காகங்களின் இறக்கைகளின் மேல்

தியானம்: 2021 மே 1 சனி | வேத வாசிப்பு: 1இராஜாக்கள் 17:2-5

அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய், அங்கே உன்னைப் போஷிக்கக் காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார்  (1ராஜா.17:4).

ஒரு மனிதன் ஒரு ரோல்ஸ் ராயிஸ் கார் வாங்க விரும்பினார். பல மாதங்களாக விரும்பி, சிந்தித்துத் திட்டமிட்டு, கடைசியில் அங்கிருந்த கார் டீலரிடம் சென்று தாம் வாங்க விரும்பிய கார் பற்றிய விபரங்களையெல்லாம் கேட்டறிந்தவன், காரின் விலையையும் கேட்டறிந்தான். பின்னர் கார் பற்றிய முக்கியமான சில தகவல்களையும் கேட்டுக் கொண்டான். அவன் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் விடை கிடைத்தன. ஒரேயொரு கேள்விக்குமட்டும் அந்த டீலருக்கு விடை தெரியவில்லை. அவர் சேல்ஸ் மானேஜரிடம் விசாரித்தார். அவருக்கும் தெரியவில்லை. அந்த மானேஜர் இந்தக் கேள்விக்கான விடை என்னவென்று லண்டனில் இருக்கும் தங்கள் தலைமை அலுவலகத்திற்குக் கேபிள் மூலம் செய்தி அனுப்பினார். அங்கிருந்து உடனே பதில் வந்தது. “போதுமான அளவு” என்று ஒரு வார்த்தையில் அந்த விடை இருந்தது.

ஆகாப் ராஜாவை எலியா சந்தித்த பின்னர் தேவன் தானியேலுக்கு ஒரு கட்டளை கொடுத்தார். “நீ சென்று மறைந்திரு” என்று. கேரீத் ஆற்றங்கரையில் எலியா மறைந்திருக்க ஒரு பெரிய காட்டுப்பகுதி இருந்தது. வறண்டு, தண்ணீரற்று இருந்த காலத்தில் அந்தக் காட்டுப் பகுதியில் எலியா மறைந்திருந்தால் ராஜா சந்தேகப்படவும் தேடவும் மாட்டான். ஆனால் அங்கே வாழ்வது ஒரு சவாலாகும். தேவன் எலியா அங்கே வாழப் “போதுமானவராக” இருந்தார். அங்கே இருந்த நீரோடையில் எலியா தண்ணீர் குடிப்பான். அவனுக்குத் தேவையானவைகளைக் காகங்கள் கொண்டுவந்து கொடுக்க தேவன் அவைகளுக்குக் கட்டளை கொடுத்திருந்தார்.

அன்பானவர்களே, எந்த நெருக்கடியும், சூழ்நிலையும் தேவனுக்குக் கடினமானவை அல்ல. உலகம் தன் பொருட்களைக் காக்கத் தவறும்போது, தேவன் போதுமானவராக இருக்கிறார். உங்கள் தேவைகளைச் சந்திக்க தேவன் கையாளும்முறை உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இந்தப் பிரபஞ்சத்திலுள்ள படைப்புகள் அனைத்தும் அவருக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய சித்தம் செய்ய ஆயத்தமாயிருக்கின்றன. அவர் நமக்குப் போதுமானவராயிருந்து, நமது தேவைகளைச் சந்திப்பார். உங்கள் இருதயத்தைத் திடப்படுத்திக்கொள்ளுங்கள். அதோ, தூரத்தில் அடிவானப் பகுதியில் காணப்படும் கறுப்பு நிழல்கள், காகங்களாக இருக்கலாம். தேவன் உங்களைக் கைவிடமாட்டார் என்பதில் உறுதியாயிருங்கள். உங்கள் வாழ்க்கையில் சூழ்நிலைகள் எவ்வளவு கடினமாய் இருந்தாலும் அந்நேரங்களில் உங்கள் ஆண்டவர் உங்களுக்குப் போதுமானவராக இருப்பார்.

உலகத்தில் மற்றவர்கள் உங்களை ஏமாற்றலாம். ஆனால் தேவன் எப்பொழுதும் உங்களுக்கும் போதுமானவராக இருப்பார்.

ஜெபம்: கிருபையுள்ள தேவனே, எங்கள் வாழ்க்கையின் சூழ்நிலைகள் எவ்வளவு கடினமாய் இருந்தாலும் நீர் எங்களுக்கு போதுமானவராக இருக்கின்றபடியால் உம்மை துதிக்கிறோம். ஆமென்.