ஜெபக்குறிப்பு: 2019 ஜுன் 30 ஞாயிறு
“இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகலநாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” (மத்.28:20) என்று வாக்குப்பண்ணின தேவன் தாமே இம்மாதம் முழுவதும் நமது எல்லாச் சூழ்நிலைகளிலும் நம்மோடிருந்து நம்மை தமது சமாதானத்தோடு காத்துக்கொண்டபடியால் ஸ்தோத்திரித்து அவருடைய பாதம் பணிந்து அவருக்கு நன்றிபலிகளை ஏறெடுப்போம்.
விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும் (எபி.11:6).
ஞானமே பிரதானம்
தியானம்: 2019 ஜுன் 30 ஞாயிறு | வேத வாசிப்பு: பிரசங்கி 10:4-10
“…ஒரு காரியத்தைச் செவ்வையாய்ச் செய்வதற்கு ஞானமே பிரதானம்” (பிரசங்கி 10:10).
நிச்சயமாகவே கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று ஞானம். இது நடை முறை வாழ்வோடு சம்மந்தப்பட்டது. அதிகம் அறிவு இருந்தாலும், அதை நடைமுறைப்படுத்த ஞானம் வேண்டும். கஷ்டமான சூழ்நிலைகளில் சரியான தீர்மானம் எடுக்க அறிவு பயன்படாது; ஞானமே தேவை. ஞானம் தேவனுக்குப் பயப்படும் பயத்தோடு ஆரம்பித்து, சரியான பாதையில் நடத்தி, தேவனுக்கேற்ற கிரியைகளை நமக்குள் வளர்க்கிறது.
இன்று மேலதிகாரிகளுக்கு எதிராக போராடுகின்ற கலாச்சாரம் மலிந்துவிட்டது. ஆனால், உன் அதிபதி கோபம் கொண்டாலும், அமைதியாயிருந்து காரியத்தைச் செய்தால், மேலதிகாரி தன் கோபத்தைத் தணித்து ஆலோசிக்க முடியுமே என்று வேதாகமம் சொல்கிறது. அப்படியாக அமைதலாக நடந்துகொள்ள நமக்கு ஞானமே பிரதானமானது.
அடுத்தது, வாழ்க்கையில் கஷ்டங்களும் அபாயங்களும் வரத்தான் செய்யும். அந்நாட்களில் குழிகள் வெட்டுவது மிகவும் ஆபத்தான காரியம் (சங்.7:15) ஆனால் வெட்டவேண்டும். பாம்பு கடிக்கும் ஆபத்தும் உண்டு. அதற்காக வேலிகளைச் சரிப்படுத்தாமல் விடமுடியுமா? கல்லுகள் உடைக்கப்படத்தான் வேண்டும். மரங்களும் பிளக்கப்படத்தான் வேண்டும். இவற்றால் உண்டாகும் ஆபத்துக்களை நினைத்து ஒன்றும் செய்யாமல் இருக்கமுடியுமா? ஆனால், இவற்றிலிருந்து தப்பிக்கொள்ள முடியும். அதற்கு ஞானமே பிரதானம்.
இறுதியாக, கைகளில் ஆயுதம் இருந்தால் போதாது. அது கூராக இருக்கவேண்டும். அதைப் பயன்படுத்தவும் அறிந்திருக்க வேண்டும். அதேமாதிரி, நாமும் வாழ்க்கையில் மழுங்கியவர்களாக இருந்தால், ஜெபத்தில் தியானத்தில் குறைவுபட்டிருந்தால் பயிற்சி செய்து அதைக் கூராக்க வேண்டும். பிரச்சனைகளைக் கண்டறிந்து அதைச் சரி செய்ய வேண்டும். இதற்கும் ஞானமே பிரதானம்.
தேவபிள்ளையே, தீமைகள் தவிர்க்க முடியாதவை. ஆனால் ஞானவான் அத்தீமைகளை அடையாளம் கண்டு, கவனமாயிருந்து தன்னைக் காத்துக்கொள்கிறான். கர்த்தருக்குப் பயப்படும்போது தேவஞானம் நம்மை நடத்தும். அவர் அருளும் ஞானம் நாம் எடுத்து வைக்கும் அடிகளைக் காத்துக்கொள்ளும். நமது வாழ்வின் பிரச்சனைகள் அல்ல, ஞானமற்ற வாழ்வே நமக்கு முதல் பிரச்சனை. ஆகவே ஞானத்தை இன்றே கேட்டுப் பெற்றுக்கொள்வோமா?
“உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால்,… தேவனிடத்தில் கேட்கக்கடவன்” (யாக்கோபு 1:5).
ஜெபம்: ஞானத்தின் பிறப்பிடமாகிய ஆண்டவரே, உம்மை முழுமனதோடு எனக்குள் ஏற்று, உம்மோடு வாழ திவ்ய ஞானத்தை வேண்டுகிறேன். ஆமென்.
வாக்குத்தத்தம்: 2019 ஜுன் 29 சனி
நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன் (சங் 56:3).
