கர்த்தரை நோக்கும் கண்கள்

அதிகாலை வேளையில்… (மார்ச்-ஏப்ரல் 2014)
– Dr.உட்ரோ குரோல்

“தேவனுடைய மனுஷனின் வேலைக்காரன் அதிகாலமே எழுந்து வெளியே புறப்படுகையில், இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச்  சுற்றிக்கொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி:  ஐயோ, என் ஆண்டவனே, என்ன செய்வோம் என்றான்.” (2இராஜா.6:15)

ஆங்கில நாளேடு ஒன்றில் இரண்டு பிரபலமான மனிதர்களைப் பற்றிய செய்தி ஒன்று வெளிவந்தது. அதில் ஒருவர் ஓவியர், மற்றவர் நாவலாசிரியர். அந்த நாளேடு, “நேற்று, ஜேம்ஸ் மெக்நெயில் விஸ்ட்லரும் ஆஸ்கார் ஒயில்ட் என்பவரும் தங்களைப் பற்றி பிரைட்டன் நகரில் பேசிக் கொண்டனர்” என்ற செய்தியை வெளியிட்டது. விஸ்ட்லர் இந்த செய்திப் பகுதியை வெட்டி தனது நண்பருக்கு “ஆஸ்கார், இந்த செய்தியாளர்கள் தங்கள் செய்தியைத் தெளிவாக வெளியிட வேண்டும். அன்று நாம் இருவரும் என்னைப் பற்றிதானே பேசிக்கொண்டிருந்தோம். உனக்கு நினைவிருக்கிறதா?” என்று தனது குறிப்புடன் அனுப்பினார். அதற்கு ஆஸ்கார் மறுமொழியாக, “ஆம், ஜிம்மி, நாம் உன்னைப் பற்றிதான் பேசிக் கொண்டிருந்தோம்; ஆனால் நான் என்னைப் பற்றிய எண்ணத்தில் இருந்தேன்” என்ற தந்தியை அனுப்பினார். இந்நிகழ்ச்சி வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் இது மனிதனுடைய ஒரு பயங்கரமான குணத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. நாம் மிக சுயநலத்துடன் நமது காரியத்திலேயே கண்ணோக்கமாயிருக்கிறோம். நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்களைப் பற்றியோ நம்மீது அக்கறையுள்ள தேவனுடைய செயல்பாட்டையோ கண்டுகொள்வதைத் தவறவிட்டு விடுகிறோம்.

இஸ்ரவேலின் வரலாற்றிலே அநேகமுறை தமஸ்கு நாட்டிலிருந்து படைகள் ஊடுருவி பயமுறுத்தின. சீரியரின் அரசன் மீண்டும் ஒருமுறை இஸ்ரவேல் அரசனால் ஏற்றுக் கொள்ளமுடியாதபடி தனது கோரிக்கைகளை வெளியிட்டான். அக்காலத்தில் சீரியாவின் ராஜா இஸ்ரவேலுக்கு விரோதமாய் யுத்தம் பண்ணி, இன்ன இன்ன ஸ்தலத்திலே பாளயமிறங்குவேன் என்று தன் ஊழியக்காரரோடே ஆலோசனை பண்ணினான். தேவமனுஷன் இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பி: இன்ன இடத்துக்குப் போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்; சீரியர் அங்கே இறங்குவார்கள் என்று சொல்லச்சொன்னான். அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா தேவமனுஷன் தன்னை எச்சரித்து, தனக்குக் குறித்துச் சொன்ன ஸ்தலத்திற்கு மனுஷரை அனுப்பிப் பார்த்து எச்சரிக்கையாயிருந்து, இப்படி அநேகந்தரம் தன்னைக் காத்துக் கொண்டான்.

எனவே சீரிய அரசன் தங்களுக்குள்ளேயே ஒற்றர்கள் இருந்து இஸ்ரவேலின் இராஜாவுக்கு செய்தியைத் தருகிறார்கள் என்றும், எனவேதான் அவன் தான் வைத்த கண்ணிகளிலிருந்து தப்பிவிடுகிறான் என்றும் எண்ணினான். இந்தக் காரியத்தினிமித்தம் சீரிய ராஜாவின் இருதயம் குழம்பி, அவன் தன் ஊழியக்காரரை அழைத்து: நம்முடையவர்களில் இஸ்ரவேலின் ராஜாவுக்கு உளவாயிருக்கிறவன் யார் என்று நீங்கள் எனக்கு அறிவிக்க மாட்டீர்களா என்று கேட்டான். அப்பொழுது அவனது அரசவையிலிருந்த அவன் ஊழியக்காரரில் ஒருவன்: அப்படியில்லை; என் ஆண்டவனாகிய ராஜாவே, நீர் உம்முடைய பள்ளி அறையிலே பேசுகிற வார்த்தைகளையும் இஸ்ரவேலிலிருக்கிற தீர்க்கதரிசியாகிய எலிசா இஸ்ர வேலின் ராஜாவுக்கு அறிவிப்பான் என்றான்.

