தீர்க்கமான முடிவு
தியானம்: 2021 நவம்பர் 18 வியாழன் | வேத வாசிப்பு: ரூத் 1:14-22
…… மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மைவிட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்… (ரூத் 1:17).
ஒர்பாள் வழியிலே திரும்பிச்சென்றுவிட, மற்ற மருமகள் ரூத் நகோமியுடன் தொடர்ந்து சென்றாள். இது எப்படி? இவர்கள் இருவரும் யூதேயா தேசத்தைப் பற்றியும், கர்த்தரின் செய்கைகளைப்பற்றியும் மாமி மூலமாக கேள்விப்பட்டிருப்பார்கள். கேட்ட இருவருமே மாமியாருடன் பெத்லகேமுக்குப் பயணமானார்கள். மாமி பேசாமலே வழிநடந்திருந்தால் ஒர்பாள் முழுமனதுடன் பெத்லகேம் போய்ச் சேர்ந்திருப்பது சந்தேகமே. இடையில் வந்த சிறு சோதனை அவளது மெய்யான நிலையை நிரூபித்துவிட்டது. அதே சோதனை மற்றவளின் மன உறுதியை வெளிப்படுத்தியது. “திரும்பிப்போவதைப்பற்றி இனிப் பேசவேண்டாம்” என்று ரூத் தீர்மானமாகக் கூறி தன் மாமியை விடாமல் பற்றிக்கொண்டாள். “எனக்கு எதுவும் வேண்டாம்; நீர் போகும் இடம், தங்கும் இடம், உமது ஜனம், உமது தேவன் யாவும் இனி என்னுடையவைகளே” என்று தீர்க்கமான முடிவுக்கு வந்தாள் ரூத். அது மாத்திரமல்ல, “மரணமடையும்போதும், நீர் மரணமடையும் இடத்திலேயே நானும் மரணமடைவேன்” என்றாள். இப்படியொரு தீர்மானம் எடுப்பது கடினமே. ஆனால், தன் எதிர்காலம் பற்றிய கலக்கமின்றி, மாமியின் தேவனைத் தன் தேவனாகக் கொண்ட ரூத்தின் பெயர், அவள் புறவினத்தாளாக இருந்தும், மேசியாவின் வம்ச வரலாற்றிலே இடம்பெற்றதில் ஆச்சரியமேயில்லை.
நமது வாழ்க்கையிலும் இப்படியான தீர்க்கமான தீர்மானம் அவசியம். கல்வாரிப் பாதையில் முன்நடக்கத் தீர்மானித்து பயணத்தைப் தொடங்கிய நாம் பின்வாங்கிவிடக் கூடாது. லோத்தின் மனைவி திரும்பிப் பார்த்தாள்; உப்புத்தூண் ஆனாள். ஒர்பாள் திரும்பிச்செல்ல மனமற்றவள்போல பாசாங்கு செய்துகொண்டே போய்விட்டாள்; மறக்கப்பட்டாள். நமது நிலைமை என்ன? கலப்பையில் வைத்த கையைப் பின் எடுப்பது நல்லது அல்ல. “இயேசுவே நீர் எங்கே போகிறீரோ அங்கே வருவேன்; எங்கே இருக்கிறீரோ அங்கேயே நானும் இருப்பேன். பாடுகளின் பாதையோ கண்ணீரின் பள்ளத்தாக்கோ உம்முடன் நானும் வருவேன். உம்மை நேசிப்பவர்களே எனது உறவினர்கள். மரண நேரத்திலும் பிதாவோடுகூட நீர் இருந்ததுபோல, நானும் மரணபரியந்தம் இருப்பேன்”. இப்படியான அர்ப்பணமுள்ள தீர்மானம் நம்மிடம் உண்டா?
தேவபிள்ளையே, தீர்மானம் எடுப்பது இலகு. ஆனால், அதிலே நிலைநிற்பதே பெரியகாரியம். உணர்ச்சிவசப்படாமல், உணர்வுபூர்வமாகச் சிந்திக்கவேண்டும். என்ன பாடுகள் நேர்ந்தாலும் இயேசுவோடே நாம் முன்நடந்து செல்வோமாயின், ஜீவபுஸ்தகம் திறக்கப்படும்போது, நமது பெயர் வாசிக்கப்படுவது அதிக நிச்சயம். ஆகவே, நமது ஆரம்ப ஆவிக்குரிய வாழ்க்கையையும், இப்போது நாம் சென்று கொண்டிருக்கும் பாதையையும் சற்று நிதானித்துப் பார்ப்போம். தவறுகள் இருப்பின் ஆவியானவரின் துணையுடன் சரி செய்துகொள்வோம். உறுதியோடு முன்செல்வோமாக!
ஜெபம்: சீர்ப்படுத்தும் தேவனே, என் வாழ்வில் காணப்பட்ட பின்வாங்கிப்போன அனுபவங்களுக்காக வருந்துகிறேன். என்னை சீர்படுத்தி, நான் மன உறுதியுடன் முன்செல்ல கிருபை தாரும். ஆமென்.