அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்
புனித வேதாகமத்தின் வரலாறு (ஜூலை-ஆகஸ்டு 2015)
அத்தியாயம்-9
சகோ.M.S.வசந்தகுமார்
தென் அமெரிக்க மொழிகளில் வேதாகமம்
மாற்கு சுவிசேஷம் ஈக்குவேடா நாட்டின் நான்கு கோத்திர மக்களது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது.
தென் அமெரிக்காவின் இன்னு மொரு நாடான பிரேசிலில் 1956ஆம் ஆண்டிலிருந்து வைக்கிளிப் முகாமைச் சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அந்நாட்டின் 40 கோத்திர மக்கள் மத்தியில் ஊழியம் செய்வதோடு வேதாகமத்தை அந் நாற்பது கோத்திர மொழிகளிலும் மொழிபெயர்க்கும் பணிகளைச் செய்து வருகின்றனர். 1968 ஆம் ஆண்டு கணிப்பீட்டின்படி அந்நாட்டின் 12 கோத்திர மொழிகளில் வேதாகமத்தின் பகுதிகள் இருந்துள்ளதை அறிகின்றோம். 1955 ஆம் வருடம் வைக்கிளிப் முகாமைச் சேர்ந்தவர்கள் பொலீவியா எனும் நாட்டில் தமது ஊழியங்களை ஆரம்பித்தனர். இவர்களது பணி காரணமாக 1970 ஆம் ஆண்டுவரை மாற்கு சுவிசேஷம் பொலீவிய நாட்டின் 8 மொழிகளிலும், லூக்கா சுவிசேஷமும் புதிய ஏற்பாட்டின் வேறு புத்தகங்களும் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. இவற்றைத்தவிர பொலீவிய வேதாகமச்சங்கம் 2 கோத்திர மொழிகளில் புதிய ஏற்பாட்டை வெளியிட்டிருந்தது.
1946ஆம் ஆண்டு பெரூ நாட்டில் வைக்கிளிப் முகாமின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 1970ஆம் ஆண்டு கணிப்பீட்டின்படி பெரூ நாட்டின் 3 கோத்திர மொழிகளில் புதிய ஏற்பாடும், 27 மொழிகளில் வேதாகமத்தின் பகுதிகளும் இருந்துள்ளன. இவற்றுள் 24 மொழிகளின் மொழி பெயர்ப்புப்பணி வைக்கிளிப் முகாமைச் சேர்ந்தவர்களால் செய்யப்பட்டதாகும். இம் முகாமைச் சேர்ந்தவர்கள் 1962ஆம் ஆண்டு கொலம்பியா நாட்டுக்குச் சென்றனர். இன்று அந் நாட்டின் பல கோத்திர மொழிகளில் வேதாகமத்தின் பகுதிகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1970இல், தென் அமெரிக்காவிலுள்ள வெனிசூலா நாட்டின் 6 கோத்திர மொழிகளில் வேதாகமத்தின் பகுதிகள் இருந்தன.
