அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்

புனித வேதாகமத்தின் வரலாறு (மார்ச்-ஏப்ரல் 2014)
அத்தியாயம்-9
சகோ.M.S.வசந்தகுமார்

(11) பஞ்சாபி மொழிபெயர்ப்பு

இந்தியாவிலுள்ள சீக்கியர்கள் பேசும் பஞ்சாப் மொழியில் வேதாகம மொழிபெயர்ப்பு வேலைகள் 1807 இல் செரம்பூரில் இருந்த மிஷெனரிகளினால் ஆரம்பிக்கப்பட்டது.

1812 ஆம் ஆண்டின் தீ விபத்து அம்மொழி பெயர்ப்பு வேலைகளைப் பாதித்தாலும் 1815இல் பஞ்சாபி மொழி புதிய ஏற்பாட்டை அவர்கள் வெளியிட்டனர். 1826இல் எசேக்கியேல் வரையிலான புத்தகங்கள் பஞ்சாபி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. எனினும், இம்மொழி பெயர்ப்பு பஞ்சாப் மக்களால் அதிகளவில் உபயோகிக்கப்படவில்லை. 1834இல் பஞ்சாபில் தமது ஊழியத்தை ஆரம்பித்த அமெரிக்க பிரஸ்பிட்டேரியன் மிஷன் சங்கத்தைச் சேர்ந்த ஜே.நியூட்டன், 1837இல் பஞ்சாபி மொழியில் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்க்கத் தொடங்கினார். இதன் பயனாக 1840 இல் மத்தேயு சுவிசேஷமும், 1841 இல் யோவான் சுவிசேஷமும் பஞ்சாப் மொழியில் வெளியிடப்பட்டது.

நியூட்டன், அப்போஸ்தலர் நடபடிகள் வரை மொழிபெயர்த்திருந்தாலும் 4 சுவிசேஷங்களும் அப்போஸ்தலர் நடபடிகளும் அச்சிடப்பட்டபோது, 1845இல், அச்சகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அச்சிடப்பட்ட பக்கங்கள் அனைத்தும் எரிந்துவிட்டன. மறுபடியுமாக இவ்வைந்து புத்தகங்களும் தனி ஒரு புத்தகமாக பஞ்சாபி மொழியில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. அதேசமயம், இம்மிஷனைச் சேர்ந்த ஜன்வியர் ஆதியாகமத்தையும் யாத்திரகமத்தில் 20 அதிகாரங்களையும் பஞ்சாபி மொழியில் மொழிபெயர்த்திருந்தார். இவை 1851இல் வெளி வந்தன. இவர் மொழிபெயர்த்த லூக்கா சுவிசேஷம் 1856இலும், சங்கீதப் புத்தகம் 1863இலும் வெளிவந்தன. 1863இல் ஸ்தாபிக்கப்பட்ட பஞ்சாப் வேதாகமக் கிளைச் சங்கம் 1868இல் புதிய ஏற்பாடு முழுவதையும் பஞ்சாப் மொழியில் வெளியிட்டது. இம்மொழிபெயர்ப்பு வேலைகள் ஜே.நியூட்டனின் தலைமையிலேயே நடைபெற்றன. 1889இல் பஞ்சாப் மொழி புதிய ஏற்பாட்டைத் திருத்தி மொழிபெயர்ப்பதற்கு ஒரு குழு நியமிக்கப்பட்டது.

இதன் பயனாக 1900இல் திருத்தப்பட்ட பஞ்சாப் புதிய ஏற்பாடு வெளிவந்தது. அதேசமயம் ஜே.ஹார்வி என்பவர் மொழிபெயர்த்த பல பழைய ஏற்பாட்டுப் புத்தகங்கள் தனித் தனியாக பஞ்சாப் மொழியில் வெளியிடப்பட்டன. 1959இல் கல்கத்தாவிலிருந்த பப்டிஸ்ட் மிஷன் அச்சகம் பழைய ஏற்பாட்டின் பஞ்சாபி மொழிபெயர்ப்பை வெளியிட்டது.

