ஆசிரியரிடமிருந்து…

(செப்டம்பர்-அக்டோபர் 2021)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

இவ்விதழின் வாயிலாக தங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். கொரோனா இரண்டாவது அலையின் தாக்கங்கள் முழுவதுமாக குறைய கர்த்தர் பாராட்டிய கிருபைகளுக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம். மூன்றாவது அலையின் எச்சரிப்புக்களை அரசாங்கம் அறிவித்துக்கொண்டும், அதன் பரவலைத் தடுப்பதற்கான முன்னேற்பாடுகளையும் நடைமுறைப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். இனித் தீங்கைக் காணாதிருப்பாய் (செப்.3:15) என்று வாக்குப்பண்ணின வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமுமுள்ள கர்த்தர்தாமே நம்மோடுகூட இருந்து மூன்றாம் அலை நமது தேசத்திற்குள்ளும் உலக நாடுகளுக்குள்ளும் கொடிய தீங்குகளை ஏற்படுத்தாதபடி கடந்து செல்வதற்கு திறப்பிலே நின்று மன்றாடுவோம். பிள்ளைகளுடைய கல்விதரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு விரைவிலேயே பள்ளிகள் திறப்பதற்கும், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரின் பாதுகாப்பிற்காகவும் தற்போது ஞாயிறு ஆராதனைக்கு இருக்கின்ற தடைகள் நீங்குவதற்கும் தவறாது ஜெபிப்போம்.

ஆப்கானிஸ்தானின் செய்திகளை கேட்கும்போது ஒவ்வொருவருடைய இருதயமும் உடைகிறது. அந்த நாட்டிலே ஒடுக்கப்படுகிறவர்களினிமித்தம் இடுகிற கூக்கூரல் தேவசந்நிதியில் எட்டவும், மிஷனெரிகள், சபைகள், ஊழியர்கள் விசுவாசிகள் அனைவரின் பாதுகாப்புக்காகவும் அதிக பாரத்தோடு தொடர்ந்து ஜெபிப்போம். நமது ஜெபங்களைக் கேட்டு அந்நாட்டிலே தேவன்தாமே சமாதானத்தை நிலவப்பண்ணுவார்.

இவ்விதழில் செப்டம்பர் மாதத்தில் 1-4 மற்றும் அக்டோபர் 1-5 வரையுள்ள நாட்களில் பல்வேறு தலைப்புகளிலும், செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதிய தியானங்களும், அக்டோபர் 6-31 வரையுள்ள நாட்களில் சகோ.வர்ஷினி சேவியர் அவர்கள் எழுதிய தியானங்களும் இடம்பெற்றுள்ளன. தியானங்களை எழுதிவரும் சகோதர, சகோதரிகளையும் உங்கள் ஜெபங்களில் மறவாதீர்கள். இத்தியானங்கள் உங்களது ஆவிக்குரிய வாழ்வின் வளர்ச்சிக்கு பிரயோஜனமாக இருக்க ஜெபிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்