தேவனுக்குள்ளான கண்ணோட்டம்!

தியானம்: ஜுன் 25 செவ்வாய்; வாசிப்பு: 1சாமுவேல் 17:32-40

‘…சிங்கத்தையும் …கரடியையும் …நான் கொன்றேன்;
விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில்
ஒன்றைப்போல இருப்பான்.’ (1சாமுவேல் 17:36)

நமது உள்ளுணர்வு மாத்திரமல்ல, நமது கண்ணோக்கமும் நமது ஜீவிய ஓட்டத்தில் பெரும் பங்குவகிக்கிறது. கடற்கரையில் உட்கார்ந்திருந்த ஒருவர், என்ன அழகு என்றார்; மற்றவர், என்ன இருந்தாலும் உப்புத்தானே என்றார். அடுத்தவர், கடல் அலையைப் பார்க்கும்போது எனக்கு சுனாமி எழும்புவது போலத் தெரிகிறது என்றார். கடல் ஒன்று, ஆனால், பார்ப்பவர்கள் கண்ணோட் டங்களில் எத்தனை வித்தியாசம். முதலாமவர் மனதில் அமைதி இருக்கும். அடுத்தவர் மனதில் அலுப்பு இருக்கும். மூன்றாமவர் மனதில் பயம்தான் இருக்கும். ஒருவிஷயத்தை எப்படி நாம் நோக்குகிறோமோ அதற்கு ஏற்பவே நமது பதிற்கிரியையும் இருக்கும்.

ஏறத்தாழ ஒன்பது அடி உயரமுள்ள பலசாலியான தோற்றத்தைக் கொண்ட ஒருவன் முன்னே நிற்கிறான். அவன் அணிந்திருந்த அணிகலங்கள் ஒவ்வொன்றும் ஒரு தனிமனிதனால் சுமப்பதற்கு முடியாதளவு பாரம். ஒருபக்கம் பெலிஸ்தரும் அவனும்; எதிரே சவுலும் இஸ்ரவேலின் யுத்தபடையும். நடுவே பள்ளத்தாக்கு. யார் யுத்தத்தை ஆரம்பிப்பது? சவுலும் இஸ்ரவேலர் அனைவரும் அந்தப் பெலிஸ்தன் பேசியதைக் கேட்டதிலேயே கலங்கி மிகவும் பயந்தார்கள். (1சாமு.17:11). தங்களை அழிக்க வந்தவனாகவே அவனைப் பார்த்தார்கள். ஆனால், வாலிபனாகிய தாவீது, அவனை வேறுவிதமாகப் பார்த்தான். இவன் பெலிஸ்தன், எதிராளி; இவன் விருத்தசேதனம் இல்லாதவன்; தேவனுடைய உடன்படிக்கைக்கு பங்காளி அல்ல. அதிலும் மேலாக, இவன் ஜீவனுள்ள தேவ சேனைகளை நிந்திக்கிறவன். தான் கொன்றுபோட்ட சிங்கத்தையும் கரடியையும் போலத்தான் இவனும். இதுதான் தாவீதின் கண்ணோக்கு. சவுலும் மற்றவர் களும் அவனைப் பயங்கரமானவனாகவே பார்த்தார்கள். அவர்களால் அவனை சற்றும் நெருங்க முடியவில்லை. தாவீதோ கோலியாத்தை, தேவனுக்குள்ளாகப் பார்த்தான்; எதிர்கொண்டுபோய் அவனை வீழ்த்தினான்.

எக்கடின சூழ்நிலையாக இருந்தாலும், நம் தேவன் எல்லாவற்றுக்கும் மேலாக உயர்ந்தவர். எல்லா சூழ்நிலையின் கட்டுப்பாடும் அவருடைய கரத்தில்தான் இருக்கிறது என்ற உறுதி நமக்கிருக்குமானால், சூழ்நிலைகளை நாம் கண்ணோக்கும்விதமே மாறிவிடும். நாம் மனித கண்ணோக்கில் காரியங்களைப் பார்ப்பதனால்தான் பயந்து தோற்றுப்போகிறோம். நமது கண்ணோக்கு தேவனுக்குள்ளானதாக இருக்குமானால், தேவன் எப்படி நோக்குகிறாரோ, அப்படியே நாமும் பார்க்கமுடியும். பின்னர் எதற்கும் ஏன் பயப்பட வேண்டும்? நாம் ஜெயம் பெறுவது உறுதி. ஆனால், நாம் தேவகண்ணோக்குடன் இசைந்திருக்கிறோமா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியது மிகமிக அவசியமானதாகும்.

ஜெபம்: “பிதாவே, எந்தவொரு விஷயத்தையும் நீர் காண்கிறபடி நானும் காணும்படி என் மனம் எப்போதும் உம்முடன் இசைந்திருக்கக் கிருபை தாரும். ஆமென்.”