2நாளாகமம் 17,18 | அப்போ.7:1-19
ஜெபக்குறிப்பு: 2019 ஜுன் 29 சனி
“கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து கர்த்தருக்கே காத்திரு” (சங்.27:14) இவ்வாக்குப்படியே பலவிதமான நெருக்கங்கள், பிரச்சனைகள், மனப்பாரங்களோடு பங்காளர் குடும்பங்களில் ஜெபிக்கக் கேட்ட ஒவ்வொருவரையும் கர்த்தர் ஸ்திரப்படுத்தி உரிய நன்மைகளை ஏற்றவேளையில் தந்து ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.
ஒரேயொரு ஈ
தியானம்: 2019 ஜுன் 29 சனி | வேத வாசிப்பு: பிரச. 10:1-3; 2ராஜா. 20:12-19
“செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளத்தைலத்தை நாறிக் கெட்டுப் போகப்பண்ணும்” (பிரசங்கி 10:1).
“வல்லரசு நாடுகளின் பல முக்கிய தலைவர்கள், பணத்துக்காகவே தன் அழகையும் கவர்ச்சியையும் பயன்படுத்திய ஒரு பெண்ணில் மயங்கி பெரிய அழிவுகளைச் சந்தித்தார்கள்” என்று பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை பத்திரிகையில் படித்தேன். பாடுபட்டு சம்பாதித்துக் கொண்ட நற்பெயரை நாசப்படுத்த மதிகெட்ட ஒரு விநாடி போதும்.
அதிக பணம், நேரம், புத்தி எல்லாமே செலவு செய்து, வாசனை திரவிய தயாரிப்புக்கானவைகளைச் சேர்த்து, இடித்து, பிழிந்து, காய்ச்சி, பல படிமுறைகளைக் கடந்து, எண்ணெயோடு சேர்ப்பான் தைலக்காரன். அது நன்கு ஊறி நறுமணம் கொடுக்கும் படிக்கும், பல வருடங்களுக்கு அதைப் பத்திரப்படுத்தும்படிக்கும் விலையுயர்ந்த ஜாடிக்குள் ஊற்றுவான். இவ்வளவும் செய்தவன் அந்த ஜாடிக்கு ஒரு மூடியைப்போட மறந்துவிட்டால் என்னவாகும்? ஒரேயொரு சிறிய ஈ, ஜாடிக்குள் விழுகிறது. தைலம் கெட்டுப் போகிறது. நறுமணம் கொடுக்க வேண்டிய தைலம் நாற்றமெடுக்கும். அவனுடைய கடினவேலைகள் யாவும், ஈ விழுந்த அந்த விநாடியிலேயே நாசமாகிவிடும்.
ஞானமே சிறந்தது, ஆனால் ஞானத்தை சிதைத்துப்போட ஒரு சிறிய மதிகேடான காரியம் போதும். கடவுளோ, சமுதாயமோ, நண்பர்களோ, குடும்பத்தினரோ, தவறு செய்ய அல்லது உண்மையற்றவர்களாக நடக்க நம்மை தூண்டுவதில்லை. நாமாகத்தான் செய்கிறோம். ‘கர்த்தரில் வைத்த நம்பிக்கையிலே அவனுக்கு முன்னும் பின்னும் யூதாவில் ஒரு ராஜாவும் இருந்ததில்லை’ என்று எசேக்கியாவைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. அப்படிப்பட்டவன் ஒரு விநாடியில் விழுந்துபோனான். பாபிலோன் ராஜாவுக்கு பொக்கிஷ சாலையைத் திறந்து காட்டும்படி யார் எசேக்கியாவைத் தூண்டியது? அவனேதானே அதை செய்தான்!
நமக்கு விழுகை வரலாம்; அதற்காக யாரையும் குறை கூறமுடியாது. அந்தத் தைலம் நாறிப்போக யார் காரணம்? அதற்குள் விழுந்த ஈயா? அல்லது ஜாடிக்கு மூடி போடாத தைலக்காரனா? நாம் கஷ்டப்பட்டுக் கட்டியெழுப்புகிற பக்தி வாழ்க்கையை, நல்ல உறவுகளை, நமது சபலப் புத்தியினால், மதியீனத்தால், அவசரப்பட்டுக் கொட்டிவிடுகிற ஒரு வார்த்தையால் நாமே பாழாக்க முடியும். எதையுமே கட்டியெழுப்ப அதிக காலம் எடுக்கும். ஆனால் இடித்துப் போட ஒரு விநாடி போதும். ஆகவே, ஒவ்வொரு அசைவிலும் கவனமாய் இருப்போமாக.
“நீ உன்னை ஞானியென்று எண்ணாதே. கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு” (நீதி. 3:7).
ஜெபம்: காக்கும் தேவனே, நறுமணம் வீசவேண்டிய என் வாழ்வை எந்தவொரு ஈயும் நாசப்படுத்த நான் இடமளிக்காதபடி என்னை உமது கரத்தில் அர்ப்பணிக்கிறேன். ஆமென்.