ஆசிரியரிடமிருந்து…
(மார்ச்-ஏப்ரல் 2022)
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,
மரணத்தை ஜெயித்த ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனியநாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இம்மாதத்தின் அனுதினமும் கிறிஸ்துவுடன் இதழின் வாயிலாக தங்களைச் சந்திக்க உதவி செய்த ஆண்டவருக்கே எல்லா மகிமையும் உண்டாவதாக. நம் தேசத்தில் அன்றாடம் கேள்விப்படுகிற பலவித அரசியல் சூழ்நிலைகளுக்காக ஜெபிப்போம். இக்கடைசி காலத்தில் கிறிஸ்தவ ஊழியங்களுக்கும் ஊழியர்களுக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலைகளை கர்த்தர் கண்ணோக்கிப் பார்த்து விடுதலையோடு ஊழியஞ் செய்யவும், ஆராதிப்பதற்கும் தேவனே உதவி செய்யும்படியாக பாரத்துடன் மன்றாடுவோம். இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கைகுறுகிப் போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை (ஏசா.59:1).
அனுதினமும் கிறிஸ்துவுடன் இதழில் 2006 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக வெளிவந்த அதிகாலை வேளையில் என்ற சிறப்பு தியான செய்தியானது இவ்விதழில் நிறைவடைகிறது. இதுவரை பிரசுரமான 100 செய்திகளும் டாக்டர் உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய Early in the Morning என்ற புத்தகத்தில் இடம்பெற்றவையாகும். இச்செய்திகளை நேர்த்தியாக மொழிபெயர்த்து சிறப்பித்த சகோதரி அகஸ்டா மங்கள துரை அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறோம்.
தியான புத்தகத்தின் வேதவாசிப்பு அட்டவணையைப் பயன்படுத்தி 2021ஆம் ஆண்டில் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்தவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளோம். 2022ஆம் ஆண்டிலும் அநேகர் வேதாகமத்தை ஒரு வருடத்திற்குள் வாசித்து முடிப்பதற்கு உற்சாகப்படுத்துகிறோம். உங்களுக்காக ஜெபிக்கிறோம்.
இவ்விதழில் கடந்த பிப்ரவரி மாதத்தின் தொடர் தியானமாக ஆபிரகாமை குறித்த தியானங்கள் மார்ச் 1-3 ஆகிய நாட்களிலும் ஏனைய நாட்களுக்கு பலர் எழுதிய லெந்து கால தியானங்களைத் தொகுத்தும் வழங்கியுள்ளோம். ஏப்ரல் மாதத்தில் 1-17 வரையுள்ள லெந்துகால தியானங்களை சகோதரி தர்ஷினி சேவியர் அவர்களும் ஏப்ரல் 18 -30 வரை கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்த தியானங்களை சகோதரி சாந்தி பொன்னு அவர்களும் எழுதியுள்ளார்கள். இத்தியானங்கள் தங்கள் ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதமாக அமைய வேண்டுதல் செய்கிறோம்.
கே.ப.ஆபிரகாம்