அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்

புனித வேதாகமத்தின் வரலாறு (ஜனவரி-பிப்ரவரி 2016)
அத்தியாயம்-10
சகோ.M.S.வசந்தகுமார்

தமிழ் வேதாகமத்தின் வரலாறு

புனிதவேதாகமத்தின் புதுமை வரலாற்றில், அது தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட வரலாறு தனித்துவமான தொன்றாகும். இன்று நாம் உபயோகிக்கும் தமிழ் வேதாகமம் நீண்டகால சரித்திரத்தைக் கொண்டுள்ளது. இது தனி ஒரு மனிதனது முயற்சியினால் உருவான மொழிபெயர்ப்பல்ல. தமிழில் வேதாகமத்தை மொழி பெயர்க்கும் பணியில் பலர் ஈடுபட்டிருந்தனர். ஆரம்பத்தில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் வேதாகமம் பிற்காலத்தில் திருத்தி மொழிபெயர்க்கப்பட்டது. 250 வருடகாலத்தில் புதிய ஏற்பாடு 8 தடவைகளும் முழுவேதாகமமும் 6 தடவைகளும் திருத்தப்பட்டுள்ளன. தமிழ் வேதாகமம் ஆரம்பத்தில் ‘சத்தியவேதம்’ எனும் பெயரிலேயே வெளிவந்தது. பிற்காலத்திலேயே ‘பரிசுத்த வேதாகமம்’ எனும் பெயரைப் பெற்றது. இதன் தனித்துவமான வரலாற்றை இப்பகுதியில் பார்ப்போம்.

இந்திய இலக்கிய வரலாற்றில் தமிழ்மொழி சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. இதற்குக் காரணம் இந்திய மொழிகளிலேயே முதன் முதலில் அச்சிடப்பட்ட புத்தகம், தமிழ் மொழியிலேயே வெளியிடப்பட்டுள்ளது. போர்த்துக்கேயர் இந்தியாவில் கிறிஸ்தவ மார்க்கத்தைப் பரப்பும் காலத்தில் தமிழ் மக்களது உபயோகத்திற்காக 1554 ஆம் ஆண்டு, ஐரோப்பாவிலுள்ள ‘லிஸ்பன்’ எனும் நகரில் ஒரு கிறிஸ்தவ வினா விடை புத்தகம் தமிழில் வெளியிடப்பட்டது. இதன் பின்னர் 1577 ஆம் ஆண்டு இயேசு சங்கம் எனும் மிஷனரி இயக்கத்தைச் சேர்ந்த கொன்சல்வெஸ் என்பவர் முதல் தடவையாக இந்தியாவிலுள்ள கொல்லம் என்ற இடத்தில் தமிழ் அச்செழுத்துக்களை வார்த்தெடுத்தார். இச்சங்கத்தைச் சேர்ந்த ஹென்றிக்ஸ் என்பவர் 1578 இல், தம்பிரான் வணக்கம் எனும் பெயரில் ஒரு கிறிஸ்தவ புத்தகத்தை கொல்லம் எனுமிடத்தில் அச்சிட்டு வெளியிட்டார். 16 பக்கங்களைக் கொண்டிருந்த இப்புத்தகத்தில் கர்த்தருடைய ஜெபமும், பத்துக் கற்பனைகளும், அப்போஸ்தலருடைய விசுவாசப் பிரமாணமும், சில ஜெபங்களும் தமிழில் அச்சிடப்பட்டிருந்தன. இதுவே இந்தியாவில் அச்சிடப்பட்ட முதலாவது புத்தகமாகும். இது மறுபடியுமாக 1579 இல் 112 பக்கங்கள் கொண்ட புத்தகமாக வெளிவந்தது. இவற்றில், தமிழ் எழுத்துக்கள் அக்காலத்து முறைப்படி இருப்பதை கவனிக்கலாம். அக்காலத்தில் மெய்யெழுத்துக்களின் மேல் புள்ளியிடும் வழக்கம் இருக்கவில்லை. உதாரணமாக, ‘க்’ எனும் எழுத்து ‘க’ என்றே எழுதப்பட்டது. அத்தோடு, ர கரத்துக்கு கீழே கால் இருப்பதில்லை. அதாவது ‘ர’ அக்காலத்தில் ‘ா’ என்றே எழுதப்படும். அதேபோல, இரட்டைக்கொம்பு உபயோகிக்கப்படவில்லை. அதாவது, நேசம் என்பது ‘நெசம்’ என்றே எழுதப்பட்டது. மேலும், ‘ற’ எனும் எழுத்து ‘அ’ எனும் எழுத்து கீழ் வயிறு இல்லாமல் எழுதப்பட்டது. 18ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியளவிலேயே, ‘கொன்ஸ்டன்டைன் பெஸ்கி’ எனும் போர்த்துக்கேய மிஷனரி மெய்யெழுத்தின் மேல் புள்ளியிடும் முறையையும், ரகரத்துக்கு கீழே கால் அமைக்கும் முறையையும், ஏகார ஓகார உயிர்மெய் எழுத்துக்களுக்கு இரட்டைக்கொம்பு உபயோகிக்கும் முறையையும், அறிமுகப்படுத்தினார். அக்காலத்தில் இந்தியாவில் இருந்த போர்த்துக்கேய மிஷனரிகள் பல தமிழ்ப் புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்டுள்ள போதிலும், அவர்கள் ஒருசில வேதப்பகுதிகளை மட்டுமே தமிழில் மொழிபெயர்த்தனர். முழுவேதாகமத்தையும் தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சிகளில் அவர்கள் அப்போது ஈடுபடவில்லை.

