ஜெபக்குறிப்பு: 2025 பிப்ரவரி 8 சனி
நீங்கள் புத்தியைக் கேட்டு, ஞானமடையுங்கள்; அதை விட்டு விலகாதிருங்கள் (நீதி.8:33) பற்பல சூழ்நிலைகளாலே ஞானமற்று சிக்கிக்கொண்ட கடன்பாரத்தினால் தவிக்கும் பங்காளர்கள் கர்த்தருடைய இரக்கத்தால் அவற்றிலிருந்து மீட்கப்படவும், வேதவசனத்தின்படி நடந்து உலகம் தரக்கூடாத சமாதானமான வாழ்வை வாழ கர்த்தருடைய அனுக்கிரகத்திற்காக வேண்டுதல் செய்வோம்.
கனி தரும் வாழ்வு!
தியானம்: 2025 பிப்ரவரி 8 சனி | வேத வாசிப்பு: யோவான் 15:1-8

அவன் நீர்க்கால்களின் ஒரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் (சங்.1:3).
ஒருமுறை கல்லூரி ஆசிரியர் ஒருவர் தனது தொழிலை இராஜினாமா செய்ய எண்ணி, தன்னுடைய தீர்மானத்தைக்குறித்து கலந்து ஆலோசிக்க ஒரு கிறிஸ்தவ ஆலோசகரிடம் சென்றாராம். கல்லூரி ஆசிரியர் தான் வேலைசெய்யும் கல்லூரியில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கிக்கொண்டே போனார். இறுதியாக “ஐயா, எனக்கு விரோதமாகச் செயற்பட்டவர்களை நேசிக்க என்னிடம் பெலன் இல்லை. என் சக்தி எல்லாம் வறண்டுவிட்டது, இனியும் என்னால் அங்கு சேவை செய்யமுடியாது. நான் இராஜினாமா செய்வது தான் சரி என்று நினைக்கிறேன்” என்று சொல்லி முடித்தார்.
எல்லாவற்றையும் பொறுமையோடு கேட்டுக்கொண்டிருந்த ஆலோசகர், “நீங்கள் கடந்துவந்த அனுபவங்கள் உண்மையில் வேதனைக்குரியதுதான். ஆனாலும், உங்களுக்கு எதிராக தீமை இழைத்தவர்களை நேசிக்க முடியாதபடி உங்கள் அன்பு வற்றிவிட்டது என்று சொல்வதில் ஒரு உண்மையும் இல்லை. உங்கள் வேர் ஆழமாக வேரூன்றவில்லை என்பதுதான் உண்மை. உங்கள் வாழ்க்கை கிறிஸ்துவில் ஆழமாக வேரூன்றியிருந்தால், உங்களால் நேசிக்க முடியாதவர்களையும் உங்களுக்கு விரோதமாகத் தீங்கு இழைத்தவர்களையும் நிச்சயம் உங்களால் நேசிக்க முடியும்” என்று கூறினாராம்.
ஆம், பரிசுத்த ஆவியின் முழுமையான கனியிலே முதலாவதாகச் சொல்லப் படுவது “அன்பு” என்ற குணாதிசயமாகும் (கலா.5:22). இந்த அன்பு, “மற்றவர் என்னை நேசித்தால் நானும் அவர்களை நேசிப்பேன்” என்று சொல்லுகின்ற வெறும் மனுஷீக அன்பு அல்ல. மாறாக, எல்லாச் சூழ்நிலையிலும், எதையும் எதிர்பாராமல், எல்லோரையும் நேசிக்கத்தக்க தெய்வீக அன்பு அது! இது நம்மால் முடியாது. ஆனால், நமக்குள் வாசமாயிருக்கும் தேவஆவியானவரின் அன்பு நமக்குள் ஊற்றப்பட்டுள்ளதால், அது நிச்சயமாகவே சாத்தியமாகும்.
தேவபிள்ளையே, இவ்வுலக வாழ்க்கையின் இறுதியில், நாம் எவ்வளவு காலம் ஜீவித்தோம், எவ்வளவு செழிப்பாக வாழ்ந்தோம் என்பதல்ல; மாறாக, நாம் எந்தளவு மற்றவர்களுக்கு முன்பாக கனியுள்ள, ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தோம் என்பதே முக்கியமாகக் காணப்படும். ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு மனிதன், வாழ்க்கையின் செழிப்பான காலங்களில் மட்டுமல்ல, கஷ்டங்கள் துன்பங்கள் வியாதிகள் நிறைந்த வறட்சியின் காலங்களிலும், மற்றவர்களுக்கு முன்பாக பயனுள்ள ஒரு சாட்சியாகவும், மற்றவர்களுக்கு ஆசீர்வாதமான ஒரு மனிதனாகவும் காணப்படுவான். பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாழுவதற்கான முக்கியமான சாட்சி நமது கனிகொடுக்கும் வாழ்வே! அப்படிப்பட்ட ஒரு வாழ்வு வாழ ஆண்டவர்தாமே நமக்குக் கிருபை அளிப்பாராக.
ஜெபம்: சர்வ வல்லமையுள்ள தேவனே, ஆவியின் கனியாகிய அன்பை எங்களுக்கு தீமை செய்தவர்களிடத்திலும் நாங்கள் காண்பித்து சாட்சியின் வாழ்வினாலே கிறிஸ்துவுக்குள் அவர்களை வழிநடத்த எங்களுக்கு உதவும். ஆமென்.
