பாவத்தின் விளைவு

அதிகாலை வேளையில்… (ஜனவரி-பிப்ரவரி 2014)
– Dr.உட்ரோ குரோல்

“மேலும் அப்சலோம் காலைதோறும் எழுந்திருந்து, பட்டணத்து வாசலுக்குப் போகிற வழி ஓரத்திலே நின்றுகொண்டு, எவனாகிலும் தனக்கு இருக்கிற வழக்கு முகாந்தரமாய் ராஜாவினிடத்தில் நியாயத்திற்காகப் போகும்போது, அவனை அழைத்து, நீ எந்த ஊரான் என்று கேட்பான்; அவன் உமது அடியான் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒன்றுக்கடுத்த இன்ன ஊரான் என்றால், அப்பொழுது அப்சலோம் அவனை நோக்கி: இதோ, உன் காரியம் நேர்மையும் நியாயமுமாயிருக்கிறது; ஆனாலும் ராஜாவினிடத்திலே உன் காரியத்தை விசாரிப்பார் ஒருவரும் இல்லை என்பான்” (2சாமு.15:2,3)

நம்முடைய எண்ணத்தில் பாவம் ஒரு விசித்திரமான வழியில் உருவாகிறது. உரியாவைக் கொலை செய்ததும் அவருடைய மனைவி பத்சேபாளிடம் விபச்சாரம் செய்ததும், தாவீது அரசர் செய்த இரு பாவங்கள். இதற்குப் பின்னர் நாத்தான் தீர்க்கதரிசி அவரிடத்தில் வந்து அவரது பாவத்தை உணர்த்த ஒரு உவமையைக் கூறினார். “நீயே அந்த மனுஷன்” (2சாமு.12:7) என்று அவர் கூறியதும் “நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்தேன்…”(2சாமு.12:13) என்று தாவீது தனது தவறை உணர்ந்து வருந்தினார்.

தேவன் அப்பாவத்தை மன்னித்து விட்டாலும் அதன் தண்டனையைத் தாவீது அனுபவிக்க வேண்டியதாய் இருந்தது. இராஜாவின் இச்சையினால் உருவான அந்த குழந்தை மரித்துவிட்டது. அவரது மற்ற பிள்ளைகள் இரக்கமற்றவர்களாகவும், முரட்டாட்டமுள்ளவர்களாயும் அவரைக் கொலை செய்வதற்கான சதித்திட்டம் தீட்டுபவர்களாயும் மாறினர்.

தாவீதின் பாவத்துக்கு தண்டனை துரிதமாய் வந்தது. பத்சேபாளை மணப்பதற்கு முன்னர் அவருக்குப் பதினாறு பிள்ளைகள் இருந்தனர். ஒவ்வொருவரும் அரசகுமாரனைப் போல தனித்தனி அரண்மனையில் வசித்து வந்தனர். ஆயினும் வரலாற்றில் மூன்று பேர் மட்டுமே சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். யெஸ்ரெயேல் ஊராளான அகினோவாமிடத்திலே பிறந்த அம்னோன் அவனுக்கு முதல் பிறந்தவன். மூன்றாம் குமாரன் கேசூரின் ராஜாவான தல்மாய் குமாரத்தியாகிய மாக்காள் பெற்ற அப்சலோம் என்பவன்; நாலாம் குமாரன் ஆகீத் பெற்ற அதொனியா என்பவன்; அப்சலோமும் அதோனியாவும் தங்கள் தகப்பனுக்கு விரோதமாய் சதி ஆலோசனை பண்ணி அவரை ஆட்சியிலிருந்து அகற்ற வகை தேடினர். அம்னோனின் பாவமும் இழிவானதொன்று.

அப்சலோமுக்கு தாமார் என்றதொரு செளந்தரியமுள்ள சகோதரி இருந்தாள். அம்னோன் அவளுடைய அழகில் மயங்கியதால் அவன் வியாதிப்பட்டான். மோசேயின் நியாயப் பிரமாணத்தின்படி ஒருவன் தனது சகோதரியை மணப்பது தவறு. எனவே அம்னோன் ஒரு மாற்று வழியில் செயல்பட எண்ணினான். தாமாரைப் பலாத்காரம்பண்ணி அவளுடன் உறவுகொண்டான். பின்னர் அவளை வெறுத்துவிட்டு அந்த இடத்திலிருந்து தப்பிவிட்டான். அப்சலோம் தாமாரை விசாரித்து உண்மையை அறிந்து கொண்டான். அதனால் சினமுற்ற அப்சலோம் அம்னோனைப் பழிவாங்கத் திட்டமிட்டான்.

