ஜெபக்குறிப்பு: 2025 மார்ச் 31 திங்கள்

தேவரீர் மகா பலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் (யாத்.32:11) இம்மாதம் முழுவதும் எங்களை குறையில்லாமல் நடத்தி வந்தீர் உமக்கு ஸ்தோத்திரம். எவ்வளவேனும் தகுதியில்லாத எங்கள்மேல் நீர் காட்டின அன்புக்காகவும், உமது பரம நன்மைகளுக்காகவும் முழுஇருதயத்தோடும் துதிக்க உமதருள் தாரும். ஆமென்.

மலை உச்சிக்கு செல்!

தியானம்: 2025 மார்ச் 31 திங்கள் | வேத வாசிப்பு: யாத்.17:8-15; 1 பேதுரு 2:9-12

YouTube video

நாளைக்கு நான் மலையுச்சியில் தேவனுடைய கோலை என் கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன் என்றான் (யாத். 17:9).

அன்று இஸ்ரவேல் ஜனங்கள் கானானை நோக்கி பிரயாணம் செய்துகொண்டு வந்தபோது அமலேக்கியர் அவர்களை எதிர்த்து வந்தார்கள். யோசுவா இஸ்ரவேல் ஜனங்களுக்காக யுத்தம் பண்ணும்படி போர் வீரர்களை அழைத்துக்கொண்டு முன்னேறிச்சென்றார். அந்த வேளையில் மோசே, “நான் மலையின் உச்சியிலே நிற்பேன்” என்று சொன்னார்.

ஆம், ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய நாமும் இன்று பரம கானானை நோக்கி பிரயாணம் செய்பவர்களே, அன்றைக்கு இஸ்ரவேலருக்கும் அமலேக்கியருக்கு மிடையில் யுத்தம் நடந்ததுபோல, இன்றைக்கு நமக்கும் உலகம், மாமிசம், பிசாசு என்ற அமலேக்கியர்களுக்குமிடையில் ஒரு யுத்தம் உண்டு. இந்த மூன்றும் நம் ஆவிக்குரிய பயணத்தில் நாம் முன்னேறிச் செல்லாதபடி நம்மை எப்போதும் எதிர்த்துப்போராடுகின்றன. மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு என பரிசுத்த பவுல் இந்த யுத்தத்தைக் குறித்து கூறியுள்ளார் (எபேசியர் 6:12).

யுத்தத்தில் ஜெயத்தைப் பெற்றுக்கொள்வதற்காக மோசே மலையுச்சிக்கு ஏறிச்சென்றார். லோத்தைப்போல சமவெளியை நோக்கி அவர் செல்லவில்லை. மலையின் அடிவாரத்தில், சமவெளியில் ஜனச்சத்தம், மிருகங்களின் நடமாட்டம் நம் சிந்தனைகளை சிதறப்பண்ணக் கூடும். ஆனால், மலையின் உச்சியிலே தெய்வீக அமைதி நிலவும். பரலோக மேகங்கள் அங்கு இறங்கிக் களிப்பாக்கும்.

இதுபோலவே ஒரு விசுவாசியின் வெளியரங்கமான வாழ்க்கையில் மலையடி வாரத்தைப்போல பாடுகளும், போராட்டங்களும் இருந்தாலும், உள்ளான வாழ்க்கை மலையுச்சியைப்போல தேவனோடு உறவாடி மகிழ்கிறதாய் இருக்க வேண்டும். கிறிஸ்துவுக்கும், நமக்கும் இடையில் மிக நெருக்கமான உறவு இருக்கவேண்டும். ஆவிக்குரிய யுத்தத்தில் ஜெயத்தைப் பெற தினமும் மலையுச்சிக்கு செல்வதை நம் அனுபவமாக்கிக் கொள்ளவேண்டும். கடமைக்காகச் செய்யும் ஒருசில நிமிட நேர ஜெபத்தால் நம் போராட்டங்களில் நாம் ஜெயத்தைக் கண்டுகொள்ள முடியாது. மலையுச்சிக்கு ஏறுவது கஷ்டம்தான்; ஆனால், நாமும் இயேசுவைப்போல, மோசேயைப்போல மலையுச்சியைப்போன்ற உன்னத ஜெப ஜீவியத்தை வாஞ்சித்துச்செல்வோமாக! எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம் பண்ணுவதற்கு ஜாக்கிர தையுள்ளவர்களாயிருங்கள் (1 பேதுரு 4:7).

