ஜெபக்குறிப்பு: டிசம்பர் 31 செவ்வாய்

“நான் அவர்களோடே சமாதான உடன்படிக்கை செய்வேன்” (எசேக்.37:26) என்று வாக்குப்பண்ணி இம்மட்டும் நம்மை சமாதானத்தோடு காத்து நடத்திவந்தவர் புதிய வருஷத்தையும் நமக்கு ஆசீர்வதித்து புதுப்பெலத்தால் புதுகிருபையால் நிரப்பும்படியாக ஜெபிப்போம்.

இம்மட்டும் நடத்தியவர்…

தியானம்: டிசம்பர் 31 செவ்வாய்; வாசிப்பு: உபாகமம் 1:24-36

“… உங்களுக்கு முன் செல்லும்
உங்கள் தேவனாகிய கர்த்தர்…”
(உபாகமம் 1:30)

தமக்கு வாக்குப்பண்ணப்பட்டதும் தாம் சுதந்தரிக்கப் போகிறதுமான கானான் தேசத்தைப் போய் பார்த்து வரும்படி கோத்திரத்திற்கு ஒருவனாக பன்னிருபேர் மோசேயினால் அனுப்பப்பட்டு போனார்கள். அப்படியே போனவர்கள் அந்தத் தேசத்தின் செழிப்பைக் கண்டும், அங்கிருந்த மக்களைக் கண்டு பயந்து, நம்மை இத்தேசத்தில் வைத்து அழித்துப்போடும்படிக்கா எகிப்திலிருந்து புறப்படப் பண்ணினார் என்று முறுமுறுத்தனர். அந்தவேளையில் மோசே சொன்ன வார்த்தைகள் இன்று நம்முடனும் பேசட்டும்.

ஒரு ஆண்டை முடித்துவிட்டோம். நமக்கு முன்னே இன்னொரு ஆண்டு காத்திருக்கிறது. நடப்புகளைப் பார்க்கும்போது, வாழ்க்கை இன்னமும் அதிக கடினமும் போராட்டம் நிறைந்ததுமாய் இருக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை. அன்று கானானிலே கண்ணுக்குத் தெரிந்த ஏனாக்கியரையும் அமலேக்கியரையும் பார்த்து அந்த இஸ்ரவேலர் தங்கள் பயத்தையும் அவநம் பிக்கையையும் வெளிப்படுத்தினர். இன்று நமக்கோ, முன்னே இருக்கும் வருடத்தை குறித்து எதுவும் தெரியாது. ஆனால், நமக்கு ஒன்று தெரியும். கொடிய பாவ அரக்கனிடமிருந்து நம்மை மீட்கும்படிக்கு தம்மையே பலியாகக் கொடுத்த தேவன் நமக்கு முன்னே செல்லுகிறார். அந்த மகா உன்னத வெற்றியைத் தந்த தேவனுக்கு முன்பாக இருக்கும் வருடத்தை நம்மால் வெல்லமுடியாதா? “ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல, நீங்கள் இவ்விடத்திற்கு வருகிறவரைக்கும், கடந்துவந்த வழிகள் எல்லாவற்றிலும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சுமந்துகொண்டு வந்ததைக் கண்டீர்களே.., இப்படியிருந்தும், இந்தக் காரியத்தில் நீங்கள் அவரை விசுவாசியாமற் போனீர்கள்.” ஆம், இருவரைத்தவிர, விசுவாசியாத இஸ்ரவேலர் அனைவரும் கானான் பிரவேசத்தை இழந்தனர். ஆனால், இத்தனையையும் அறிந்து அனுபவித்திருக்கிற நாமும் தேவனை விசுவாசியாமற்போவது எப்படி?

தேவபிள்ளையே! நாளை அல்ல, அடுத்த நிமிடமே என்னவாகும் என்று சிந்திக்க முடியாத ஒரு காலகட்டத்தில்தான் நாம் வாழுகிறோம். என்றாலும் நமக்கு ஒரு நம்பிக்கை உண்டு. கிறிஸ்துவுக்குள் நமக்குப் புதுவாழ்வு தந்த நமது தேவனாகிய கர்த்தர் நமக்கு முன்னே செல்லுகிறார். நம்மை மீட்கும் படிக்கு, சிலுவையிலே அவர் நடத்திய போராட்டம் மகா பயங்கரமானது. அந்த தேவாதி தேவன் வருகிற புதிய ஆண்டிலும் நம்மை அதிசயமாய் நடத்துவார். அந்த நம்பிக்கையுடன் அவரது தோளிலே சாய்ந்துவிடுவோமாக. எனது சார்பிலும் சத்தியவசன ஊழியர்கள் சார்பிலும் ‘அனுதினமும் கிறிஸ்துவுடன்’ வாசகர்களுக்கு, அன்பின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

ஜெபம்: “இந்த இடம் மட்டும் என்னை அழைத்து வந்த தேவனே, என்னை முற்றிலும் உமக்கென்று அர்ப்பணிக்கிறேன். ஏற்று என்றும் வழி நடத்தும். ஆமென்.”