இரண்டு வருஷம் சென்றபின்பு, அப்சலோம் எப்பிராயீமுக்குச் சமீபமான பாலாத்சோரிலே ஆட்களை வைத்து, ஆடுகளை மயிர் கத்தரிக்கிற வேலையில் இருந்தான்; அங்கே இராஜாவாகிய தாவீதையும் ராஜ குமாரர் எல்லாரையும் குறிப்பாக அம்னோனையும் விருந்துக்கு அழைத்தான். விருந்துவேளையில் அம்னோன் திராட்சரசம் குடித்துக் களித்திருக்கும் பொழுது அப்சலோமின் வேலையாட்கள் அவனை அடித்துக்கொன்றார்கள். இச்செயலால் அப்சலோம் தாவீதுக்குப் பயந்து தனது தாத்தாவான கேசூரின் இராஜாவான தல்மாயிடம் ஓடி அடைக்கலம் புகுந்தான். தாவீது அவனை அழைத்தனுப்பும் வரைக்கும் சுமார் மூன்று ஆண்டுகள் அவன் அங்கே தங்கியிருந்தான்.

நாடு திரும்பிய அப்சலோம் தனது தகப்பனுடைய அதிகாரத்தைக் குறைக்க ஆரம்பித்தான். “மேலும் அப்சலோம் காலைதோறும் எழுந்திருந்து, பட்டணத்து வாசலுக்குப் போகிற வழி ஓரத்திலே நின்றுகொண்டு,…” (2சாமு. 15:2) என்று கூறுகிறது. வழக்கு தொடர்பாக எருசலேமுக்கு வருகின்ற அனைவரையும் சந்திக்க அதிகாலையிலேயே ஆயத்தமானான். தனது சாதுரியமான பேச்சினால் தன்னை நல்லவனாகவும் தனது தந்தையை கெட்டவனாகவும் சித்தரித்துக் காட்டினான். இதற்குத் தீர்வாக, வழக்கு வியாஜ்யமுள்ளவர்கள் எல்லோரும் என்னிடத்தில் வந்து, நான் அவர்களுக்கு நியாயம் செய்யும்படிக்கு, என்னை தேசத்திலே நியாயாதிபதியாக வைத்தால் நலமாயிருக்கும் என்பான். பாவம் எப்பொழுதும் இனிய சொற்களுடன் கலந்தே இருக்கும். செளந்தரியமான அப்சலோம் தனது கனிவான பேச்சினாலும், அன்பான செயலாலும் இஸ்ரவேல் மனிதருடைய இருதயத்தைக் கவர்ந்துகொண்டான். தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்ட அவர்களது அரசனான தாவீதிடமிருந்து அனைவரையும் தன் பக்கமாக இழுத்துக்கொண்டான். தேனொழுகும் வார்த்தைகள், கை குலுக்குதல், அந்நியரைத் தழுவி போலியான முத்தம் செய்தல் ஆகிய வற்றால் இஸ்ரவேலரைத் தன் வயப்படுத்திக் கொண்டான்.

இஸ்ரவேலரை தாவீதைவிட்டு விலகச்செய்யும் இவ்விதமான துரோகச் செயல்களில் வெற்றியும் பெற்றான். ஆகவே வெகுவிரைவில் எப்ரோனுக்குச் சென்று தன்னை அரசனாக அறிவித்தான். ஜனங்கள் அப்சலோமினிடத்தில் திரளாய் வந்து கூடினார்கள். ஆனால் தாவீதுக்குப் பிறகு அரசனாக அப்சலோமை தேவன் தெரிந்தெடுக்கவில்லை. “உன் பாவம் உன்னைத் தொடர்ந்து பிடிக்கும்” என்ற பாடத்தை தாவீது அறிந்து கொள்ளும்பொழுது இஸ்ரவேல் ஜனங்களும் ஒரு விலையேறப்பெற்ற பாடத்தையும் கற்றுக்கொண்டார்கள். இனிய புன்சிரிப்பு, அன்பான கை குலுக்கல், தேனொழுகும் வார்த்தைகள் ஆகியவற்றுடன் நம்முடன் பழகும் மனிதர்கள் அனைவரும் நமது நலனில் அக்கறை கொண்டவர்கள் அல்லர். அவர்கள் ஆட்டுத்தோல் போர்த்த ஓநாய்கள். நம் தலைவர்களைப்பற்றி தேவனுடன் நாம் தொடர்ச்சியான ஆலோசனை கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இவர்கள் நம்மை ஆட்கொள்ள முடியாது. வருங்காலத்தில் நம்மை ஆளவிருக்கும் நமது தலைவர்களுக்காக இன்று நாம் தேவனிடம் மன்றாடுவோம்.

அதிகாலைப் பாடல்:
என் இரட்சகர் என்னை நடத்துகிறார்;
வேறென்ன எனக்கு வேண்டும்?
என் வாழ்வின் வழிகாட்டியான
அவருடைய கிருபையை சந்தேகிப்பேனோ?
விண்ணின் சமாதானம், தெய்வீக ஆறுதலாகிய
அவரில் விசுவாசத்தில் வாழுவேன்
என்ன நேரிடினும் இயேசு அனைத்தையும்
நேர்த்தியாய் செய்கிறார். அல்லேலூயா!

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை