ஜெபக்குறிப்பு: 2019 மே 31 வெள்ளி
அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும் (ஏசா.48:18) இவ்வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் கர்த்தர் நடத்திய அற்புதமான வழிநடத்துதலுக்காகவும் தேவ சமாதானம் நம்மையும் நமது குடும்பத்தையும் நிறைத்து அவருக்குள் மனரம்மியமாய் வாழச் செய்த நன்மைகளுக்காக துதித்து ஸ்தோத்திரிப்போம்.
உன்னையே கொடுப்பாயா?
தியானம்: 2019 மே 31 வெள்ளி | வேத வாசிப்பு: கலாத்தியர் 2:20
“…இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்” (கலாத். 2:20).
“கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்.” பவுலின் இந்த அறிக்கை இன்று நமதாகட்டும். அதாவது, இந்த உலகத்துக்கு மரித்தவனாகி, கிறிஸ்துவுக்குள் பிழைத்தவர்களாக நாம் வாழ அழைக்கப்பட்டுள்ளோம். இன்னும் சொல்லப்போனால், நாம் எந்தப் பெரிய கொடைகளை தேவனுக்குக் கொடுத்தாலும், நம்மை அவருக்காக கொடுக்காவிட்டால், எல்லாம் வீணாகவே இருக்கும்.
‘இனி நான் அல்ல’ என்கிறார் பவுல். அதாவது, இனி எனது விருப்பம் எதுவும் இல்லை; கிறிஸ்துவின் விருப்பம், அவரது சித்தம் என்று வாழுவதே இதன் அர்த்தம். அன்று மரியாள் தன்னை அடிமையாக ஆண்டவருக்கு ஒப்புக் கொடுத்தாள். பேதுரு தனது மீன்பிடித் தொழிலை விட்டு இயேசுவின் பின்னே போகப் புறப்பட்டார். கர்த்தர் கொடுத்தார் கர்த்தர் எடுத்தார், கர்த்தருடைய நாமத்திற்கே ஸ்தோத்திரம் என்று யோபு ஒப்புக்கொடுத்து வாழ்ந்தார். கர்த்தர் தன்னை சிங்காசனத்தில் உயர்த்தும்வரை அவரது பலத்த கைக்குள் தாவீது அடங்கி நடந்தார். மோசே தனது ஜீவியகாலம் முழுவதையும் தேவ பணிக்காய் அர்ப்பணித்தார். இவையாவும் ‘இனி நான் அல்ல’ என்ற ஒப்புக்கொடுத்தலின் விளைவேயாகும்.
இன்று நம் காரியம் என்ன? ‘இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் ஜீவிக்கிறார்’ என்று நம்மால் தைரியமாக அறிக்கையிட முடியுமா? நமது ஆசைகளை விருப்பங்களை ஒதுக்கிவிட்டு, கிறிஸ்துவின் விருப்பங்களையும், அவரது சித்தத்தையும் நிறைவேற்ற நாம் தயாராய் இருக்கிறோமா? அதாவது, நம்மை முழுமையாக இயேசுவுக்காய் அர்ப்பணிக்க நாம் ஆயத்தமா?
நம்மை மீட்கும் பொருட்டு தமது சித்தத்தை ஒழித்து, பிதாவின் சித்தத்தைப் பூரணமாய் நிறைவேற்றிய கிறிஸ்துவின் வழிநின்று, நமது சித்தத்தை ஒழித்து, பாவத்திலே மாண்டுபோகும் மக்களை தேவனண்டை கொண்டுவர, அவருக்காய் ஊழியம் செய்ய, அவர் சித்தம் நிறைவேற்ற இன்று நம்மை தேவகரத்தில் அர்ப்பணிப்போமா? நம் சித்தம் ஒறுத்து, தேவசித்தம் செய்வது கடினமானதாகத் தெரிந்தாலும், அதில் நாம் பெரும் மகிழ்ச்சியை அனுபவித்துத்தான் பார்க்கவேண்டும்.
“நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத் தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” (ரோமர் 12:2).
ஜெபம்: ஆண்டவரே, உமது சித்தம் மாத்திரமே எங்கள் வாழ்வில் நிறைவேறும்படி உம்முடைய சேவைக்கே எங்களை அர்ப்பணிக்கிறோம். எங்களது ஆவி, ஆத்மா, சரீரத்தில் ஜெயம் தந்து ஆட்கொள்ளும். ஆமென்.”
வாக்குத்தத்தம்: 2019 மே 30 வியாழன்
என் குமாரனே, கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு (2தீமோ 2:1).