ஜெபம்: எங்களுக்கு ஜெயம்கொடுக்கும் தேவனே, பாடுகள் நிறைந்த இந்த வாழ்க்கை யில் மலையுச்சியைப் போன்ற எங்கள் ஜெபஜீவியத்தில் நாங்கள் உறுதிப்பட எங்களுக்குக் கிருபை தாரும். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2025 மார்ச் 30 ஞாயிறு

மகிமையும் கனமும் அவர் சமுகத்தில் இருக்கிறது; வல்லமையும் மகிழ்ச்சியும் அவர் ஸ்தலத்தில் இருக்கிறது (1நாளா.16:27) இன்றுவரை நம்மை சுகத்தோடு பாதுகாத்து வந்த தூயாதி தூயவரை துதித்து ஆராதிக்க கர்த்தர் தந்த ஆராதனை நாளுக்காக நன்றி செலுத்துவோம். இன்று ஆலயத்திற்கு வரமுடியாமல் முடங்கிப்போயுள்ள மக்களுக்காகவும் மருத்துவமனையில் உள்ளவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

தேவனுடன் ஒப்புரவாகு!

தியானம்: 2025 மார்ச் 30 ஞாயிறு | வேத வாசிப்பு: ரோமர் 5:11-12; கொலோ.1:15-22

YouTube video

“… தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம் (2 கொரி.5:20).

அவர்கள் சந்தோஷமாய் மணம்புரிந்த தம்பதிகள். மகிழ்ச்சியாக ஜீவித்து; வந்தனர். ஒருநாள் சிறிய காரியத்தினால் வாக்குவாதம் தொடங்கி, கோபமான வார்த்தைகள் எழும்ப, அந்த வாலிபன் சிறிது கடினமான வார்த்தையினால் அவர் மனைவியைப் புண்படுத்திவிட்டான். அருகிலே இருந்த ஒரு காட்டிலே அவன் வேலை செய்துவந்தான். சில மரங்களை வெட்டுவதற்காகப் புறப்பட்டுச் சென்றவன் பாதி வழியிலே, மனைவியை வருத்தப்படுத்தியதற்காக வருந்தி, திரும்ப வீட்டிற்கு வந்து அவள் மனதைப் புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக் கெஞ்சினான். இருவரும் ஒற்றுமையாகிக் கொண்டதைக் காட்டுவதற்காக அவளிடம் ஒரு புன்முறுவலைக் கேட்டான். ஆனால் அவளோ, சீக்கிரம் கோபம் தணியாததால் தன் முகத்தை அடுத்த பக்கம் திருப்பிக்கொண்டாள்.

ஆனால், அவன் போன பின்பு, அவனுடன் ஒப்புரவு ஆகாததற்காக அவள் நாள் முழுவதும் வருந்தினாள். மனம் இளகி அவனை ஏற்றுக்கொள்ளாததற்காக விசனப்பட்டுக் கொண்டேயிருந்தாள். மாலையிலோ நான்கு பேர் அவனுடைய உயிரற்ற சடலத்தை வீட்டிற்கு கொண்டுவந்தனர். அவன் மரம் வெட்டிக் கொண்டிருக்கும்போது மரம் அவன்மீது சரிய அவன் மரிக்கநேரிட்டது என்றனர். அந்த ஏழைப் பெண் காலையிலேயே தன் கணவருடன் ஒப்புரவாகாததை நினைத்து அலறினாள். ஆனால் அது மிகவும் பிந்திவிட்டது.

குடும்பத்தினருடன், அயலகத்தாருடன் நண்பர்களுடன் ஒப்புரவாகத் தருணம் வாய்க்கும் பொழுது அதைக் கைவிடுவது முட்டாள்தனமானதாக இருக்கிறது. இவற்றுக்கு மேலாக ஆண்டவருடன் ஒப்புரவாகத் தருணம் கிடைக்கும்போது அதை விட்டுவிடுவது, அலட்சியம் செய்வது மிகவும் அபாயகரமானதாகும். பாவம் செய்த மனிதன் தேவனுடன் ஒப்புரவாகுவதற்காக, தேவன் தன் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை உலகிற்கு அனுப்பினார். அவரின் சிலுவை மரணத்தின் மூலமாக நாம் பிதாவுடன் ஒப்புரவாகும் சிலாக்கியத்தைப் பெற்றுள்ளோம். எபே-2:16 பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.

தேவபிள்ளையே, நீங்கள் இவ்வுலகில் ஜீவிக்கும்போதே ஆண்டவருடன் ஒப்புரவாகுவதைத் தள்ளிப்போடாதே. என்னுடன் ஒப்புரவாகு என அவர் உன்னை அழைத்துக் கொண்டேயிருக்கிறார். அவர் அழைப்புக்கு கீழ்ப்படிய நாம் முன் வரவேண்டும். அந்த இளம் மனைவியைப் போல ஆண்டவருக்கு உன் முகத்தைத் திருப்பிவிடாதே! மரணம் திடீரென உன்னை அணுகும்; பின்பு தருணம் இல்லை. அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவி செய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள் (2 கொரி.6:2).

ஜெபம்: அன்பின் கர்த்தாவே, கிருபையாய் கிடைக்கப்பெற்ற இந்த நாட்களில் உம்மோடும் சகமனிதர்களோடும் ஒப்புரவாகிட எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.