ஜெபக்குறிப்பு: அக்டோபர் 31 திங்கள்

“ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்” (ஏசா.66:13) என்ற வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியானவர் நம்மோடிருந்து கற்றுத்தந்த எல்லா ஆலோசனைகளுக்காகவும், தேவனுடைய வழிநடத்துதலுக்காகவும் நன்றி செலுத்தி துதிப்போம்.

தேவனை நெருங்கிச் சேருதல்!

தியானம்: அக்டோபர் 31 திங்கள்; வேத வாசிப்பு: எபிரெயர் 10:19-23

“…கர்த்தரிடத்தில் ஏறிவந்து, தூரத்திலிருந்து பணிந்துகொள்ளுங்கள். மோசே மாத்திரம் கர்த்தரிடத்தில் சமீபித்து வரலாம்” (யாத்.24:1-2).

இயேசுவின் முகம் மேலே நோக்கியும், இரு கரங்களும் தலைக்கு மேலே உயர்த்தப்பட்டபடியும் ஒரு சிற்பத்தை டென்மார்க் நாட்டில் பிரசித்திபெற்ற சிற்பி பெர்டெல் தொர்வால்ட்சென் என்பவர் வடிவமைத்து முடித்தார். அன்றிரவு, அருகிலிருந்த கடலிலிருந்து பனி அச்சிற்பக் கூடத்துக்குள் புகுந்து, களிமண்ணினாலான அச்சிலையின் முகம் முன்புறம் குனிந்தும், கரங்கள் இரண்டும் கீழ்நோக்கி நீட்டி விரிந்துவிட்ட நிலையிலும் அதனை உருமாற்றிவிட்டது. மறுநாளில் சிற்பக்கூடத்தில் நுழைந்த சிற்பி அதிர்ச்சியுற்றாலும், அமைதியாக சிற்பத்தை ஆராய்ந்துவிட்டு, “அழைக்கும் இயேசு” போல ஒரு புதிய கோணத்தில் மீண்டும் வடிவமைத்து, அதனடியில் “என்னிடத்தில் வாருங்கள்” என்று நன்றியுள்ள இருதயத்துடன் செதுக்கி வைத்தார்.

இஸ்ரவேல் மக்கள் சீனாய் மலைக்கு வந்தபோது, தேவன், மக்களின் தலைவர்களை “என்னிடம் வாருங்கள்” என்று அழைத்தார். எனினும் அவர்கள் அனைவரும் தூரத்திலிருந்தே தேவனை ஆராதிக்க வேண்டும்; மோசே கிட்ட நெருங்கிவந்து தேவனுடன் ஐக்கியம் கொள்ளலாம் என்றும் கட்டளையிட்டார்.

ஆனால் புதிய ஏற்பாட்டிலோ விசுவாசிகள் தேவனுடன் நெருங்கிய ஐக்கியம் கொள்ளும்படியாகவே அழைக்கப்படுகின்றனர். “தேவனுடைய வீட்டின் மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும், …உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்” (எபி.10:21-22) என்று எபிரெய ஆசிரியர் ஊக்கப்படுத்துகிறார். யாக்கோபு, “தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்” (யாக்.4:8) என்ற வாக்குறுதியைத் தனது நிருபத்தில் எழுதியுள்ளார்.

தேவனிடமிருந்து தூரமாய் போகாதிருங்கள். அவர் தம்மண்டை நெருங்கிச் சேரவே உங்களை அழைக்கிறார். “வாருங்கள்” என்றும், “வழக்காடுவோம் வாருங்கள்” என்றும் (ஏசா.1:18). “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்.11:28) என்றும், “வா” என்றும் “ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்” (வெளி.22:17) என்றும் அழைக்கிறார். தேவனிடத்தில் வருவதற்கு முதலாவது உங்களது பாவத்தை அறிக்கையிட்டு ஒப்புரவாக வேண்டியது அவசியம். அப்பொழுதுதான் பரலோக பிதாவின் ஐக்கியத்தையும் ஆசீர்வாதத்தையும் நீங்கள் அனுபவிக்கலாம். தேவனுடைய விரிந்த கரங்களைப்போலவே அவரது மனமும் விசாலமானது.

ஜெபம்: ஆண்டவரே, தேவனுடைய அழைப்பை நாங்கள் ஏற்றுக்கொண்டு கிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு எங்களை அர்ப்பணிக்கிறோம். ஆமென்.

ஜெபக்குறிப்பு: அக்டோபர் 30 ஞாயிறு

“நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள்” (சங்.95:6) என்ற வாக்குப்படியே கர்த்தரைத் தொழுது கொள்ளும்படியாக வந்திருக்கும் நாம் கர்த்தருக்கு முன்பாக நம்மைத் தாழ்த்தி சாஷ்டாங்கத்தோடு பணிந்துகொள்வோம்.

