ஜெபக்குறிப்பு: 2025 ஜனவரி 31 வெள்ளி
அவருடைய இரக்கங்கள் மகா பெரியது (2சாமு.24:14) இம்மாதம் முழுவதும் கர்த்தருடைய மகத்தான கிருபை நம்மைச் சூழ்ந்து எல்லா விக்கினங்களுக்கும் விலக்கி பாதுகாத்துக்கொண்டபடியால் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றிபலிகளைச் செலுத்தி, புதிய மாதத்திற்கான ஆசீர்வாதத்திற்காக வேண்டுதல் செய்வோம்.
துன்பத்திலும் துணை அவரே!
தியானம்: 2025 ஜனவரி 31 வெள்ளி | வேத வாசிப்பு: சங்.138:1-8; மத்.14:23-33

நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும், நீர் என்னை உயிர்ப்பிப்பீர் (சங்கீதம் 138:7).
நம்மில் யார்தான் துன்பத்தை வரவேற்கிறோம்? அதற்காக துயர அனுபவங்கள் நம்மை நெருங்காமல் போய்விடுமா? நாம் வாழும் சூழ்நிலைகளே எதிர்பாராத நேரத்தில், நம்மை வீழ்த்திப்போடலாம். அல்லது நாமாகவே பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து, பின்னர் மீள வழி தெரியாமல் தவிக்கலாம். நல்லது என்று நாம் நினைக்கின்ற சில காரியங்கள், நமக்கே பாதகமாக மாறிவிடலாம். நாம் நேசிப்பவர்களும் சிலசமயங்களில் நம்மைப் புரிந்துகொள்ளாமல் நம்மைத் துன்பப்படுத்தலாம். மரணத்திற்கேதுவான கடும் வியாதி, நமது அன்புக்குரியவர்களின் இழப்பு ஆகியவை நம்மைத் துன்பத்தின் உச்சிக்கே இழுத்துச் சென்றுவிடலாம். ஜெபித்தும் பதில் கிடைக்காததினால் சோர்ந்தும் போகலாம். சத்துரு சளைக்காமல் நம்மைப் பின்தொடரலாம். நாம் செத்துப்போனால் என்னவென்று எண்ணுமளவிற்கு துன்பம் பெருகிப்போகலாம்.
ஆனால், ஒரு உண்மையை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். “மேலும் நம்பிக்கைக்கு இடமில்லை எனத் தோன்றுகின்ற சமயமே, கர்த்தர், சத்துருவின் உக்கிரத்திற்கு எதிராய்த் தமது கரத்தை நீட்டி, தம்மை நம்பினோருக்கு ஜெயம் கொடுக்கும் வேளையாகும்.” இதனை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா? சமுத்திரத்தின் மேற்புறத்திலே அலைகளும் இரைச்சலும் அதிகம். ஆனால், அதன் ஆழத்தில் எத்தனை அமைதியும் அழகும் நிறைந்திருக்கிறது. இயேசுவே தமது சீஷர்களைப் படகிலேறிப் போகச் சொன்னார். அவ்வேளையில்தானே பலத்த காற்று வீசியது. இயேசு அவர்களை கைவிட்டுவிட்டாரா? நாம் நினைத்தா இந்த வாழ்க்கையை வாழ ஆரம்பித்தோம். இது தேவன் கொடுத்த ஈவாகும். நம் வாழ்க்கை படகு அமிழ்ந்துவிட ஆண்டவர் ஒருபோதும் அனுமதியார். அன்று கடலில் நடந்துவந்து சீஷரைக் காத்தவர் இன்னமும் உயிரோடேயே இருக்கிறார். அன்று அந்த மூன்று எபிரேய வாலிபரும் தாமாகவா அக்கினிச்சூளையை ஏற்றுக்கொண்டார்கள்? இல்லை, தள்ளிவிடப்பட்டார்கள். தள்ளிவிட்டவன் அந்த வெப்பத்தில் எரிந்துபோனான். ஆனால், அக்கினியில் போடப்பட்டவர்களோ உலாவிக் கொண்டிருந்தார்கள். ராஜா மெய்த்தேவனை அறிந்துகொண்டான் (தானி. 3:25).
எதிர்பாராமலோ, வலுக்கட்டாயமாகவோ துன்பத்தில் துவண்டிருக்கும் தேவ பிள்ளையே, தைரியமாயிரு. இயேசு இல்லாத சந்தோஷங்கள் நிறைந்த வாழ்வை விட, இயேசுவோடுகூட நடக்கும் கல்வாரிப்பாதை மேன்மையும் பரிசுத்தமுமுள்ளது! பாடுகளானாலும் தேவபாதுகாப்பு மிகுந்தது, அது தேவனுக்கானது. ஏனெனில் முந்தியதின் முடிவோ பரிதாபம்; பிந்தியதோ நம்மை நித்திய மகிமையிலே சேர்க்கும்படிக்கு நம்மை உயிரோடே எழுப்பிவிடுகிறது.
ஜெபம்: “பிதாவே, நான் இன்று கற்றுக்கொண்ட பாடத்திற்காக ஸ்தோத்திரம். நான் துன்பத்தின் நடுவிலே நடக்க நேர்ந்தாலும் இனிமேல் பயப்படேன். இந்த மாதம் முழுவதும் எங்களை வழிநடத்தினபடியால் உமக்கு ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறேன். ஆமென்.”
