அவர் அடக்கம்பண்ணப்பட்டார்!

தியானம்: 2024 ஏப்ரல் 3 புதன் | வேத வாசிப்பு: 1 கொரிந்தியர் 15:1-8

YouTube video

கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு …. (1கொரிந்தியர்.15:3,4).

மரண வீட்டுக்குப் போகும்போது, உங்கள் உணர்வுகள் எப்படி இருக்கும்? பிரேதப்பெட்டிக்குள் இருப்பது, அந்த நபருடைய சரீரம் மாத்திரமே. என்றாலும், மரித்தவரது குடும்பத்தினருக்குத் துயரம் துயரமே! அடக்க ஆராதனை முடிந்து, “மண்ணுக்கு மண்ணாக, சாம்பலுக்கு சாம்பலாக” என்று போதகர் ஒப்புக் கொடுத்து, குழி மூடப்படும் நேரம், உண்மையாகவே ஒரு கஷ்டமான நேரமே! என்றாலும், மரித்தவர் அந்தக் குழியில் படுத்திருப்பது போன்றதொரு உணர்வு வருகிறது, இல்லையா? கோவிட் நாட்களில், மரித்தவர்களை அடக்கம் செய்வது கேள்விக்குறியாக இருந்தாலும், உறவினருக்கு மரித்தவரைக் காண்பித்து, அடக்கம் செய்ததே ஒரு பெரிய விஷயமாக இருந்தது. அதேசமயம், காணாமற் போனவர்களின் உறவினரின் உணர்வு மகா கொடுமை. மரணம் துக்கத்தைத் தந்தாலும், அடக்கத்தைக் காணும்போது, அவர் மரித்துவிட்டார் என்ற உறுதியை அது தருகிறது. ஆகவே, ஒருவர் மரித்தால், அடக்க ஆராதனையும், அடக்கம் பண்ணப்படுதலும் மிகவும் முக்கியமானதாகும்.

லாசரு மரித்து, அடக்கம் பண்ணப்பட்ட கல்லறையிலிருந்துதான் இயேசு அவனை உயிரோடே எழுப்பினார். லாசரு வியாதிப்பட்டு மரித்திருந்தாலும், அடக்கத்திற்கு முன்பு அவன் எழுப்பப்பட்டிருந்தால், அவன் வியாதியிலிருந்தே சுகமடைந்தான் என்று மக்கள் சொல்ல இடமிருந்தது. ஆனால், அடக்கம்செய்து நான்கு நாட்களின் பின்னர் இயேசு அவனை எழுப்பியபோது, லாசரு மரிக்கவில்லை என்று சொல்ல ஏதுவில்லாதிருந்தது.

இயேசு சிலுவையில் அறையப்பட்டு, மரித்தபின், அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு, பிலாத்துவிடம் அனுமதி கேட்டு, இயேசுவின் சரீரத்தை சிலுவையிலிருந்து இறக்கி, ஒருவரையும் ஒருக்காலும் வைத்திராத ஒரு கல்லறையிலே அடக்கம் செய்தான். அந்தக் கல்லறை வாசலுக்கு காவல் முத்திரையும் இடப்பட்டது. இயேசு மரித்தார் என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் வேண்டும். அவர் மரிக்கவில்லை என்று நிரூபிக்க இன்றும் பலர் எத்தனிக்கிறார்கள். ஆனால் இயேசு மரித்து, அடக்கம் பண்ணப்பட்டார். “கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப் பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடன்கூட அடக்கம் பண்ணப்பட்டோம்” (ரோமர் 6:4) என்று பவுல் இதனைத் தெளிவுபடுத்தியுள்ளார். கிறிஸ்துவுக்குள் இந்த உலகத்திற்கு நாம் மரிக்கிறது உண்மையானால், அவருடன்கூட அடக்கம் பண்ணப்படுகின்ற அனுபவமும் நமக்கு அவசியமாகும். அடக்கத்திலே நமது முந்திய வாழ்வு முற்றிலும் அழிந்துபோகிறது. பின்னர் நாம் கிறிஸ்துவுக்குள் புதியவர்களாகிறோம். எவ்வளவு பெரிய மேன்மை இது!

ஜெபம்: சர்வவல்லமையுள்ள தேவனே, உயிர்த்தெழுதலுக்கான முதற்படி, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேவுகூட அடக்கம் பண்ணப்படுகிற அனுபவமே என்பதை எங்களுக்கு உணர்த்தினீர். உமக்கு நன்றி. ஆமென்.