ஜெபக்குறிப்பு: டிசம்பர் 30 திங்கள்

“… அவர் தக்கபடி உங்களுக்கு … முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கனவே வருஷிக்கப்பண்ணுவார்” (யோவேல் 2:23) என்ற வாக்குப்படி பற்பலத் தேவைகளோடிருக்கிற 13 நபர்களுக்கு கர்த்தர்  அற்புதங்களைச் செய்து அவர்கள் தொடர்ந்து தமது வழிகளில் நிலைக்கச் செய்திட வேண்டுதல் செய்வோம்.

நான் அல்ல, தேவனே!

தியானம்: டிசம்பர் 30 திங்கள்; வாசிப்பு: ஏசாயா 41:8-14

“நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை.
நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்”
(யோவான் 15:16).

இலண்டனில் படிக்கின்ற ஒரு இளம் வாலிபப் பெண் அவள். அவளது முகத்தில் ஜொலித்த அழகையும் அறிவையும் கவனித்தபடியே பேச்சுக் கொடுத்தேன். ‘நீ கடவுளை நம்புகிறாயா?’ ‘நான் கடவுளை நம்புகிறேன்; ஆனால், சமயங்களை நம்புவதில்லை’ நறுக்கென்று பதிலளித்தாள். ‘கடவுளைப் பற்றி என்ன நினைக்கிறாய்?’ பல நிச்சயமற்ற பதில்கள் வந்தன. ‘நீ நம்புகிற, ஆனால் அவர் யார் என்ற தெளிவற்ற அந்தக் கடவுளை நீ தேட முயற்சிக்கவில்லையா?’ இக் கேள்விக்குரிய பதில் மிகக் கூர்மையாக இருந்தது. ‘நான் தன்னை அறியவேண்டும் என்று கடவுள் விரும்பினால், அவரே தன்னை எனக்கு வெளிப்படுத்தட்டும்’. இதுதான் அவளது பதில். புறமத சூழலில் வாழும் அவள், கடவுளைக்குறித்த கரிசனையே இல்லை என்பதுபோலக் காட்டிக்கொண்டாலும், அவளுக்குள் ஒரு ஏக்கம் இருப்பதை உணரக்கூடியதாக இருந்தது.

தான் தேவனைத் தேடுவதற்கு முன்னரே, அவர் தன்னைத் தேடினார் என்பதையோ, தான் தெரிந்துகொள்ளும் முன்னரே அவர் தன்னைத் தெரிந்து கொண்டார் என்பதையோ, தான் நேசிக்கும் முன்னரே தேவன் தன்னை நேசித்து தன் ஜீவனைக் கொடுத்தார் என்பதையோ அந்த இளம் வாலிபப் பெண் சற்றும் அறிந்திருக்கவில்லை. ஆனால், இவற்றையெல்லாம் அறிந்திருக்கிற நமக்கும் அவளுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா? அவள் அறிந்திராததால் கரிசனை அற்று காணப்பட்டாள். நாமோ எல்லாம் அறிந்துகொண்டே எதுவும் அறியாதவர் போல வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அன்று, இஸ்ரவேல் தகுதியானது என்றோ, இன்று நாம் தகுதியுடையவர்கள் என்றோ தேவன் தமது நாமத்தைச் சொல்லும்படி நம்மில் எவரையும் தெரிந்துகொள்ளவில்லை. அல்லது, நாமாக அவரைத் தேடிக் கண்டுபிடிக்கவுமில்லை. நாம் இன்று தேவனுடைய பிள்ளைகளாக வாழுவது தேவனுடைய சுத்த கிருபை.

அப்படியிருக்க, தேவனை அறியாதவர்கள் மத்தியில் உப்பாய் ஒளியாய் வாழவேண்டிய நாமே இருளின் பிள்ளைகளாக வாழலாமா? அன்று இஸ்ரவேல் செய்த தவறை, கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட நாமும் செய்யலாமா? தேவன் நமக்குத் துணையும், உறவுமாக இருக்கிறார். பாவத்தின் மீது வெற்றியும் தந்துள்ளார். இன்னமும் என்ன வேண்டும்? இந்த உலகத்திற்குப் பயப்பட்டு, மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறுவது ஏன்? அப் பெண்ணைப் போன்று தேவனை அறியாதவர்கள் மத்தியில்தான் நாமும் வாழுகிறோம். அவர்களையும் தேவன் நேசிக்கிறார் என்ற நம்பிக்கையின் செய்தியை நாம் அடக்கி வைக்காமல், வருகிற புத்தாண்டில் அவர்களுடைய வாழ்வுக்கும் ஒரு நம்பிக்கையைக் கொடுப்போமா!

ஜெபம்: “பிதாவே, நான் அல்ல, நீரே என்னை முந்தி நேசித்தீர். உமது அன்பின் செய்தியைப் பிறருக்கும் சொல்ல என்னை அர்ப்பணிக்கிறேன். ஆமென்.”