(12) ஏனைய மொழி பெயர்ப்புகள்

இந்தியாவில் பேசப்படும் மொழிகள் 1652 என கணிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் பல மொழிகளில் வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 1970ஆம் ஆண்டின் கணிப்பீட்டின்படி 25 இந்திய மொழிகளில் முழுவேதாகமமும், 40 மொழிகளில் புதிய ஏற்பாடும், 65 மொழிகளில் வேதாகமத்தின் பகுதிகளும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இதன்படி, அவ்வாண்டுவரைக்கும் மொத்தம் 130 இந்திய மொழிகளில் வேதாகமம் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதை அறிகின்றோம். 1994ஆம் ஆண்டு வரை இந்திய வேதாகமச் சங்கம் 171 இநதிய மொழிகளில் வேதாக மத்தைப் பிரசுரித்துள்ளது.

இந்தியாவுக்கு அப்பால் வேதாகமம்

இந்தியாவுக்கு மிஷெனரிகள் வரத்தொடங்கிய பின்னர், இந்தியாவுக்கு கிழக்குப் பகுதியிலுள்ள நாடுகளிலும் கிறிஸ்தவம் பரவியது. பர்மா, திபெத், சீனா, கொரியா, ஜப்பான் எனும் நாடுகளுக்கும், தெற்கே இலங்கைக்கும் மிஷெனரிகள் வந்தனர். இதன் பயனாக இவ்வாசிய நாடுகளின் மொழிகளிலும் வேதாகமம் மொழி பெயர்க்கப்படலாயிற்று. இம் மொழிபெயர்ப்புச் சரிதையை இப்பகுதியில் பார்ப்போம்.

(1) பர்மிய மொழிபெயர்ப்பு

கடும் எதிர்ப்புகளுக்கும் இழப்புகளுக்கும் மத்தியிலும் கிறிஸ்தவம் உட்புகுந்த நாடுகளில் ஒன்றாக பர்மா விளங்குகிறது. பர்மிய மொழியின் வேதாகம மொழிபெயர்ப்பானது அமெரிக்க மிஷெனரியான அதோனி ராம் ஜட்சன் என்பவரிலேயேதான் ஆரம்பத்தைக் கொண்டுள்ளது. 1788இல் பிறந்த இவர் திருமணம் முடித்து 13 நாட்களின் பின், 1812 ஆம் ஆண்டு இந்தியாவிலுள்ள கல்கத்தாவிற்கு வந்து சேர்ந்தார். அங்கு சிறிதுகாலம் வில்லியம் கேரியோடு இருந்த அவருக்கு, கிழக்கிந்திய கம்பனி இந்தியாவில் தொடர்ந்து இருப்பதற்கு அனுமதி கொடுக்காதமையினால், அவர் தன் மனைவி நான்சியுடன் கல்கத்தாவிலிருந்து பர்மாவுக்குச் சென்றார்.

அவர்கள் ரங்கூன் துறைமுகத்தை அடைவதற்கு முன்பதாக, கப்பலில் வைத்து நான்சி குறைப்பிரசவத்தில் தன் குழந்தையைப் பறிகொடுத்தாள். ரங்கூனுக்கு வந்த ஜட்சன் தம்பதியர் பலவிதமான இக்கட்டுகளுக்கு முகங்கொடுத்தனர். ஆறுவருடங்களாக ஜட்சன் பர்மிய மொழியைக் கற்பதிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதிலும் செலவிட்டார். அப்படியிருந்தும் ஒருவரும் இரட்சிக்கப்படவில்லை. அதேசமயம் பர்மிய அரசு ஜட்சனின் சுவிசேஷப்பணியை எதிர்க்கத் தொடங்கியது. 1820இல் ஒரு சில பர்மியர்கள் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். பர்மாவுக்கு வந்த ஜட்சன் தம்பதியர் அடிக்கடி நோய்களினால் பாதிக்கப்பட்டனர். ரங்கூனில் அவர்களுக்குப் பிறந்த மகனும் 6 மாதங்களில் மரித்துவிட்டான். 1822 இல் வியாதி காரணமாக நான்சி இந்தியாவுக்குச் செல்ல வேண்டியதாயிற்று.

மனைவியின் பிரிவால் தனிமைப்பட்ட ஜட்சன் புதிய ஏற்பாட்டை பர்மிய மொழியில் மொழி பெயர்க்கத் தொடங்கினார். ஒரு வருடத்துக்குள்ளாக அவ்வேலைகள் பூர்த்தியடைந்தன. அதேசமயம் ஜட்சன் ரங்கூனிலிருந்து ஆவா எனுமிடத்திற்குச் சென்றார். 1824 இல் அவரது மனைவியும் அங்கு வந்து சேர்ந்தாள்.

(தொடரும்)