ஜெபக்குறிப்பு: ஜனவரி 31 ஞாயிறு
“.. உங்கள்மேல் என் நல்வார்த்தையை நிறைவேறப்பண்ணுவேன்” (எரேமி.29:13) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே இம்மாதம் முழுவதும் நம்மோடிருந்து, நம்முடைய தேவைகளைச் சந்தித்து, தம்முடைய நல்வார்த்தைகளாலே நடத்தி வந்தபடியால் அவருக்கே எல்லா மகிமையையும் செலுத்துவோம்.
தேவனோடு தனித்திரு!
தியானம்: ஜனவரி 31 ஞாயிறு; வேத வாசிப்பு: சங்கீதம் : 42:1-11
“…யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலையிலுமிருந்து உம்மை நினைக்கிறேன். ….உமது அலைகளும் திரைகளும் எல்லாம் என்மேல் புரண்டுபோகிறது” (சங்.42:6,7).
“ஒவ்வொரு நாள் காலையிலும் எனது தாயார் வீட்டின் பின்புறத் தோட்டத்தில் தனியாக உலாவிச்செல்லும் ஒரு பாதை உண்டு. அது அவர் தேவனோடு தனித்திருக்கும் இடம். இப்போ தாயார் இறந்துவிட்டாலும் அந்தப் பாதை தேவனோடு தனித்திருப்பதை நமக்கு உணர்த்துகிறது” என்று ஒருவர் தன் தாயின் தனித்திருந்த வாழ்வைக் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.
42வது சங்கீதத்தை எழுதிய சங்கீதக்காரனுடைய மன உணர்வுகளை நாமும் அனுபவித்திருக்கிறோம். மன அழுத்தம், தனிமை, ஏக்கம் நிறைந்த ஒருவன்தான் இந்த சங்கீதக்காரன் என்பது விளங்குகிறது. ஆனால், அது எதுவும் தன்னை அழித்துவிடாதபடி, அவன் தேவனை நோக்கித் தன் பார்வையைத் திருப்பியிருந்தான் என்பதையும் நாம் கவனிக்கலாம்.
இயேசு உலகில் வாழ்ந்த காலத்தில், அவர் தனியே பிதாவோடு மாத்திரமே தனித்திருந்த வேளைகள் பல. மனிதரோடு எந்நேரமும் சம்பந்தப்பட்டிருப்பது நம்முடைய பெலனைக் குறைக்கிறது. அதை அறிந்திருந்த இயேசு, தமது ஒப்பற்ற ஊழியத்தையும், தமது மனுஷீகத்தையும் மனதில்கொண்டு, முழுவதுமாக தேவனைச் சார்ந்திருப்பதையே முதன்மையாகக் கொண்டிருந்தார். இப்படியிருக்க, சாதாரண மனிதராகிய நமது காரியம் என்ன?
இங்கே சங்கீதக்காரன் நமக்கு உணர்த்துவது என்ன? கடல் அலைகள் யாவும் ஒன்று சேர்ந்து கொந்தளித்து நுரைத்து, எழுந்து தேவனுடைய முகத்தை மறைத்தாலும், நமக்கு முன்பாக பெரிய பளிங்குப் பாறைகள் திரைபோட்டு மறைத்து நம்மைக் கதிகலங்க வைத்தாலும், இவை யாவும் தேவனுடையவைகளே என்பதை சங்கீதக்காரன் உணருகிறான். அதனால்தான், “ஆகிலும், கர்த்தர் பகற்காலத்தில் தமது கிருபையைக் கட்டளையிடுகிறார். இராக் காலத்தில் அவரைப் பாடும் பாட்டு என் வாயிலிருக்கிறது” என்கிறான்.
கிறிஸ்துவோடு தனித்திருக்கும் பழக்கத்தை நமதாக்கிக் கொள்வோம். அதுதான் இந்த உலகத்தை மேற்கொள்ளவும், தேவனோடு சஞ்சரிக்கவும் ஒரே வழி. வாழ்வில் என்ன புயல் வீசினாலும் தேவனோடு தனித்திருக்கும்போது அந்தப் புயலே நாம் தேவனை அடைகின்ற வழியாக மாறிவிடுகிறது. இந்த ஆண்டின் முதல் மாதத்தை முடிக்கின்ற நாம், இந்த முழு ஆண்டையும் ஆளவேண்டுமானால் தேவனோடு தனித்திருக்க நம்மை அர்ப்பணிப்போமாக.
“விடியற்காலத்தில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலையில் ஏறி, அங்கே மலையின் உச்சியில் காலமே என் சமுகத்தில் வந்து நில்” (யாத்திராகமம் 34:2).
சிந்தனைக்கு: 24 மணி நேரத்தில் எவ்வளவு நேரத்தை நம் தேவனோடு தனித்திருக்க ஒதுக்கியிருக்கிறோம்? வாழ்வில் தோல்வியுற்ற நேரங்களை எண்ணிப் பார்ப்போமாக.
