வாக்குத்தத்தம்: 2025 ஏப்ரல் 30 புதன்
இயேசு .. அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது … என்றார். (மத். 28:18)
வேதவாசிப்பு: காலை: 1சாமுவேல் 26-28 | மாலை: லூக்கா.21:20-38
இயேசு .. அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது … என்றார். (மத். 28:18)
வேதவாசிப்பு: காலை: 1சாமுவேல் 26-28 | மாலை: லூக்கா.21:20-38
நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே (எபி.13:5) என்று வாக்குப்பண்ணின தேவன் தாம் சொல்லியபடியே இம்மாதம் முழுவதும் நம் கரங்களைப் பிடித்து வழுவாதபடி நம்மை நடத்தினார். இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி அவரைத் துதிப்போம்.
நீங்கள் சொஸ்மடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது (யாக்கோபு 5:16).
தியானம்: 2025 ஏப்ரல் 30 புதன் | வேதவாசிப்பு: 1பேதுரு 1:17-25

குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே (1 பேதுரு 1:19).
பின்விளைவுகளைக் குறித்துச் சிந்திக்காமல், சிலவேளைகளில் சில தெரிந்தெடுப்புகளை நாம் செய்துவிடுகிறோம். தான் விரும்பிய வேற்று மதத்தை சேர்ந்த பெண், அவள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள மறுத்ததால் அவளை மணப்பதை நிராகரித்துவிட்டான் ஒரு சகோதரன். அதிக ஊதியத்துடன் கூடிய உயர்பதவியில் அமர்த்தப்பட்ட ஒருவர், அங்குள்ள சீர்கேடான காரியங்களைச் சரிசெய்ய முடியாததால், பதவியைவிட்டு விலகிய சம்பவமும் உண்டு. இவ்வாறான தெரிந்தெடுப்புகள் மனதுக்கு சற்று வலியைக் கொடுத்தாலும், அதன் பிரதி பலன்கள் நிச்சயம் நம்மை வெட்கப்படுத்தாது. ஏனெனில், இவர்கள் தாங்கள் யார் என்று உணர்ந்து, அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறவர்களாக இருக்கின்றனர்.
நமது பாவங்கள் கல்வாரியில் அழிக்கப்பட்டுப்போனாலும், நாம் எங்கிருந்து கண்டெடுக்கப்பட்டோம் என்பதை மறந்துவிடக்கூடாது. முற்காலத்தில் நாம் அந்தகாரமாயிருந்தோம் (எபே.5:8); இருளின் அதிகாரத்துக்குள் இருந்தோம் (கொலோ.1:13). பாவத்துக்குள்ளாகி தேவமகிமையை இழந்து நின்றோம் (ரோமர் 3:23). முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயும் இருந்தோம் (கொலோ.1:21). மொத்தத்தில் பாவத்திற்கு அடிமைகளாயிருந்தோம். ஆனால், இப்படிப்பட்ட நம்மைப் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்குமுன் நிறுத்தும்படி தேவன் சித்தம் கொண்டாரே (கொலோ.1:21). பாவம் மன்னிக்கப்பட ஏற்ற பலிசெலுத்தப்பட வேண்டும். அடிமை மீட்கப்பட அவனுக்கான கிரயம் செலுத்தப்படவேண்டும். பாவம் செய்து, அதற்கு அடிமைப்பட்டுக் கிடந்த நம்மை மீட்பதற்கு தேவன் சித்தம் கொண்டது முதலாவது! அடுத்தது, மிருகமோ, பணமோ நம்மை மீட்பதற்கு ஏற்புடையதாக இல்லாததால், பாவத்தின் சம்பளமாகிய மரணத்தைத்தாமே ஏற்று, நம்மை மீட்பதற்கான கிரயமாக தமது ஜீவனைக் கொடுத்துத்தீர்ப்பதற்காக தேவனே மனுஷனாக வந்தாரே! இதற்கு நாம் தகுதியானவர்கள்தானா? “குற்றமற்ற மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டிருக்கிறோம்” (1 பேதுரு 1:19). இதை உணர்ந்தால் பாவம் செய்ய தூண்டப்பட்டாலும் நாம் அதற்கு இணங்க முடியாதல்லவா!
கிறிஸ்து சிந்திய இரத்தமும், நமக்கு அருளப்பட்ட மீட்பும், ஒளியின் வாழ்வும், அதன் முக்கியத்துவத்தையும் கேட்டுக்கேட்டு நமக்கு இலகுவானதாகிவிட்டது. இவற்றின் மேன்மையை சிந்திக்கத் தவறுவதால்தான் நான் யார், நமது மதிப்பு என்ன என்பதையெல்லாம் நாம் சிந்திக்கத் தவறுகிறோம். இதனால்தான் நமது தெரிந்தெடுப்புகளும் பிசகிப்போகிறது. சற்று சிந்திப்போம்.
முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்து வின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள் (எபேசியர் 2:13).
ஜெபம்: அன்பின் தேவனே, குற்றமற்ற மாசற்ற பரிசுத்த இரத்தத்தினாலே நீர் என்னை மீட்டு விலையேறப் பெற்றவனாக மாற்றியிருக்கிறீர். உமக்கு ஸ்தோத்திரம். எனது தெரிந்தெடுப்புகள் பிசாகாதிருக்க உதவி செய்தருளும். ஆமென்.
