தேவனோடு உடன்படிக்கை!
தியானம்: ஜனவரி 1 புதன்; வாசிப்பு: ஆதியாகமம் 9:8-17
“…என் உடன்படிக்கையை நித்திய
உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.”
(ஆதியாகமம் 17:7)
மீண்டும் ஒரு புதிய வருடத்தினுள் பிரவேசித்திருக்கிறோம். சத்தியவசன விசுவாசப்பங்காளர்கள், வாசகர்கள், நேயர்கள் யாவருக்கும் இனியப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.
தேவனோடு நாம் செய்யும் உடன்படிக்கைக்கு எவ்வளவோ முக்கியத்துவத்தை நாம் கொடுக்கிறோம். தேவன் மனிதரோடு உடன்படிக்கை செய்ததை வேதாகமத்திலே பல இடங்களில் காணலாம். தேவன் தாம் செய்த உடன்படிக்கைக்கு உண்மையுள்ளவராகவே இருக்கிறார். ஆகவே, அவரைத் தொழுதுகொள்ளும் நாமும் இப்புதிய ஆண்டில் தேவனோடு செய்யும் உடன்படிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழவேண்டியது அவசியம் அல்லவா.
என் வாழ்வில் எவ்வளவோ சிக்கல்களும் பிரச்சனைகளும் வந்தபோதிலும், அவற்றின் மத்தியில் வெற்றியோடு கடந்துச்செல்வதற்கு, திருமணத்தில் தான் தேவனோடு செய்துகொண்ட உடன்படிக்கையும் தனக்குக் கைகொடுத்தது என்று, திருமண பந்தத்தில் பல வருடங்களைப் பூர்த்திசெய்த ஒருவர் மகிழ்ச்சியோடு கூறினார். ஆனால் இன்று, திருமண பந்தத்தில் தேவனோடு செய்து கொண்ட உடன்படிக்கையை மறந்து, சுயநலமான மனப்போக்குடன் தீர்மானங்களை எடுத்து, திருமண பந்தத்தையே முறித்து, விவாகரத்து செய்வதை நாகரீகம் எனக் கருதும் முற்போக்குவாதிகள் மலிந்துவிட்டார்கள்.
தேவனோடு நாம் செய்யும் உடன்படிக்கை மிகவும் முக்கியமானது. அதனைக் காத்துக்கொள்ள நாம் பிரயாசப்படவேண்டும். அதற்கு உடன்படிக்கையின் தேவனும் நமக்கு உதவிசெய்வார். நோவாவின் காலத்தில் வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்ட அழிவுக்குப் பின்பு, தாம் இனி வெள்ளத்தால் பூமியை அழிப்பதில்லை என்று சொன்ன தேவன், தமக்கும், பூமியிலுள்ள சகல மாம்ச ஜீவன்களுக்கும் இடையில் செய்த உடன்படிக்கையின் அடையாளமாக வானவில்லை வைத்தார். இன்று வானவில்லைக் கண்டதும் மழை வராது என்கிறோம். இவ்விதமாக உடன்படிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தேவனை ஆராதிக்கும் நாமும், அவரோடு செய்யும் உடன்படிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.
இப் புதிய வருடத்தின் முதல் நாளில் இத்தியானத்தில் இணைந்திருக்கும் தேவபிள்ளையே, கடந்த காலங்களில் தேவனோடு செய்துகொண்ட உடன்படிக்கைக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்திருக்கிறோமா? அல்லது, ஒவ்வொரு வருடமும் நாம் செய்யும் உடன்படிக்கை ஜனவரி மாதத்துடனே காணமற் போகின்றனவா? இவ்வருடத்தில் நாம் தேவனோடு செய்துகொள்ளும் உடன்படிக்கையை உண்மையாய் காத்துக்கொள்ள தேவன் கிருபை செய்வாராக.
ஜெபம்: உடன்படிக்கையில் மாறாத என் தேவனே, இன்றைக்கு நான் செய்யும் இந்தத் தீர்மானத்தை என்றைக்கும் காத்திட உமதாவியால் நிரப்பும். ஆமென்.