வேதாகமத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு முதன்முதலில் இலங்கையில்தான் ஆரம்பிக்கப்பட்டது. எனினும், 16 ஆம் நூற்றாண்டில் இலங்கை வந்த ரோமன் கத்தோலிக்க மிஷனரிகள் 1566 இல், இலங்கையின் வட மேற்குப்பகுதியிலுள்ள மன்னார் தீவில் அச்சகமொன்றை உருவாக்கி சில தமிழ்ப் புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்டபோதிலும், அவர்களும் வேதாகமத்தைத் தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சிகளில் ஈடுபடவில்லை. 17ஆம் நூற்றாண்டில் இலங்கை வந்த ஒல்லாந்து நாட்டு சீர் திருத்த சபையைச் சேர்ந்த மிஷனரிகளே முதல் முதலில் தமிழில் வேதாகமத்தை மொழிபெயர்க்கும் முயற்சிகளை இலங்கையில் ஆரம்பித்தவர்களாவர். இவர்களுள் யாழ்ப்பாணத்திலிருந்த ஒல்லாந்து சீர்திருத்த சபையில் பணியாற்றிய பிலிப்புஸ் பல்தேயுஸ் என்பவர், 1660 அளவில் மத்தேயுவின் சுவிசேஷத்தைத் தமிழில் மொழிபெயர்த்தார். இம்மொழிபெயர்ப்பு அச்சிடப்பட்ட புத்தகமாகாதபோதிலும், பனை ஓலை ஏடுகளில் எழுதப்பட்ட இதன் பிரதிகள் யாழ்ப்பாண கிறிஸ்தவர்களால் உபயோகிக்கப்பட்டுள்ளன. பிலிப்புஸ் பல்தேயுஸ் கர்த்தருடைய ஜெபம், பத்துக் கற்பனைகள், விசுவாசப்பிரமாணம் என்பவற்றையும் தமிழில் மொழி பெயர்த்திருந்தார். இவர் தன் சொந்த நாட்டுக்குச் சென்ற பின் அவற்றை ஒரு சிறு துண்டுப்பிரசுரமாக அச்சிட்டு வெளியிட்டுள்ளார். பின்னர் கீழ்த்திசை நாடுகளில் தனக்கேற்பட்ட அனுபவங்களைப் பற்றி அவர் எழுதிய நூலிலும் அவற்றையும் சேர்த்துள்ளார்.