2இராஜாக்கள் 9,10 | யோவான்.9:1-20
ஜெபக்குறிப்பு: 2019 மே 30 வியாழன்
திருவசனம் செல்லும்படியான வாசலைத் தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள் (கொலோ.4:4) இவ்வாக்குப்படியே சத்தியவசன முன்னேற்றப்பணி செய்வதற்கு கர்த்தர் புதிய இடங்களில் திறந்த வாசலை ஏற்படுத்தித் தரவும், ஜெப ஊழியம், ஆலோசனை கடித ஊழியம் இவற்றின் வாயிலாகவும் புதிய நபர்களை சந்திப்பதற்கு கிருபைச்செய்யவும் ஜெபிப்போம்.
துதி செலுத்துவோம்!
தியானம்: 2019 மே 30 வியாழன் | வேத வாசிப்பு: சங்கீதம் 34:1-22
“கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்” (சங்.34:1).
இதுவரை தியானித்து வந்த ‘கொடுத்தல்’ குறித்த காரியங்கள் யாவுக்கும் மேலாக, நாம் ஆண்டவருக்குக் கொடுக்கவேண்டிய ஒரு முக்கியமானதும் முதன்மையானதுமான விஷயத்தை தவற விடக்கூடாது. அதுவே நாம் தேவனுக்குச் செலுத்தும் துதிகளும் ஸ்தோத்திரங்களுமாகும். எந்தச் சந்தர்ப்பத்திலும் தேவனைத் துதிக்கப் பழகிக்கொள்வோமாக. நாம் ஆசீர்வதிக்கப்படும்போதும், சுகமாக ஜீவிக்கும்போதும், தடையின்றி தேவனைத் துதிக்கலாம். ஆனால், துன்பமும் வேதனையும் நேரிடும்போது நம்மால் அவரை துதிக்க முடிகிறதா? எந்தச் சூழ்நிலையிலும் நம்மைப் பெலப்படுத்துகிறவர் ஆண்டவர் அல்லவா! சோதனை வேளைகளிலும், நாம் பாவத்தில் தடுக்கி விழுந்தாலும்கூட தேவனுடைய மகத்துவங்களை நினைவுகூர்ந்து, துதித்து, இதுவரை தேவன் நடத்திய வழிகளை நினைந்து ஸ்தோத்திரிப்போமானால் நாம் சோர்ந்துபோக மாட்டோம்; விழுந்த இடத்திலேயே விழுந்து கிடக்கவும் மாட்டோம்.
34ம் சங்கீதத்தை தாவீது துதித்தலுடனேயே ஆரம்பிக்கிறார். ஆனால் இச் சங்கீதத்தைப் பாடியபோது, தாவீது சுகமாய் அரியணையில் அமர்ந்திருக்கவில்லை. பிரச்சனைகளின் மத்தியிலேயே தாவீது தேவனைத் துதிக்கின்றார். அபிமெலேக்குக்கு முன்பாக தாவீது பைத்தியக்காரனைப்போல வேஷம் மாறியபோது தாவீது துரத்தி விடப்பட்டார். அப்போதுதான் தாவீது இச் சங்கீதத்தைப் பாடியுள்ளார். பவுலும், சீலாவும் சிறைச்சாலையிலே, கை கால்கள் கட்டப்பட்ட நிலையிலும் தேவனைத் துதித்துப் பாடினார்கள். நீரோ மன்னனினால் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டபோதும், சிங்கங்களுக்கு இரையாக்கப்பட்டபோதும், அவர்கள் எரிபந்தங்களாக மாற்றப்பட்டபோதும் அவர்கள் பாடினார்கள் என்று கூறப்படுகிறது. எப்படி இது முடிந்தது? ஆம், தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவாகிய கிறிஸ்துவுக்கு முன்பாக, அவரால் நாம் பெற்றுக் கொண்ட விலைமதிக்க முடியாத இரட்சிப்புக்கு முன்பாக, இந்த உலகம் கொண்டு வரும் பாடுகளும் சோதனைகளும் எம்மாத்திரம்!
தேவனைத் துதிப்பதற்கு கால நேரம் ஏது? இன்றைய ஆராதனைகளில் துதி வேளை என்று பிரித்து வைத்திருப்பது துக்கத்துக்குரிய காரியம். முழு ஆராதனையும் துதி ஆராதனைதான். நமது முழு வாழ்வும் துதி ஆராதனைகளாக மாறவேண்டும். நமது இருதயத்திலிருந்து புறப்பட்டு, உதடுகள் வழியாய் துதி எழும்புமானால், சபித்தலும், முறுமுறுத்தலும் நம்மைவிட்டுப் பறந்துபோய்விடும். எந்தப் பாடுகளானாலும், நாம் துதி நிறைந்த வெற்றி வாழ்வு வாழலாமே!
“சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. அல்லேலூயா” (சங்.150:6).
ஜெபம்: துதிக்குப் பாத்திரராகிய கர்த்தாவே, உம்மையே எப்பொழுதும் துதித்து, பாடுகளிலும் துன்பங்களிலும்கூட உம்மை பாடி மகிமைப்படுத்துகிறவர்களாக காணப்பட எங்களை உமது சமுகத்தில் அர்ப்பணிக்கிறோம். ஆமென்.