வாக்குத்தத்தம்: 2025 ஜனவரி 30 வியாழன்
என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்; (எரே. 7:23)
வேதவாசிப்பு: யாத்திராகமம் 20-21 | மாலை: மத்தேயு 21:28-46
ஜெபக்குறிப்பு: 2025 ஜனவரி 30 வியாழன்
உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, சகல பொல்லாத வழிகளுக்கும் என் கால்களை விலக்குகிறேன் (சங்.119:101) கர்த்தருடைய வார்த்தைகளை அனுதினமும் வாசித்து அதன்படி நடப்பதற்கு தீர்மானம் பண்ணின நாம் அந்த தீர்மானத்தில் முடிவுபரியந்தம் நிலைத்திருப்பதற்கு கர்த்தர் கிருபை செய்ய வேண்டுமென்று அவருடைய சமுகத்தில் நம்மைத் தாழ்த்தி ஜெபிப்போம்.
ஆத்துமாவின் ஆறுதல்!
தியானம்: 2025 ஜனவரி 30 வியாழன் | வேத வாசிப்பு: சங்.31:1-7; 2 கொரி.1:2-4

“என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது (சங்.94:19).
என் வாழ்க்கையின் ஒரு காலப்பகுதியிலே தனித்துவிடப்பட்டேனோ என ஒரு உள்ளுணர்வோடு போராட நேர்ந்தது. அடுத்த அடி எங்கே எப்பக்கம் வைப்பது என்று அறியாமல் திகைத்து நின்றேன். “நான் தடுமாறிவிழ ஏதுவாயிருக்கிறேன்; என் துக்கம் எப்பொழுதும் என் முன்பாக இருக்கிறது. அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு, என் பாவத்தினிமித்தம் நான் விசாரப்படுகிறேன்”(சங். 38:17,18) என சங்கீதக்காரனின் ஜெபத்தை ஏறெடுத்தேன். என் இதயத்தில் ஆயிரமாயிரம் கேள்விகள் அலைமோதின. இதனைப் படிக்கும் சகோதரா, நீயும் உன் உள்ளம் உடைந்த நிலையில் தத்தளிக்கிறாயா? கலக்கத்தைவிட்டு, கர்த்தரை நோக்கிப்பார். என்னைத் தாங்கிய தேவனுடைய வார்த்தையே உன் சிறுமையில் உனக்கு ஆறுதலும் மீட்பும் அருளுவதற்கு வல்லமையுள்ளதாக உன்னிடத்தில் கடந்துவரும் (சங். 119:49,50).
இன்னும் ஒருதடவை பயங்கரமான வியாதியினால் தாக்குண்டு, உள்ளத்தில் விசாரங்கள் பெருக செய்வதறியாமல் தவித்திருந்தேன். மூன்றாம் நாளிலே கர்த்தர் தாமே யோர்தான் நதியிலே தாம் செய்த மகத்தான அற்புதத்தை நினைவுபடுத்தி என்னை ஆறுதல் படுத்தினார் (யோசுவா 3:1-17). என் ஆத்துமா தேற்றப்பட்டதை உணர்ந்து அமைதியடைந்தேன். தேவன் தமது கிரியையை என்னில் ஆரம்பித்தார். தேவபிள்ளையே, மரணபோராட்டத்தில் அகப்பட்டு உன் உள்ளமும் விசாரத்தினால் நிரம்பியிருக்கிறதா? தேவன் உன்னைத் தேற்ற வல்லவராயிருக்கிறார். இப்படியே பலவித காரணங்களினால் பெருகும் விசாரங்களும், என்னவாகுமோ என்ற அங்கலாய்ப்புகளும், குடும்பம் உடைந்துவிடுமோ என்ற ஏக்கங்களும் துக்கங்களும் பலரது உள்ளத்தில் இன்று பெருகிக் காணப்படுகின்றன. நிம்மதியின்றி தவிப்பவர்கள் ஏராளம்.
பிரியமானவர்களே, பவுலடியார் நமது தேவனுக்கு அருமையான நாமம் ஒன்றைச் சூட்டியுள்ளார். “சகலவிதமான ஆறுதலின் தேவன்” இதிலே “சகல” என்ற வார்த்தையைக் கவனியுங்கள். ஆம், சகல உபத்திரவங்களிலேயும் அவரே நமக்கு ஆறுதல் செய்கிறவர் (2 கொரி.1:3,4) “அவரே நம் உபத்திரவத்தைப் பார்த்து, நமது ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிறவர்” (சங்.31:7) “அவர் நம் ஆத்துமாவைத் தேற்றுகிறவர்” (சங்.23:3). இவ்வார்த்தைகள் பொய்யல்ல. வியாகுலங்கள் பெருகும் நேரங்கள், நம்மால் எதுவும் செய்யமுடியாது என்று தவிக்கும் நேரங்கள்தான், தேவனுடைய அன்புக்கரத்தின் ஆறுதலை நாம் அதிகமாக அனுபவிக்கும் நேரமாகும். அப்போது, விசாரங்களுக்கு மேலாக வியக்கத்தக்க மகிழ்ச்சியால் நமது ஆத்துமா நிரம்புவதை நாம் அறியலாம்.
ஜெபம்: என் ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கும் பிதாவே, உம்மை மறந்த நாட்களை மன்னித்து, என்னைத் தூக்கி நிறுத்தும் ஐயா. விசாரங்கள் என் வாழ்வில் பெருகும் போது உமது ஆறுதல்கள் என்னை தேற்றுகிறபடியால் உமக்கு ஸ்தோத்திரம். ஆமென்.