இலங்கையை ஒல்லாந்தர் ஆட்சி செய்த காலத்தில் (17ஆம் நூற்றாண்டில்) வேதாகமத்தைத் தமிழில் மொழி பெயர்க்க அவர்கள் எடுத்த முயற்சிகள் முழுமையாக வெற்றி பெறவில்லை. 1665இல் பிலிப்புஸ் பல்தேயுஸ் இலங்கையை விட்டுச் செல்ல வேண்டியிருந்தமையினால் அவரால் ஆரம்பிக்கப்பட்ட புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு முயற்சி மத்தேயு சுவிசேஷத்தோடு நின்றுவிட்டது. 1692 இல், ஏட்ரியான்ஸ் டீ மே எனும் ஒல்லாந்து நாட்டைச் சேர்ந்த மிஷனரி, யாழ்ப்பாணத்தில் புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவரது மொழிபெயர்ப்பும் அச்சிடப்பட்ட புத்தகமாகவில்லை. அதன் பின்னர், 1694இல் ஒல்லாந்து அரசாங்கம் பழைய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்க்க எடுத்த முயற்சிகளும் தோல்வியடைந்தன. 1736இல், இம்ஹொஃப் என்பவர் ஒல்லாந்தின் தேசாதிபதியாக இலங்கையில் பணியாற்றியபோது, வேதாகமத்தைத் தமிழில் மொழிபெயர்க்கும்படி கிராமர் எனும் மிஷனரிக்குக் கட்டளையிட்டார். எனினும், புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழி பெயர்க்கத் தொடங்கிய இவர் சடுதியாக மரணமடைந்தமையினால், இம் மொழிபெயர்ப்புப் பணியும் தடைப்பட்டது. 1741இல் கிராமர் மொழி பெயர்த்த மத்தேயு சுவிசேஷம் மட்டும் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இதன் பின்னர் 1742இல் நான்கு சுவிசேஷப் புத்தகங்களும் தமிழில் அச்சிடப்பட்டன. இதன் பிரதி ஒன்று பிரித்தானிய சர்வதேச வேதாகமச் சங்கத்தின் லண்டன் அலுவலகத்தில் உள்ளது. இதன் பின்னர் 1746 இல், பிலிப் டீ மெல்லோ என்பவரது முயற்சியினால் நான்கு சுவிசேஷங்களும் அப்போஸ்தலர் நடபடிகளும் 1748இல் கொழும்பில் பிரசுரிக்கப்பட்டது. இதன் பிரதி ஒன்று கொழும்பு நூதனசாலை நூல் நிலையத்தில் இருக்கின்றது. பிலிப் டீ மெல்லோ 1750 அளவில் புதிய ஏற்பாடு முழுவதையும் தமிழில் மொழி பெயர்த்திருந்தார். 1753 இல், சங்கீதப் புத்தகங்கள் தமிழில் தனியாக ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டது. 1759 இல் டீ மெல்லோவின் புதிய ஏற்பாடு அச்சிடப்பட்டது.

18ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பிரித்தானியர் ஒல்லாந்தரிடமிருந்து இலங்கையைக் கைப்பற்றினர். அதேசமயம், இலங்கைக்கு வந்த பிரித்தானிய சபைகளின் மிஷனரிகள், ஒல்லாந்தருடைய சீர்திருத்த சபையோடு தம்மை சம்பந்தப் படுத்திக்கொள்ள விரும்பாதமையினால், அவர்கள் ஒல்லாந்தர் வெளியிட்ட புதிய ஏற்பாட்டை உபயோகிக்கவில்லை. இதனால், ஒல்லாந்தருடைய தமிழ் வேதாகம மொழிபெயர்ப்புகள் அவர்களோடு இலங்கையிலிருந்து இல்லாமல் போய்விட்டன. அவற்றின் ஒரு சில பிரதிகள் மட்டும் இன்று சில நூலகங்களிலும் நூதன சாலைகளிலும் உள்ளன. வேதாகமத்தைத் தமிழில் மொழிபெயர்க்க இலங்கையில் எடுக்கப்பட்ட ஆரம்ப முயற்சிகள் அனைத்தும் முழுமையாக வெற்றியளிக்காத போதிலும், இந்தியாவில் பல ஆக்கபூர்வமான மொழிபெயர்ப்புப் பணிகள் நடைபெற்றுள்ளன. இன்று நாம் உபயோகிக்கும் தமிழ் வேதாகமம் 1871 ஆம் ஆண்டு, சென்னை வேதாகமச் சங்கம் வெளியிட்ட ஒன்றிணைப்புப் பதிப்பு எனும் மொழிபெயர்ப்பேயாகும். இது தமிழில் ஐக்கிய பதிப்பு என்றும் அழைக்கப்படுகின்றது. எனினும், இதற்கும் முன்பே சில மொழி பெயர்ப்புகள் இந்தியாவில் வெளிவந்துள்ளன. தமிழ்வேதாகமத்தின் தனித்துவமான வரலாற்றில் அம்மொழி பெயர்ப்புகள் முக்கியமானவைகளாகும்.

(தொடரும்)