தூய்மை கெடாத மஞ்சம்!

தியானம்: அக்டோபர் 30 ஞாயிறு; வேத வாசிப்பு: மத்தேயு 5:27-32

“விபசாரம் செய்யாதிருப்பாயாக” (யாத். 20:14).

“செய்தித்தாளை ஏன் ஒரு நல்ல பெண்ணுக்கு ஒப்பிடுகிறோம்?” என்ற கேள்விக்கு சிறந்த பதிலைத் தருபவருக்கு பரிசளிப்பதாக ஒரு பதிப்பகம் அறிவித்தது. அப்போட்டியில் “ஒவ்வொரு மனிதனும் தனக்கென்று ஒன்றை வைத்திருக்க வேண்டும், மற்றவருடையதைப் பார்க்கக்கூடாது” என்ற வாசகமே பரிசினைப் பெற்றது. இதை ஒரு சிறந்த போட்டியாகக் கருதமுடியாது. எனினும், பரிசினைப் பெற்ற வாசகம் ஒரு முக்கியமான உண்மையை விளம்புகிறது. இஸ்ரவேல் மக்கள் விக்கிரக ஆராதனை செய்யும் நாட்டுக்குள்ளே நுழைய இருந்தார்கள். எனவே அவர்கள் பாலின பாவத்துக்குள் விழுந்துவிடும் சோதனைக்குள்ளாவார்கள் என்பதை தேவன் அறிந்திருந்தார். எனவேதான், “விபசாரம் செய்யாதிருப்பாயாக” என்ற கட்டளையை வெளிப்படையாகக் கொடுத்தார்.

புதிய ஏற்பாட்டிலும் எபிரெய புத்தகத்தின் ஆசிரியர், “விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாக மஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக. வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்” (எபி.13:4) என்று கூறுகிறார். பவுலடியார், விபசாரத்தை விக்கிரக ஆராதனை, பில்லி சூனியம், கொலைகள், வெறிகள் ஆகிய மாம்சத்தின் கிரியைகளுடன் சேர்த்துக் கருதுகிறார் (கலா.5:19-21). இயேசுவும் விபசாரத்தை சரீரத்தின் கிரியைகளைத் தாண்டி இருதயத்தின் இச்சை என்று தெளிவுபடுத்துகிறார் (மத்.5:27-28). நம்முடைய நாட்களிலும், மற்ற பாலியல் குற்றங்களுடன் விபசாரமும் பொதுவான குற்றங்களாகக் கருதப்பட்டாலும், கிறிஸ்தவர்களாகிய நாம் அதிக கவனமாய் வாழவேண்டும். நம்மை வீழ்த்திப்போட சாத்தான் பலவிதங்களில் சோதிப்பான். கடற்கரையோரம் காணப்படும் அரைகுறை ஆடையணிந்த மக்கள், ஒழுக்கக் கேடான பத்திரிகைகள், தொலைக்காட்சியில் காட்டப்படும் அருவருப்பான நிகழ்ச்சிகள் நம்மைச் சோதனையில் விழவைக்கும். விபசாரம் ஒருவரது வாழ்வில் வரும்பொழுது மற்ற ஒழுக்கங்கள் யாவும் பறந்துபோகும். மிகவும் எச்சரிக்கை!

பாலுணர்வு தொடர்பான சோதனைகள் உங்களைத் தொந்தரவு செய்தால், வேத வசனங்களை மனனம் செய்யுங்கள். மத்தேயு 5:8, 1தீமோ.5:22 போன்ற வசனங்களினால் சோதனையை முளையிலே கிள்ளியெறிந்து விடலாம். இருதயமே சோதனை ஆரம்பமாகும் இடமாதலால் அதனை வேதவசனங்களால் நிரப்புங்கள் (சங்.119:11). உங்களது நலனில் அக்கறையுள்ள நம்பிக்கை யான ஒருவருடன் உங்கள் போராட்டத்தைப் பகிர்ந்துகொண்டு ஆலோசனை கேளுங்கள். சோதனையை ஜெயிப்பதையே நாம் கருத்திற்கொள்ள வேண்டும்.

சாத்தானுக்கும், மாம்சத்தின் கிரியைகளுக்கும் எதிர்த்து நில்லுங்கள். உங்கள் ஆத்துமா பாவத்திலிருந்து காத்துக்கொள்ளப்பட வேண்டுமே!

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, வேதவசனங்களினால் எங்கள் இருதயம் நிரப்பப்படவும்,  தவறான சிந்தனைகள் நீக்கப்பட்டு போகவும் உதவி செய்யும். ஆமென்.