வாக்குத்தத்தம்: 2025 பிப்ரவரி 7 வெள்ளி
உன்னுடைய எல்லாச் சத்துருக்களுக்கும் உன்னை நீங்கலாக்கி, இளைப்பாறவும் பண்ணினேன். (2 சாமு. 7:11)
வேதவாசிப்பு: யாத்திராகமம் 37,38 | மாலை: மத்தேயு 25:1-30
ஜெபக்குறிப்பு: 2025 பிப்ரவரி 7 வெள்ளி
சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராகிய தேவன்(2கொரி.9:8)தாமே இலங்கை சத்தியவசன ஊழியங்களின் தேவைகள் சந்திக்கப்படுவதற்கு உதவி செய்யவும், இலக்கியம் மற்றும் பத்திரிக்கை ஊழியங்கள், YouTube சேனலில் வெளியாகும் திருமறைப் பாட நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் பங்குபெற ஜெபிப்போம் .
வேதத்தில் பிரியம்!
தியானம்: 2025 பிப்ரவரி 7 வெள்ளி | வேத வாசிப்பு: சங்கீதம் 119:1-8

கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிகற மனுஷன் பாக்கியவான் (சங்கீதம் 1:2).
ஒரு மனிதன் கவிதைப் புத்தகம் ஒன்றை வாங்கி அதைப் படிக்க ஆரம்பித்தான். முதல் பக்கத்தை மாத்திரம் வாசித்துவிட்டு, அது சுவையாக ரசனையாக இல்லை என்று ஓரமாக எறிந்துவிட்டான். சில மாதங்கள் கழித்து அவன் ஒரு பெண்ணைச் சந்தித்தான். அவளோடு பேசிப்பழகினான், அவளை நேசித்தான். இறுதியில் அவளைத் திருமணம் முடிக்க விரும்பினான். அப்பொழுது அவள் கவிதை எழுதுகிறவள் என்பதை அறிந்துகொண்டான். முன்பு ஒருமுறை சுவையும் ரசனையும் அற்ற கவிதை என்று தூக்கி எறிந்த அந்தக் கவிதைகளை எழுதியது அவளே என்பதை அறிந்து, உடனே அந்தக் கவிதைப் புத்தகத்தைத் தேடி எடுத்து மீண்டும் அதை வாசிக்க ஆரம்பித்தான். இப்போது அதன் ஒவ்வொரு வரிகளும் அவனுக்குத் தேன்போல இனித்தன. ஒவ்வொரு கவிதைகளுக்குள்ளும் பொதிந்திருந்த ஆழமான அர்த்தங்களை ரசித்துப் படிக்க ஆரம்பித்தான். புத்தகத்தைக் கீழே வைக்க மனமில்லாமல் இரவும்பகலும் பலமுறை அதைத் திரும்பத் திரும்ப வாசிக்க ஆரம்பித்தானாம். எந்தப் புத்தகம் சுவையும் ரசனையும் அற்றதாக இருந்ததோ, அதுவே அவனுக்கு இனிமையான புத்தகமாக மாறியது. அதன் இரகசியம் புத்தகம் அல்ல; அதை எழுதியவரை நேசிக்க ஆரம்பித்ததே!
கர்த்தருக்குள் அருமையானவர்களே, நாம் ஒரு உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். பரிசுத்த வேதாகமம் என்பது வெறும் வார்த்தைகள் அல்ல; ஆவியானவரால் ஏவப்பட்டு எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தையாகும். இப்படியிருக்க வேதாகம ஆக்கியோனை நாம் முதலில் முழுமனதோடு நேசித்தால் மாத்திரமே நம்மால் அவரது வார்த்தையையும் நேசிக்கமுடியும். நாம் கர்த்தரை உண்மையாய் நேசிக்காதவரை அவரது வார்த்தையையும் நேசிக்கமுடியாது. இன்றைக்கு, தினசரிப் பத்திரிகை, வார மலர்கள், கதைப் புத்தகங்கள், தொலைக்காட்சித் தொடர் நாடகங்கள் என்று பொழுதுபோக்கு சாதனங்கள் பெருகிவிட்டன. அதிலும் முழு உலகமும் கையடக்கத் தொலைபேசி, வலைத்தளம் என்பவற்றுக்குள் மூழ்கியே விட்டன. இவற்றின் மத்தியில் கர்த்தருடைய வார்த்தையாகிய பரிசுத்த வேதத்தில் பிரியமாயிருந்து, அதைத் தியானிப்பது தேவனுடைய மக்களுக்கு மிகப்பெரிய சவாலாக மாறிவிட்டது.
பிரியமானவர்களே, நாம் அனைவரும் ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும். நாளுக்குநாள் அசுத்தமும் பாவமும் பெருகி, வாழ்க்கையின் உண்மையான மதிப்பீடுகள் அழிந்துவருகின்றன. இந்தச் சமுதாயத்தில் நமது வாழ்க்கையையும் நமது குடும்பத்தையும் கறைபடாமல் கர்த்தருக்குள் காத்துக்கொள்ள வேண்டுமானால், தேவனது வார்த்தைக்கு முதலிடம் கொடுக்கவும், அதன்படி வாழவும் நாம் தீர்மானிக்கவேண்டும். அப்படிப்பட்ட குடும்பங்களே உண்மையில் கர்த்தரின் பார்வையில் ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பங்களாகக் காணப்படும்.
ஜெபம்: அன்பின் கர்த்தாவே, மிகுந்த கொள்ளையுடைமையைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல, உமது வார்த்தையில் மகிழவும், வார்த்தையின்படி நடப்பதற்கும் தூயஆவியானவர் பெலன்தரும்படியாக வேண்டுதல் செய்கிறோம். ஆமென்.