இது சீரிய அரசனுக்கு சினத்தை உண்டு பண்ணியது. எனவே அவன் தோத்தானுக்கு சீரியரின் படைகளை அனுப்பி எலிசாவை பிடித்து வர அனுப்பினான். அதன்மூலம் இஸ்ரவேல் இராஜாவுக்கு அவன் எதிர் காலத்தில் நிகழ்வதைக் கூறுவதை தடுத்துவிட எண்ணினான். சீரியர்களின் இரதமும் குதிரை வீரர்களும் இரவில் அந்த பட்டணத்தைச் சுற்றி வளைந்துகொண்டார்கள். தேவ மனுஷனின் வேலைக்காரன் அதிகாலமே எழுந்து வெளியே புறப்படுகையில், இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சுற்றிக் கொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்ன செய்வோம் என்றான். திகிலும் நடுக்கமும் நிறைந்த தனது வேலைக்காரனுக்கு எலிசா கொடுத்த பதிலானது, புயலின் மத்தியில் இருக்கும் அமைதிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. “அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான்.” (2 இராஜா.6:16)

எலிசாவையும் அவனது வேலைக்காரனையும் சுற்றியிருந்த படைகள் அச்சத்தை விளைவிப்பதாயிருந்தாலும், எலிசா தனது வேலைக்காரன், தன்மீதும் தன் எதிரிகள் மீதும் உள்ள கண்களை விலக்கி, தங்களைக் காப்பதற்கு தேவ சேனைகளை அனுப்பியுள்ள சேனைகளின் கர்த்தரை நோக்கிப் பார்த்தால், அவன் அவ்வாறு பயப்படமாட்டான் என்பதை அறிந்திருந்தார். எனவே “எலிசா விண்ணப்பம் பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்” (2இராஜா.6:17).

அப்பொழுது எலிசாவின் வேலைக்காரன் தேவனுக்குப் பயந்தவர்களை தேவதூதர்கள் சூழ்ந்து நின்று காத்திடுவார்கள் என்பதை அறிந்துகொண்டான். அவன் தன் கண்களை விலக்கி தன்னைக் காக்க எல்லையில்லா பாதுகாவல்களை வைத்துள்ள சேனைகளின் தேவன் மீது நம்பிக்கை வைத்தான்.

சீரியர்கள் அவனிடத்தில் வருகையில் எலிசா கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: இந்த ஜனங்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படி செய்யும் என்றான்; எலிசாவுடைய வார்த்தையின்படியே அவர்களுக்குக் கண் மயக்கம் உண்டாகும்படி செய்தார். இந்த குழப்பத்தில் எலிசா அவர்களை நோக்கி: இது வழி அல்ல; இது பட்டணமும் அல்ல; என் பின்னே வாருங்கள்; நீங்கள் தேடுகிற மனுஷனிடத்தில் நான் உங்களை வழிநடத்துவேன் என்று சொல்லி, அவர்களை இஸ்ரவேலின் தலைநகரான சமாரியாவுக்கு அழைத்துக் கொண்டு போனான். அவர்கள் சமாரியாவில் வந்தபோது, எலிசா: கர்த்தாவே, இவர்கள் பார்க்கும்படிக்கு இவர்கள் கண்களைத் திறந்தருளும் என்றான்; பார்க்கும்படிக்குக் கர்த்தர் அவர்கள் கண்களைத் திறக்கும்போது இதோ, அவர்கள் சமாரியாவின் நடுவே இருந்தார்கள். தேவன் இஸ்ரவேலின் கரங்களில் அவர்களது எதிரிகளை அதிசயமாய் ஒப்புவித்தார்.

நமது பிரச்சனைகளையும் அதன் தீர்வுகளையும் அதன் சூழ்நிலைகளையும் கண்டு நிற்காமல், யாவையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தேவன்மீது திருப்பினால் அவர் நமக்குச் செய்யும் காரியங்கள் அதிசயங்களாயும் அற்புதங்களாயும் அமையும்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை