எல்லாம் மாயையே!

தியானம்: 2024 மே 3 வெள்ளி | வேத வாசிப்பு: பிரசங்கி 2:1-11

YouTube video

என் கைகள் செய்த சகல வேலைகளையும், நான்பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது (பிர.2:11).

இவ்வுலக வாழ்வு நமக்கு ஒருமுறைதான் அருளப்பட்டுள்ளது. ஆகவே என்ன சந்தோஷங்களை எல்லாம் அனுபவிக்க முடியுமோ, அவற்றையெல்லாம் அனுபவித்துவிடவேண்டும் என்று எண்ணுவோர் சிலர். தருணம் கிடைக்கும்போது அதைத் தந்திரமாய்ப் பயன்படுத்திக் கொள்ளவேண்டுமென்று எண்ணுவோரும் உண்டு. வயது சென்ற பின்னர் எதுவும் இயலாது, எனவே வாலிப வயதிலேயே அனைத்தையும் சாதித்துவிடவேண்டும் என்று துடிக்கும் வாலிப உள்ளங்களும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால், நமக்கிருக்கும் இந்த ஒரே வாழ்வில் நாம் எதைப் பெற்றுக்கொள்ளப் போகிறோம்? எதை இழந்துபோகப் போகிறோம்? என்பது நமது தெரிந்தெடுப்பில்தான் இருக்கிறது.

சாலொமோன் வாலிபப்பிராயத்தில் ராஜ்யபாரத்தை ஏற்றுக்கொண்டு, அதைச் சரிவர நடத்துவதற்காக தேவனின் ஞானத்தையும் கேட்டுப் பெற்றுக்கொண்டார். தேவனும் அவருக்கு ஞானத்தோடு சகல ஆசீர்வாதங்களையும், ஐசுவரியத்தையும் கூட்டிக்கொடுத்தார். அவரே பிரசங்கிப் புத்தகத்தின் எழுத்தாளரும்கூட. அவர் வாஞ்சித்த எல்லா சந்தோஷத்தையும் அனுபவித்து பார்த்த அவர், கடைசியில் யாவுமே மாயை, மாயை, மாயை என்று தான் கண்டுகொண்டதாகவும் குறிப்பிடுகிறார். இவ்விதமான மாயையான உலகத்துக்குள்ளே, ஒரு உன்னத மான நோக்கத்தோடுகூட நம்மை தேவன் உருவாக்கியிருக்கிறார் என்றால் அது அதிசயமல்லவா? அது நம்மால் கூடாது என்று எண்ணக்கூடாது. நம்மால் முடியும் என்பதால்தான் அவர் அந்த அரும்பெரும் பொறுப்பை நமக்குத் தந்திருக்கிறார். அவருடைய அந்த நோக்கத்தை அறிந்து, அதற்கேற்ப எவனொருவன் வாழு கிறானோ, அவனது வாழ்க்கை தேவனுக்கு ஏற்புடையதாயிருக்கும்.

ஆனால் நாம், இந்த அழிந்துபோகும் மாயையான உலகத்துக்குள்ளே, மாயையான காரியங்களையே நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். ஒருநாளிலே, இவை யாவும் அழிந்துபோகும்; மாயை என்று தெரிந்திருந்தும் அதனை நோக்கி ஓடிய நமது வாழ்வும் கேள்விக்குறி ஆகிவிடும். அழியாததும் நித்திய நித்தியமாய் வாழப் போவதுமான நமது ஆத்துமாவின் நிலையென்ன? அது நித்தியமாய் தன்னை சிருஷ்டித்த தேவனைவிட்டு பிரிந்துபோவது மிகவும் துக்கரமானதாகும். நமது வாழ்வுக்காய் தேவன் வைத்திருந்த உன்னதமான திட்டம் அழிந்துபோகும் வண்ணமாய் நாம் அசட்டையாய் ஜீவிக்கலாமா? நம் தேவன் மாயையான இவ்வுலகத்தினுள்ளே உன்னதமான ஒரு நோக்கத்தோடுகூட நம்மைக்கொண்டு வந்துள்ளார். மாயைக்குள்ளே நாம் மடிந்து விழாமல் நம்மை மீட்டுக்கொண்டவரும் அவரே. எனவே அவரது சித்தத்தை நமது வாழ்வின் நோக்காகக்கொண்டு வாழ நாம் ஆயத்தமாகுவோமாக. இவ்வுலக மாயைகளை இனங்கண்டும், அதையே நோக்கி ஒடிக்கொண்டிருக்கும் நமது வாழ்வை தேவனை நோக்கித் திருப்புவோமாக.

ஜெபம்: அன்பின் தேவனே, உலகமும் அதினுடையவைகளும் மாயை என்பதை இன்று எனக்கு உணர்த்தினீர். நித்திய நித்தியமாக உம்மோடு வாழ்வதற்கான அந்த உன்னத நோக்கம் என் வாழ்வில் நிறைவேற என்னை உம்மண்டை ஒப்படைக்கிறேன். ஆமென்.