிசனங்கள் தேவனுடைய வல்லமையான ஆற்றலை வெளிப்படுத்தின.

உயிர்த்தெழுந்த ஆண்டவரின் மூன்று தரிசனங்கள் மாற்கு 16ம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. “பதினொருவரும் போஜன பந்தியிலிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமாகி” என்று வசனம் 14 அறிவிக்கிறது. தோமாவைத் தவிர மற்ற சீடர்கள் ஒன்று கூடியிருந்தனர். இயேசுகிறிஸ்து உயிரோடிருக்கிறார் என்ற அறிக்கைகளை அவர்கள் நம்பவில்லை. ஆனால், சீடர்கள் கூடியிருந்த அந்த பூட்டப்பட்ட அறைக்குள்ளே இயேசு பிரவேசித்தார். அவர்கள் ஓர் ஆவியைக் காண்கிறதாக எண்ணி பயந்து கலங்கினார்கள். இயேசு அவர்களது அவிசுவாசத்தைக் குறித்தும் இருதய கடினத்தைக் குறித்தும் அவர்களைக் கடிந்துகொண்டார். ஆனாலும், “நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” (வசனம் 15) என்ற கட்டளையை அவர்களுக்குக் கொடுத்தார். அந்த மாபெரும் உயிர்த்தெழுந்த நாளின் கடைசி தரிசனம் இதுவே.

இந்நிகழ்வுக்கு முன்னதாக அவர் எம்மாவு கிராமத்துக்குச் செல்லும் வழியில் வேறு இருவருக்கு தரிசனமானார். மாற்கு நற்செய்தியாளர் அச்சந்திப்பை வெகு சுருக்கமாகத் தந்தாலும் லூக்கா நற்செய்தியாளர் தன்னுடைய நூலில் மிகவும் சுவாரசியமாக விவரித்துள்ளார். கிலெயோப்பாவும் மற்றொருவரும் இயேசுவின் காலியான கல்லறையைப் பார்த்த பின்னர் எருசலேமுக்கு சுமார் ஏழு மைல் தூரமான எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போனார்கள்.

அவர்கள் பேசிக்கொண்டு நடந்து போகையில் இயேசுதாமே அவர்களுடனே சேர்ந்துகொண்டார். அவர்கள் அவரை கிலெயோப்பாவின் வீட்டுக்கு அழைத்தனர். அவரை உயிர்த்தெழுந்த ஆண்டவர் என்று அவர்கள் அறியாதிருந்தார்கள். “மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக் குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்” (லூக்.24: 27). உயிர்த்தெழுந்த ஆண்டவரைச் சந்தித்தோம் என்று மற்றவர்களுக்கு அவர்கள் அறிவித்தபொழுது அதனை மற்ற சீடர்கள் நம்புவது கடினமாயிருந்தது.

ஆனால், உயிர்த்தெழுந்த இயேசு யாருக்கு முதன்முதல் தரிசனமானார்? முதல் நூற்றாண்டின் கிறிஸ்தவ பிரதான போதகரான பேதுருவுக்கோ இயேசு அதிகமாய் நேசித்த சீடனான யோவானுக்கோ அல்ல. தன் மேலுள்ள பக்தியில் சிறந்து விளங்கியவரும், அர்ப்பணிப்பில் எவரும் மிஞ்சமுடியாதவருமான ஒரு பெண்ணுக்கே உயிர்த்தெழுந்த இயேசு முதன் முதலில் தரிசனமானார். இவ்வித மேன்மையைப் பெற தகுதியற்ற ஒருவருக்கே காட்சியளித்தார்.

ஏனெனில் “வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு எழுந்தி ருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார். அவளிடத்திலிருந்து அவர் ஏழு பிசாசுகளைத் துரத்தியிருந்தார்” என்று மாற்கு 16:9 கூறுகிறது. அவள் ஓர் அப்போஸ்தலர் அல்லர்; மேலும் வேதபுத்தகத்தில் ஒரு வரியும் எழுத தேவன் அவளை உபயோகப்படுத்தவில்லை; ஆனாலும், அவளிடமிருந்த பிசாசுகளை இயேசு துரத்தினபின்பு அவள் இயேசுவைப் பின்பற்றி சீடர்களின் கூட்டத்தோடு இணைந்துகொண்டாள். தங்களுடைய ஆஸ்திகளால் அவருக்கு ஊழியங்செய்துவந்த மற்ற பெண்களுடன் அவளும் சேர்ந்துகொண்டாள் (லூக்கா 8:1-3). ஆண்டவர் அவளது குறைவற்ற பக்தியைக் கண்டு அவளுக்கு மிகச்சிறந்த பேற்றினை அளித்தார்.

ஆண்டவருடைய ஊழியத்தில் நாம் என்ன செய்கிறோம் என்பது முக்கியமல்ல; நாம் எந்த அளவு அன்புடன் செய்கிறோம் என்பதே முக்கியம். சீடர்களைப்போல மரியாள் பயன்படுத்தப்படவில்லை; திருச்சபையின் முதல் நூற்றாண்டின் மாபெரும் தலைவர்களில் ஒருவராகவும் அவள் கருதப்படவில்லை. எனினும் இயேசு உயிர்த்தெழுந்தபின் மகதலேனா மரியாளுக்கே முதன்முதலாக தரிசனம் தந்தார்.

ஏனெனில், நசரேயனாகிய இயேசு உயிர்த்தெழுந்தார் என்ற செய்தியை பேதுருவுக்கும் யோவானுக்கும் அறிவித்த பிறகு அவள் கல்லறைக்கு வந்து வெளியே நின்று கண்காணித்துக் கொண்டிருந்தாள். இந்த சாதாரண பெண்மணியின் பக்தியைப்போல் நம்முடையது இருக்கிறதா? நாம் என்ன ஊழியம் செய்கிறோம் என்பதை விட அவரை எவ்வாறு நேசிக்கிறோம் என்பதே முக்கியம்.


அதிகாலைப் பாடல்:

எனக்காக மரித்தார் எனக்காக உயிர்த்தார்
கல்லறையினின்று அவர் எனக்காக எழுந்தார்
மரணத்தின் கூரை ஒடித்து வெற்றி சிறந்தார்
எனவே பாதாளம் இனி என்னை மேற்கொள்ளாதே

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை