ஜெபக்குறிப்பு: 2019 நவம்பர் 30 சனி
தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து … உயர்த்தின (சங்.27:5) தேவன் தாமே இம்மாதத்தின் எல்லா நாட்களிலும் நமக்கு நிழலாக, அரணாக இருந்து வழிநடத்தினார். அவருக்கு முன்பாக முழந்தாளிட்டு பாதம் பணிந்து அவரை மகிமைப்படுத்துவோம். ஆமென்.
சோர்வடைய வேண்டாம்!
தியானம்: 2019 நவம்பர் 30 சனி | வேத வாசிப்பு: 1இராஜா.19:1-16
“சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவ மில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்” (ஏசாயா 40:29).
வயது பாகுபாடின்றி நம் எல்லோருக்கும் எப்போதுமே பெரும் சவாலாக இருக்கின்ற பல விஷயங்களில் மிக முக்கியமானது மனச் சோர்வு. மனச்சோர்வு என்ற வார்த்தைக்கு, கீழ்நோக்கி அழுத்தப்படும் செயல், ஒரு தாழ்வான நிலை, ஆவி அமிழ்ந்து போகுதல், புறக்கணிக்கப்பட்ட நிலை, தைரியமற்ற நிலை, பலமிழந்த நிலை என்று பலவித அர்த்தங்களைப் பலரும் கொடுக்கிறார்கள். இது மனித வாழ்வைச் சீரழிக்கின்ற ஒரு விஷயம். இந்த மனச் சோர்வு, மனிதனுடைய வாழும் நோக்கத்தைத் திசைதிருப்பிப் பெலனற்றுப் போகச் செய்துவிடுகிறது. கர்த்தர் ஒருவரே இதற்கு உகந்த பரிகாரி!
கர்மேல் பர்வதத்தில் எல்லோரையும் நடுங்க வைத்த எலியா தீர்க்கதரிசிக்கும் மனச்சோர்வா? யேசபேல் தன்னைக் கொலை செய்யத் திட்டமிட்டு எச்சரிக்கை செய்தபோது, தன் பிராணனை காக்க உயிருக்குப் பயந்து வனாந்தரத்தில் ஒரு சூரைச்செடியின் கீழ் ஒளிகிறான் எலியா. அங்கே உட்கார்ந்து தான் சாகவேண் டும் என்று கோரி, “போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்” என்று புலம்பிவிட்டு, படுத்து நித்திரை செய்கிறான். எப்படித்தான் நித்திரை வந்ததோ! கர்த்தர், எலியாவில் கொண்டிருந்த தூரநோக்கு திட்டங்கள் அதிகம். ஆசகேலை சீரியாவின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணவேண்டும்; நிம்சியின் குமாரனான யெகூவை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் பண்ணவேண்டும். எலியாவோ மனச்சோர்வுக்கு இடமளித்துத் தூங்கினான். கர்த்தர், அவனது சோர்வை அகற்றி, “நீ போகவேண்டிய தூரம் வெகுதூரம்” என்று கூறி பெலப்படுத்தி அனுப்பிவிட்டார். கர்த்தரால் முறியடிக்கப்பட முடியாத எந்த மனச்சோர்வும் இல்லை.
இன்று நம்மில் எத்தனைபேர் என்னென்ன காரணங்களால் சோர்வடைந்திருக்கிறோம்? “போதும் கர்த்தாவே” அல்லது “எதுவரைக்கும்” என்பதுபோன்ற கேள்விகள் நம்மைத் துளைத்துக்கொண்டே இருக்கலாம். இதனால், நமது வாழ்க்கை ஓட்டத்தில் பின்னடைவுகளும் விழுகைகளும்கூட நேரிட்டிருக்கலாம். தயக்கமின்றி தேவனண்டை திரும்புவோம். அவரிடமே நமக்குச் சகாயமுண்டு. மருத்துவ சிகிச்சைகள் மனச்சோர்வின் வேகத்தைக் குறைக்கலாம். ஆனால், விடியலைத் தரமுடியாது. ஒரு தூதனைக்கொண்டு தட்டி எழுப்பி, உணவளித்து, நடக்கப் பெலன் கொடுத்து, எலியா மூலம் தமது நோக்கத்தை நிறைவேற்றியவர், நமது மனச்சோர்வுகளை அகற்றி வெற்றியுள்ள விடியலின் வாழ்வைத் தருவார்.
“ஆபத்துக் காலத்தில் நீ சோர்ந்து போவாயானால், உன் பெலன் குறுகினது” (நீதிமொழிகள் 24:10).
ஜெபம்: எங்கள் பெலனாகிய கர்த்தாவே, எங்களை மனமடிவுண்டாக்கும் சூழ்நிலை களைக் கண்டு பெலன் குன்றிப்போகாமல் கர்த்தரிடத்தில் திடங்கொண்டு எழும்ப உமது வல்லமையைத் தாரும். ஆமென்.
வாக்குத்தத்தம்: 2019 நவம்பர் 29 வெள்ளி
தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை (நித்திய ஜீவனை) நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான் (யோவா.12:25).
தானியேல் 2 | 2பேதுரு 1
ஜெபக்குறிப்பு: 2019 நவம்பர் 29 வெள்ளி
இந்திய மொழிகளில் நடைபெற்றுவரும் வேதாகம மொழிபெயர்ப்பு பணிகளை தேவன்தாமே ஆசீர்வதித்திடவும், பைபிள் சொசைட்டி ஆப் இந்தியா மூலம் நடைபெற்று வரும் மொழிபெயர்ப்பு பணிகள் நிறைவடையவும், இப்பணியில் உள்ள அனைத்து ஊழியர்களுக்காக, ஊழியத் தேவைகள் சந்திக்கப்பட மன்றாடுவோம்.
ஆபத்தும் ஆக்கினையும்
தியானம்: 2019 நவம்பர் 29 வெள்ளி | வேத வாசிப்பு: யோபு 31:1-6
“நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ் செய்தாயிற்று” (மத்தேயு 5:28).
தனது மனைவி வேறோருவனுடன் தகாத உறவு வைத்திருந்ததைக் கண்ட கணவன் அவளை வெட்டிப்போட்டதாக பத்திரிகையில் ஒரு செய்தி வெளியானது. விபச்சார பாவம் மனிதனை அன்றும் இன்றும் அழித்துக்கொண்டுதான் இருக்கிறது. இது மனிதரை கொலை பாதகத்திற்குள்ளும் தள்ளிவிடுகிறது. விபச்சார பாவம் அழகிய குடும்ப வாழ்வை சீரழித்து சின்னா பின்னமாக்குகிறது. “மாறுபாடானவனுக்கு ஆபத்தும், அக்கிரமச் செய்கைக்காரருக்கு ஆக்கினையுமல்லவோ கிடைக்கும்” (யோபு 31:3).
இக்கொடிய பாவத்திலிருந்து விலகி வாழ்வதற்கேதுவாக, தன் கண்களுடன் யோபு உடன்படிக்கை செய்ததாக வாசிக்கிறோம். விபச்சார பாவம், சர்வவல்ல தேவன் நமக்குக் கிருபையாய் கொடுத்திருக்கின்ற சுதந்திரத்தையும் கேள்விக் குறியாக்கிவிடுகிறது. இந்தப் பாவத்தினிமித்தம் ஆபத்தும், அக்கிரமச் செய்கைக்கு ஆக்கினையும் நிச்சயம் வரும். இந்தப் பாவத்தைக் கர்த்தரிடம் மறைக்க முடியாது. கர்த்தர் அனைத்தையும் ஆராய்ந்து அறிகிறவர். விபச்சார பாவத்தின் கொடுமையையும் அதனால் கிடைக்கின்ற தண்டனையையும் எடுத்துக்கூறும் யோபு, இந்தப் பொல்லாத பாவத்திலிருந்து பரிசுத்த வாழ்வு வாழ்வதாக இங்கே, தன்னைப் பற்றிச் சாட்சியாகக் கூறுகிறார்.
இன்று இந்த உலகம் இந்தக் கொடிய விபச்சார பாவத்தால் அதிகமதிகமாகக் கறைப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இது, மனிதனை இலகுவில் வீழ்த்திவிட சத்துரு கொண்டுவருகின்ற தந்திர ஆயுதம் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இந்தக் காரியத்தை எவனும் திடீரென்று செய்வதில்லை. இது கண்களுக்கூடாகவும் செவிகளுக்கூடாகவும் இருதயத்தில் நுழைந்து, மனதிலே கருவுற்று, வளர்ந்து, வேர்விட்டு, இனி முடியாது என்ற கட்டத்தில் வெடிக்கிறது. ஆனாலும் நமது இந்தப் பலவீனத்தையும் தேவன் அறிவார். நமது இருதயம் கறைப்படும்போதே தேவனிடம் திரும்புவோமானால் அவர் நிச்சயம் நம்மைக் காத்து இரட்சிப்பார். “நமது கண்கள் நேராய் நோக்கட்டும். நமது கண்ணிமைகள் நமக்கு முன்னே செவ்வையாய்ப் பார்க்கக்கடவது” (நீதி 4:25). விபச்சார மயக்கத்தால் நிறைந்த, பாவத்தை விட்டோயாத கண்கள் நமக்கு வேண்டாம். விபச்சாரம் செய்யாதிருப்பாயாக, பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக (யாத்.20:4,17) என்பது கட்டளை. இவற்றை இருதய பலகையில் எழுத நம்மைத் தேவனிடம் ஒப்புக்கொடுப்போமாக.
“தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்” (சங்.139:23).
ஜெபம்: ஆண்டவரே, கண்களின் இச்சை, மாம்சத்தின் இச்சை ஆகிய இப் பாவத்திற்கு என்றும் விலகி வாழ தூயஆவியானவர் தாமே எங்களுக்கு துணை செய்யவும் உமது கற்பனைகளுக்குக் கீழ்ப்படியும் இருதயத்தைத் தந்தருளவும் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.