வேதாகம மொழிபெயர்ப்பு வரலாற்றில், வைக்கிளிப் முகாமைச் சேர்ந்தவர்களது பணி உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய தொன்றாகும். காட்டுவாசிகளான, பயங்கரமான கோத்திர மக்கள் மத்தியில் சென்று, அவர்களது மொழியைக் கற்று, அவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவித்துள்ளதோடு அவர்களது மொழியில் வேதாகமத்தையும் மொழிபெயர்த்துள்ள இம்முகாமைச் சேர்ந்த பல மிஷனரிகள் காட்டுவாசிகளால் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காட்டின் வாழ்க்கை காரணமாக வியாதிப்பட்டுள்ளனர். அப்படியிருந்தும் இம்முகாமில் சேருவோர் எண்ணிக்கையும், அவர்கள் மொழிபெயர்க்கும் வேதாகமங்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. அவர்கள் ஒரு வருடத்திற்கு 30 புதிய கோத்திர மொழிகளில் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்து வருவ தாகக் கணிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க மொழிகளில் வேதாகமம்
ரோம சாம்ராட்சியத்தின் காலத்தில் ஆப்பிரிக்காவின் வட பகுதியில் கிறிஸ்தவம் பரவியிருந்ததோடு, கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் அப்பிரதேசத்து மக்களது பிரதான மொழியான லத்தீன் மொழியில் முழுவேதாகமமும் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. (இது பற்றி 7ஆம் அத்தியாயத்தில் பார்த்துள்ளோம்) ஆரம்பத்தில் வட ஆப்பிரிக்காவில் கிறிஸ்தவம் வளர்ச்சியடைந்திருந்தபோதிலும், கி.பி.7 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட இஸ்லாமிய ஆக்கிரமிப்பு அப்பகுதியில் கிறிஸ்தவத்தை அழித்துவிட்டது. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் பைசன்டைன் மிஷனரிகளினால் எத்தியோப்பியாவில் ஆரம்பிக்கப்பட்ட சபைமட்டும், தொடர்ச்சியான வீழ்ச்சிகளுக்கு மத்தியிலும் இன்று வரை நிலைத்துள்ளது.
இன்று, ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள நாடுகளில் மொத்தம் 523 மொழிகளும் அவற்றிலிருந்து உருவான மேலும் 320 கிளை மொழிகளும் இருக்கின்றன. 1960ஆம் ஆண்டு வரை ஆப்பிரிக்காவின் 59 மொழிகளில் முழுவேதாகமமும், 114 மொழிகளில் புதிய ஏற்பாடும், 219 மொழிகளில் வேதாகமப் பகுதிகளும் மொழி பெயர்க்கப்பட்டிருந்தன.
13ஆம் 17ஆம் நூற்றாண்டு களுக்கு இடைப்பட்ட காலத்தில் ரோமன் கத்தோலிக்கச் சபை மிஷனரிகள் ஆப்பிரிக்கா கண்டத்தின் கரை யோரப்பகுதிகளில் இஸ்லாமியர்களது எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் கிறிஸ்தவ சபைகளை உருவாக்கியுள்ளனர். 1652 இல், தென்னாப்பிரிக்காவின் கேப் எனும் மாகாணத்தில் ஒல்லாந்தர் தமது குடியிருப்புப் பிரதேசங்களை ஏற்படுத்தியதோடு தமது சபைகளையும் ஸ்தாபித்தனர். 1737இல் மொரேவிய சபை மிஷனரிகளும் 1799இல் லண்டன் மிஷனரி சங்கத்தினரும் தென் ஆப்பிரிக்காவில் ஊழியங்களை ஆரம்பித்தனர். 1815இல் லண்டன் மிஷனரி சங்கம் ரொபர்ட் மொஃபட் என்பவருடன் நான்கு மிஷனரிகளை ஆப்பிரிக்காவுக்கு அனுப்பியது.
தென்னாப்பிரிக்காவிலுள்ள கேப் டவுனுக்குச் சென்ற இவர்களில் மொஃபட்டுக்கும் இன்னுமொரு மிஷனரிக்கும் பல மாதங்களின் பின்பே கேப்டவுனுக்கு வடக்கே செல்ல அனுமதி கிடைத்தது. இவர்கள் கேப்டவுனுக்கு வடக்கே பலநூறு மைல்களுக்கு அப்பாலுள்ள நம்மாகுவலன்ட் என்னுமிடத்தில் இருவருட காலம் பணியாற்றிய பின்னர் மறுபடியுமாக கேப்டவுனுக்கு வந்தனர். அச்சமயம் அங்கு இங்கிலாந்திலிருந்து வந்த அவரது காதலி மேரி ஸ்மித்தை (1819இல்) திருமண முடித்த மொஃபட், அவளுடனும் இன்னுமொரு மிஷனரியுடனும் கேப்டவுனுக்கு 600 மைல்கள் வடகிழக்கில் இருந்த குருமன் என்னுமிடத்துக்குச் சென்று தனது இறை பணியை ஆரம்பித்தார்.
(தொடரும்)