இயேசு அவர்களை நோக்கி: வாருங்கள், போஜனம் பண்ணுங்கள் என்றார். (யோவா.21:12)
வேதவாசிப்பு: காலை: 1சாமுவேல் 23-25 | மாலை: லூக்கா.21:1-19
என் ஆவி என்னில் தியங்குகிறது; என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது (சங்.143:4) தாவீது ராஜாவின் இந்த அனுபவத்தைப்போல சஞ்சலத்தோடும் ஆத்தும வியாகுலத்தோடும் பலத் தேவைகளுக்காக ஆண்டவர் சமுகத்தில் காத்திருக்கும் கர்த்தருடைய பிள்ளைகளை கர்த்தர் தேற்றி உயிர்ப்பிக்கவும், அவர்களது மன்றாட்டுகளுக்கு ஏற்ற பதில்களைத் தந்தருளவும் ஜெபிப்போம்.
தியானம்: 2025 ஏப்ரல் 29 செவ்வாய் | வேதவாசிப்பு: 1தெசலோனிக்கேயர் 3:7-13

நாங்கள் உங்களிடத்தில் வைத்திருக்கிற அன்புக்கொப்பாய், நீங்களும், மனுஷரிடத்தில் வைக்கும் அன்பிலும்… கர்த்தர் உங்களைப் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்து… (1தெச.3:12).
நமது தெரிந்தெப்பு எதுவாகவும் இருக்கலாம்; ஆனால், “அன்பை” அடிப்படையாகக்கொள்ளாத தெரிந்தெடுப்பினால் என்ன பலன்? நமக்கு மாத்திரம் பயன்படுகின்ற தெரிந்தெடுப்பானது சுயநலம் மிக்கதாகவே இருக்கும். நமது தெரிந்தெடுப்பு எல்லா மனுஷருக்கும் பயன்படக்கூடியதாக இருக்கவேண்டும் என்பதே வேதாகம சத்தியம்! இதற்கு சிறந்த மாதிரி இயேசுவானவர் மாத்திரமே!
பிதா குமாரனில் அன்பாயிருந்தார்; இயேசுவும் பிதாவில் அன்பாயிருந்தார். மாத்திரமல்ல, பிதா தம்மில் வைத்திருந்த அன்பின்படியே இயேசு நம்மிலும் அன்பு வைத்தார்! அந்த அன்புதான் அவரைக் கல்வாரி சிலுவை வரையும் கொண்டு சென்றது; பாவிகளாகிய நம்மை நீதிமான்களாகக் காண வைத்தது; பிதாவுடன் நம்மை ஒப்புரவாக்கியது, நித்திய சந்தோஷத்தை வாக்களித்தது. இந்த உன்னதமான அன்பு நமக்கு இருக்க, உலக அன்பிற்கு நாம் ஏங்குவது ஏன்? வாழ்வை மாற்றிப்போடுகிற இந்த அன்பை இயற்கைக்கும் மேலாக கிரியைசெய்யும் தேவாவியானவரால் மாத்திரமே கொடுக்கமுடியும். உலகம் அன்புசெய்யும், ஆனால், அது வாழ்வை மாற்றும் அன்பை ஒருபோதும் கொடுக்கமுடியாது. அதைக் கொடுப்பதற்கே ஆவியானவர் நம்மை அன்பினால் நிரப்பியிருக்கிறார்.
“நாங்கள் உங்களிடத்தில் வைத்திருக்கிற அன்புக்கொப்பாய்” என்கிறார் பவுல். மேலும், “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல” என்று 1 கொரி.11:1இல் பவுல் எவ்வளவு தைரியமாக எழுதியுள்ளார். இப்படியொரு சவாலை நம்மால் கொடுக்க முடியுமா? பிதாவின் சித்தத்தை முடிப்பதையே தமது தெரிவாகக்கொண்டு முடித்த இயேசு பவுலைத் தெரிந்தெடுக்க, பவுலும், தன்னைக் குறித்து ஆண்டவர் கொண்டிருந்த திட்டத்தைச் செய்து முடிப்பதையே தனது தெரிந்தெடுப்பாகக் கொண்டார். ஆண்டவருடைய அன்பு பவுலை ஆட்கொண்டிருக்காவிட்டால், தனது பெருமைகளையெல்லாம் குப்பையாக எறிந்துவிட்டு, கிறிஸ்து தன்னை நேசித்த நேசத்தை அவர் மற்றவர்களிடம் காட்டியிருப்பாரா? பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம் (1 யோவான் 4:11).
பிரியமானவர்களே, “அன்பு நமக்கிராவிட்டால்” என்னவாகும்? தேவனிடத்தில் அன்பாயிருப்பதும், அந்த அன்பின் அடிப்படையில் பிறரில் அன்பாயிருப்பதும் நமது அடிப்படைத் தெரிந்தெடுப்பாக இருக்குமானால், கோபம், பாவசிந்தை, இச்சை, கடின இதயம் ஆகிய சகலமும் அழிந்துவிடும். பிறரில் அன்பாயிருப்பது என்பது நம்மால் உண்டாவது அல்ல; அது கல்வாரியிலிருந்து நமக்குள் ஊற்றப்படுகிறது. இதுவே நமது முதல் தெரிந்தெடுப்பாக இருக்கட்டும்.
மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்தஆவியினாலே தேவஅன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது (ரோமர் 5:5).
ஜெபம்: அன்பின் தேவனே, நீர் என்னிடத்தில் அன்புகூர்ந்ததால் நான் இன்று உம்முடைய பிள்ளையாக இருக்கிறேன். உமக்கு ஸ்தோத்திரம். அதேபோல மற்றவர்களை நேசிப்பதும் அன்புகூர்வதும் எனது தெரிந்தெடுப்பாக இருக்கட்டும். ஆமென்.