வாக்குத்தத்தம்: ஜனவரி 30 சனி
.. அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள். (நீதி.8:17)
ஜெபக்குறிப்பு: ஜனவரி 30 சனி
“.. அவர்கள் என் மகிமையை ஜாதிகளுக்குள்ளே அறிவிப்பார்கள்” (ஏசா.66:19) இவ்வாக்குப்படியே 6 நாடுகளிலுமுள்ள வேதாகமத்திற்கு திரும்புக அனைத்து ஊழியப் பணிகளிலும் உள்ள எல்லா தடைகளையும் கர்த்தர் நீக்கி திறந்த வாசலை தந்து தேவனுடைய மகிமையை அனைத்து மக்களும் கண்டுகொள்வதற்கு ஜெபிப்போம்.
உன்னத பனி!
தியானம்: ஜனவரி 30 சனி; வேத வாசிப்பு: ஒசியா : 14:1-6
“நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போலிருப்பேன்; அவன் லீலிப் புஷ்பத்தைப்போல் மலருவான்” (ஓசியா 14:5).
அதிகாலையில் புற்கள் செடிகளைக் கவனித்திருக்கிறீர்களா! பசுமை நிறைந்த ஒருவித ஈரத்தன்மை, புல் நுனிகளில் நடனமாடும் பனித்துளி, மலரும் மொட்டுகளில் படிந்திருக்கும் நீர்த்திவலை, விடியற்காலையில் தெரிகின்ற இந்தக் கொள்ளை அழகை இரவோடிரவாகக் கொடுத்தவர் யார்?
இரவில் பெய்கின்ற பனி பூமியை ஈரமாக்கி, செழிப்புள்ளதாக்க ஒரு இயற்கை வழி. இஸ்ரவேலை மனந்திரும்பும்படி அழைத்த தேவன், அவர்கள் மனந்திரும்பினால், இயற்கை பனியினால் மூடப்பட்டுப் புதுப்பிக்கப்படுவதுபோல, தாமும் இஸ்ரவேலைப் புதுப்பிப்பதாகச் சொல்லுகிறார். தம்மைவிட்டு விலகிப்போய் தனது அழகை இழந்துநிற்கும் தமது மக்கள், இழந்துபோன அழகை மீளப் பெறவேண்டும், புதுப்பிக்கப்பட வேண்டும் என விரும்பும் கர்த்தர், அவர்களில் தாம் கொண்டிருக்கும் அன்பை விளக்கிய பல உதாரணங்களில் பனியும் ஒன்று.
அடுத்தது, “இரவில் இலைகள் அசையாதிருக்கும்பொழுது தாவரங்களின் துவாரங்கள் புத்துயிரும் புதுப்பெலனும் அளிக்கும் ஸ்நானத்தைப் பெற்றுக்கொள்ளும் வண்ணம் திறந்திருக்கின்றன” என ஒருவர் எழுதுகிறார். அதாவது, பெய்கின்ற பனி துவாரங்களில் உட்சென்று புதிய உணர்வையும் செழிப்பையும் தாவரம் பெறவேண்டுமானால், அந்த இலைகள் அசையாதிருக்க வேண்டும். கர்த்தருடைய சந்நிதானத்தில் அமர்ந்திராவிட்டால், ஆவிக்குரிய புத்துணர்வை நாம் பெறுவதும் கூடாத காரியம். ஆத்திரப்பட்டு அவசரப்பட்டு அலசடிப்பட்டால் இந்த உன்னத பனியைப் பெற்றுக்கொள்ள முடியாது. காற்றும் வெப்பமும் இருக்கும்போது பனித்துளி விழாது. காற்று நின்று, உஷ்ணம் குறைந்து, ஆகாயமும் குளிர்ந்து அமர்ந்திருக்கும்போதுதான் கண்ணுக்குத் தெரியாத நீர்த்திவலை தாவரத்துக்குக்கிட்டும் எனில், தேவனுடைய கிருபையைப் பெற்றுக் கொள்ள நமது ஆத்துமா எவ்வளவாக அமர்ந்திருக்க வேண்டும்!
அவசரமும், பெருஞ்சத்தங்களும் நிறைந்த இந்நாட்களில் அமர்ந்திருப்பது நமக்கு ஒரு சவால்தான். கவலைகள் சச்சரவுகள், வீண் முயற்சிகள் யாவும் சேர்ந்து வாழ்வையே இருளாக்கிவிடும். இந்நாட்களில் அந்த இரவிலும் அமர்ந்திருப்பது நமக்கு ஒரு சவால்தான். உன்னத பெலனால் தரிப்பிக்கப்படாவிட்டால் வாழ்வின் போராட்டங்களை ஜெயிக்க முடியாது. ஜெயம் வேண்டுமானால் இருளிலும் அமர்ந்திருக்கத்தான் வேண்டும்.
“அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார். நீங்களோ அப்படிச் செய்ய மனதராயிராமல்…” (ஏசாயா 30:15).
சிந்தனைக்கு: வீணான முயற்சிகள், கவலைகள், ஆசைகள் யாவையும் உதறித்தள்ளி, உன்னத பனி நம்மை நனைக்கும்படி நம்முடைய ஆத்துமா அமர்ந்திருக்க ஆயத்தமா?